தோழமையுடன்

Friday, October 12, 2012

அல்லாவின் தொழுகையில் நிழலாடும் அனுஷ்காவின் முகம்




‘நஜீர், எனக்கு தொழுகையில் நிண்டா அல்லாட நினைவு வரலை. அனுஷ்காட முகம் தான்டா நினைவுல வருது. ஹாரிஸ் ஜெயராஜுட பாடல் வரிகள் தான் மனசுல ஓடுது. எத்தனையாவது ரக்காயத் தொழுறேன்ங்கிறது கூட பல சமயம் குழப்பமாயிடுதுடா   என்று சொன்ன சாதிக்கிடம் “ நாளைக்கு என் வீட்டுக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரியவங்க வற்றாங்க நீயும் வா. அவர்கள் மூலம் உனக்கு அல்லாஹ் ஒரு நல்ல வழிய காட்டுவான். இன்ஷா அல்லாஹ்” என்றான்.

 வீட்டிற்கு வந்த நண்பனிடம்“சாதிக் இவர்கள் தான் என் ஷெய்கு(குரு)என அங்கிருந்த  ஹஜ்ரத்தை அறிமுகப்படுத்தி வைத்தான் நஜீர்.

 மெல்லிய புன்முறுவல் தவழ்ந்த ஹஜ்ரத்தின் முகத்தில் ஓர் இதமான அரவணைப்பு  வெளிப்பட்டது

“இங்கே உட்காருங்கள் தம்பி!” என மிகவும் கண்ணியமாக அருகில் அமர வைத்தார்கள் ஹஜ்ரத். சிறிது நேரத்தில் சுமார் இருபது பேர் அங்கே கூடிவிட ஹஜ்ரத் பயானை தொடங்கினார்கள்.

“தொழுகை என்பது எதற்காக நஜீர்?” என கேட்ட ஹஜ்ரத் தானே பதிலும் சொல்ல தொடங்கினார்கள். 

“தொழுகை என்பது இறைவனின் நினைவிற்காக. இறைவனைத் தவிர யாரும் பெருமைக்கும் உயர்வுக்கும் தகுதியில்லை என்பதை உண்மையாக உணரும் மனது தொழுகைக்கு நின்றவுடன் இறைவனல்லாத அனைத்தையும்  விட்டும் பரிசுத்தமாகிவிடுகின்றது” 

எத்தனையோ பேர் தொழுகையைப் பற்றி பேச கேட்டவன் தான் சாதிக். ஆனால் இந்த ஹஜ்ரத் சொல்ல சொல்ல அந்த  வார்த்தைகள் உள் நுழைந்து மனதை உலுக்கியது.

 ‘ஹஜ்ரத், எனக்கு தொழுகையில் நின்டா அல்லாட நினைவு வரலை. அனுஷ்காட முகம் தான் நினைவுல வருது. ஹாரிஸ் ஜெயராஜுட பாடல் வரிகள் தான் மனசுல ஓடுது. எத்தனையாவது ரக்காயத் தொழுறேன்ங்கிறது கூட பல சமயம் குழப்பமாயிடுது  ஹஜ்ரத்  என்று சத்தம் போட்டு கத்த வேண்டும் போலிருந்தது சாதிக்கு. மிகவும் சிரமத்துடன் அடக்கிக் கொண்டான்.

“காலையில எழுந்ததுமே இறைவனுடய நினைவுடன் நம்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்காகத் தான் பஜ்ர் (அதிகாலை) தொழுகையையே கடமையாக்கியிருக்கான் அல்லாஹ். தொழும் போது குறைந்த பட்சம் நாம் என்ன ஓதுறோங்கிறதுலயாவது கவனம் இருக்கணும். உதாரணமா நான் இப்ப ‘அல்ஹம்துலில்லாஹின்னு’ சொல்றேன். இப்ப நான் ‘சுப்ஹான ரப்பில் அளீம்’ னு சொல்றேன் என்றாவது கவனம் செலுத்தனும். தொழுகையில் ஓதக் கூடியதன் அர்த்தம் தெரிந்து கொள்வது இன்னும் சிறப்பு. இன்னும் யாரை வணங்குறமோ அவனது உயர்ந்த அந்தஸ்தையும், அவன் நெருக்கத்தையும் உணரும் இறைஞானம் ஒரு மகத்தான பாக்கியம்.

