தோழமையுடன்

Thursday, April 26, 2012

நாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்


முதலில் 'இன்று நாகூர் கந்தூரி எனும் ஏகத்துவ கொடியேற்றம்' எனும் இந்த இடுகையை மீண்டும் ஒரு முறை படித்து விடுங்கள்.

படித்து விட்டீர்களா? நன்றி! தொடருங்கள்..

பாரசீக நாட்டில் வாழ்ந்த ஒரு சூஃபிக்கு  பேரழகியான ஒரு மகள் இருந்தாள். எத்தனையோ செல்வந்தர்கள் அந்த அழகியை மணமுடிக்க போட்டியிட்டனர். ஆனால் அந்த சூஃபியோ ஒரு எளிய வணக்கவாளியை அழைத்து தன் மகளுக்கு மணமுடித்தார். தந்தையின் விருப்பத்திற்கு தலை சாய்த்து அந்த ஏழையின் கைப்பிடித்த அப்பெண் தன் கணவனின் குடிலுக்கு அப்போதே புறப்பட்டு சென்றார். இரவானதும் அந்த ஏழை மணமகன் தான் வைத்திருந்த ரொட்டியை தனக்கும் தன் மனைவிக்கும் பங்கு போட ஆரம்பித்தார் அந்த பெண்ணோ அழத் துவங்கினாள். 

மணமகன் மனம் வருந்தி “ பெண்ணே உன் தந்தை செய்தது தவறு. அதற்கு நான் உடன்பட்டது அதை விட பெரிய தவறு. ஏதுமில்லாத ஏழையான எனக்கு இந்த ஆசையெல்லாம் வரக் கூடாது. என்னை மன்னித்து விடு! உனக்கு மணவிலக்கு தரச் சித்தமாயிருக்கின்றேன்.  உன்னை மணக்க போட்டியிடும் எத்தனையோ செல்வந்தர்களில் நீ விரும்பியவரை மணந்து வாழலாம்” என்றார். அந்த பெண்மணி மேலும் அழத்துவங்கினார்.  காரணம் புரியாமல் மன்றாடி கேட்ட போது அவள் , “அன்பரே இந்த ரொட்டித் துண்டு உமக்கு ஏது?” என கேட்டாள். அந்த எளியமனிதரோ “ பெண்ணே இந்த ரொட்டி துண்டு காலையில் எனக்கு கிடைத்தது. பகலில் பாதியை உண்டு விட்டு இரவுத் தேவைப்படும் என்பதற்காக பாதியை வைத்திருந்தேன் என்றார். அவரை ஏறிட்டு பார்த்த மனைவி “இதற்காகத் தான் அழுகின்றேன். ஏனெனில் பகலில் உணவழித்த இறைவன் இரவுக்கும் கொடுக்க போதுமானவன் என்ற தவக்கலில் (இறையாதரவில் ) பகலில் உமக்குப் போக எஞ்சியதை தேவையுடையோருக்கு கொடுக்காமல் சேமிப்பில் இறங்கியிருக்கின்றீரே! இப்படிப்பட்ட உம்மை 'தக்வாதாரி' என்று எண்ணி என் தந்தை என்னை மணமுடித்து கொடுத்தாரே! என்று தான் அழுகின்றேன்” என்றதும் மணமகன் அதிர்ந்து போனார்.

என்ன இப்படியெல்லாம் கூடவா தவக்கல் வைக்க முடியும் என்று தடுமாறுகிறது நம் மனம்.

மிருகங்களுக்கு இருக்கும் பக்குவம் கூட நமக்கில்லையே என பொட்டில் அறையும்  இந்த திருவசனத்தை பாருங்கள். 

(இந்த உலகில்) உயிர் வாழும் பிராணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச்(ரிஜ்கை) சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்(ரிஜ்க் அளிக்கின்றான்). அவனோ செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(29:60) 

மேலே கூறிய படிப்பினையூட்டும் சம்பவம் ‘பாதுஷா நாயகம்’ என புகழப்படும் சங்