அடுத்ததா, தொழுகைக்கு பிறகும் இறைவனை நினைவு கூறும் திக்ரு செய்வதைக் கொண்டு அந்த நாள் முழுவதும் நமக்கு எல்லா நிலைகளிலும் இறை சிந்தனை தொடரும். அத விட்டுட்டு எழுந்தவுடனே நியூஸ் பேப்பர், டி.வி. ன்னு ஆரம்பிசுட்டா நாள் முழுவதும் அந்த நினைவு தான் நம்மை துரத்தும்.” என்று சிறிது இடைவெளி விட்ட ஹஜ்ரத் “ சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்” என சொல்லி முடித்தார்கள்.

எல்லோருக்கும் சுவையான தேநீர் பறிமாறப்பட்டது.

“அல்லாஹ்...அல்லாஹ்  என்று நீங்கள் தினமும்  இறைவனை ஞாபகம் (திக்ர்) செய்கிறீர்கள். எவ்வளவு நேரம் உங்களால் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மன ஒருமையுடன் நிலைத்து இருக்க முடிகிறது என்பதை நினைத்து பாருங்கள். இதெல்லாம் சாத்தியமில்லை என உடனே முடிவுக்கு வந்து விட வேண்டாம். உங்களிடம் ஒரு ஆயிரம் திர்ஹம் நோட்டு கட்டு தரப்படுகின்றது. அதை நீங்கள் எண்ணி பார்க்கின்றீர்கள். எண்ணி முடிக்கும் வரை அதில் கவனம் இருக்கிறதா இல்லையா? ஆகவே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.” இப்படி பல்வேறு உவமைகளுடன் தொடர்ந்த ஹஜ்ரத்தின் பேச்சு ரொம்ப பிராக்டிகலாக இருந்தது. 

சாதிக்குக்கு மனதில் ஒரு தெளிவு கிடைத்தது போல இருந்தது. அதிலும் குறிப்பாக “சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்” என்ற வாசகம். IPodல் இருக்கும் சினிமா பாடல்களை சதா காதில் மாட்டிக் கொண்டு அலைவதை உடனே நிறுத்த வேண்டும் என முடிவு செய்தான்.

பயான் (சொற்பொழிவு) முடிந்தவுடன் வீட்டிற்கு வந்தவன் மனைவி ரஹீமாவிடம் ஒன்று விடாமல் சொல்லிக் காண்பித்தான். அனுஷ்காவின் விசயத்தை தவிர. 

எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த ரஹீமா, “ஏங்க இந்த நஜீர்கூட நீங்க அளவோட தொடர்பு வச்சுகங்க. ரொம்ப ஒட்டுனீங்ன்னா எதுக்கெடுத்தாலும் அல்லாஹ். அல்லாஹ்ன்னு உங்களையும் அல்லாஹ் பயித்தியமா ஆக்கிடுவாரு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என அவள் ஒரு மினி பயான் செய்தாள். ரஹீமா சொல்வதும் சரியாகவே பட்டது சாதிக்குக்கு. 

“ஏங்க சிட்டி சென்டர்ல ஓகேஓகே ஓடுது இன்னைக்கு போலாமா?” என்றாள்.

ஒகே.ஓகேன்னா இங்கிலீஸ் படமா? என்றவனிடம்.

“ஒரு கல் ஒரு கண்ணாடி” என விளக்கமளித்தாள் ரஹீமா.

“ஓகே ஓகே” ன்னு சிரித்தான் சாதிக்.

அடுத்த நாள் முதல் நஜீரிடமிருந்து வந்த போனை தவிர்த்து விட்டான். இந்த ஒரு வாரத்தில் பத்து முறையாவது நஜீரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்திருக்கும். அனைத்தையும் முழுமையாக தவிர்த்து விட்டான்.

நஜீரும் விட்டு விடாமல் வேறொரு நம்பரிலிருந்து போன் செய்யவே எடுத்து அவனிடம் வகையாக மாட்டிக் கொண்டான்.

“ஏன்டா போனை எடுக்க மாட்டேங்குற” என்றவனிடம், “நான் அபிஸியல் டிரிப்ல ஒரு வாரம் பஹ்ரைன் போயிருந்தேன் நஜீர்” என சமாளித்து விட்டான்.

“ ஹஜ்ரத் நேற்று தான் ஊருக்கு புறப்பட்டார்கள். உன்னைய ரொம்ப விசாரித்தார்கள். ஆமா தொழுகையில உன்னட ஹால் (மனநிலை)  மாறி இருக்கா” என்ற நஜீரிடம்.

“ ஒரு வாரமா அனுஷ்காட நெனப்பு ஒரு தடவை கூட வரலை” என்றான்.

“அல்ஹம்துலில்லாஹ்!” என நஜீர் மகிழ்வை தெரிவித்தான்.

‘இரண்டு நாளா அனுஷ்காவுக்கு பதில் ஹன்ஸிகாவின்  முகம் தான் மனதில் வருகிறது.’ என்பதை அப்பாவி நஜீருக்கு சொல்ல சாதிக்கிற்கு  ஏனோ மனமில்லை. 

நன்றி: 

அலுவலக உணவு இடைவேளையின் போது அந்த வாரத்தில் சார்ஜாவில் ஓடும் தமிழ்படங்களைப் பற்றி சுருக்கமாக கமெண்ட் அடிக்கும் சீஃப் அக்கௌண்டண்ட் கூடங்குளம் சுபாஷுக்கு.




உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

8 comments:

நிஷா மன்சூர் said...

சினிமா....தமிழ் மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்த ஒரு ஊடகம்.....,அதனை இஸ்லாமியர் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே மனக்குறை...

தொழுகையில் பிறசிந்தனை...., உங்களிடம் ஒரு ஆயிரம் திர்ஹம் நோட்டு கட்டு தரப்படுகின்றது. அதை நீங்கள் எண்ணி பார்க்கின்றீர்கள். எண்ணி முடிக்கும் வரை அதில் கவனம் இருக்கிறதா இல்லையா? ஆகவே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.” ////

அழகான விளக்கம்

shuaib said...

நாம் தொழுவும்போது அவ்வளவு மோசமாகவா? தொழுகிறோம் என்று சிந்தனை குதிரையை கண்ட்ரோல் பண்ண வைத்துவிட்டீர்கள்,இறைவனுக்கே எல்லா புகழும்! சிறுகதையிலும் சிறிய உளி பாராங்கல்லை உடைப்பதுபோல்
இருக்கிறது. தொடரட்டும்.....
நாகூர் சுஐபு

Unknown said...

முன்னிலை வாய்ந்த தொழுகை பற்றி நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகின்றர்கள், "தொழுகை முஃமினானவர்களுக்கு மிஃராஜாக இருக்கின்றது," மிஃராஜ் என்பது என்னவெனில் ஸாலிக் தொழுகையில் நின்ற நிலையில் அவரின் மனம் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் நிலைத்து விடுவதாகும், எனவே தொழுகையில் முன்னிலை வளருகின்றது, ஸாலிக்கிற்கு முன்னேற்றம் கிடைக்கின்றது, ஸாலிக் அல்லாதவர்களின் தொழுகையில் என்ன முன்னேற்றம் கிடைக்கும்? அவர்கள் வழக்கமான ஒரு அமலை நிறைவேற்றுகின்றர்கள். அதனால் நன்மை கிடைக்கும் என ஆதரவு வைக்கலாம், மன ஒர்மையற்ற தொழுகையில் முன்னேற்றம் எங்கே? அல்லாஹ்வின் சன்னிதானம் எங்கே? ஏற்றுக் கொள்வது எங்கே? வழக்கமான தொழுகைக்கும் ஆஷிக்கின் தொழுகைக்கும் வானம் பூமிக்குள்ள வித்தியாசம் உண்டு. மறதியுடையவனும் ஒர் அடியான் தானா? அவனது தொழுகை குறைவுடையது, ஈமான் குறைவுடையது,
ஸாலிக் எப்போதும் அல்லாஹ்வை மறந்தவராய் இருப்பதில்லை; அவரின் தொழுகை நிறைவுடையது; வணக்கம் நிறைவானது; ஈமான் நிறைவுடையது; மறந்தவன் உலகம் மற்றும் நஃப்ஸில் சிக்குண்டவனாய் இருக்கின்றான், ஸாலிக் அல்லாஹ்வின் பிரியத்தில் சிக்கியவர்களாய் இருக்கின்றார்கள். எப்போதும் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் இருக்கின்றார்கள். எனவே ஸுலூக் எனும் வழியில் முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். அடியானுக்கு அல்லாஹ்வின் நிரந்தர முன்னிலை கிடைக்கவும், அல்லாஹு தஆலாவின் சன்னிதானத்தில் நெருக்கம் கிடைக்கவும் முயற்சி அவசியம்.

HM Rashid said...

அல்ஹம்துல்லில்லாஹ் !!!//உங்களிடம் ஒரு ஆயிரம் திர்ஹம் நோட்டு கட்டு தரப்படுகின்றது. அதை நீங்கள் எண்ணி பார்க்கின்றீர்கள். எண்ணி முடிக்கும் வரை அதில் கவனம் இருக்கிறதா இல்லையா? //என்ன ஒரு லாஜிக்கான கேள்வி!!!ஆனாலும் வணக்கத்தின்போது 'தொழுகை,தொழுபவன் பார்வைக்கும் ,உணர்வுக்கும்(?) வருகிறது....தொழப்படுபவனின் சிந்தனையோ ,உணர்வோ இல்லாமல்!!!பணத்தைபற்றிய அறிவும் தெளிவும் உள்ளது...சிந்தனை சிதறாதுதான்!!!ஆனால் தொழப்படுபவனை(இறைவனைப்)பற்றி அறிவும் தெளிவும் வேண்டும் என்பதே உங்களுடைய இடுகையிலிருந்து தெளிவாகிறது மேலும் சிந்தனையும் சிதறாது என்பதும்!!!

HM Rashid said...

எல்லாவற்றிற்கும் மேலாக சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும் என்று சொன்னார்களே அதில்தான் நம்மில் பெரும்பாலோர் அகப்பட்டுள்ளோம்!!!

M.Abdul Khadar said...

"இரண்டு நாளா அனுஷ்காவுக்குப் பதில்...." என்ற வரிகள் தான் என்னிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Anonymous said...

"புது மாப்பிள்ளையின் சிந்தனை அவன் எங்கு இருந்தாலும் மனைவியின் மீது தான் இருக்கும் அவன் தான் எந்த அலுவலுக்காக வந்தானோ அதை விரைவில் முடித்து விட்டு மனைவியின் முகத்தை பார்ப்பது தான் அவனுடைய நோக்கமாக இருக்கும் அவ்வாறு அவன் மத்த அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் பொழுது கூட மனைவியின் நினைவு அவனை விட்டு விலகிவிடாது ,இது "இஷ்கே மஜாசி" என்று சொல்ல கூடிய இவ்வுலகத்தின் சிற்றின்பம் .

அல்லாஹ்வை நேசிக்கும் ஒரு உண்மை அடியான் அவன் தன் ஷெய்கிடம் அடைந்த உயர்ந்த ஞானத்தின் விளைவாக சிருஷ்டிகளினுடன் அல்லாஹ் எவ்வாறு தொடர்பில் இருக்கின்றான் ,இருந்து நம்முடைய சகலகோடி தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்கின்றான் என்ற அந்த உணர்வு வந்தவுடன் அந்த அடியான் தன்னுடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் இந்த சிருஷ்டிகளோடு உறவாடும் பொழுது அல்லாஹ்வையே நோக்குகின்றான் அவ்வாறு அவன் நோக்கிய பொழுதிலும் அவனுக்கு அதைவிட நெருக்கமாக அல்லாஹ்விடம் உறவாட ஆசை வரும் அவ்வாறு ஆசை உள்ள உண்மை அடியார்கள் அந்த பாங்கின் ஓசை எப்பொழுது வரும் என்று அவனுடைய சந்திப்பிற்கு காத்திருப்பார்கள் ,எனவே சிருஷ்டிகளுடன் எவ்வாறு அல்லாஹ் தொடர்பு கொண்டு நம் தேவையை பூர்த்தி செய்கிறான் என்ற உணர்வு வருவதோடு மட்டும் அல்லாமல் அது நம் மனதில் நிலைத்து அவன் மீது "இஷ்கே ஹகீகி " என்னும் இறை காதல் வந்தால் தான் நம்முடைய தொழுகை சரியாகும் "

" தரீக்கத் கா தூலா"(தரீக்கத்தின் புது மாப்பிள்ளை ) என்று என்னுடைய தாதா சர்க்கார் நூரி நாயகம்(ர ) என்னுடைய ஷெய்கு நாகம் பைஜி ஷா நூரி (ர ) அவர்கள் அல்லாஹ்வின் மீது கொண்டுள்ள அதீத பிரியத்திற்கும் ,அவர்களுடைய இடைவிடாத இறை காதலுக்கும்,அதை தவிர வேறு எந்த சிந்தனையும் அற்ற நிலையில் இருந்ததற்கு சான்றாக அவர்களை இவ்வாறு பாராட்டி உள்ளார்கள்.அத்தகைய இடைவிடாத இறை தேட்டமுள்ள தரீகதின் புது மாப்பிளையாக நம் அனைவரையும் கருணை கடலான அல்லாஹ் ,அவனுடைய ஹபீப் நாயகம் அண்ணல் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் பொருட்டால் நம்மை ஆக்கி அருள்வானாக (ஆமீன் )

-முஹம்மத் யாஸீன் பைஜி

புல்லாங்குழல் said...

ஆமீன்!.

யாசீன் ஃபைஜி உங்கள் நினைவூட்டலுக்கு மிகவும் நன்றி!

ஜஸாக்கல்லாஹு ஹைர் ஃபித்தாரைன்.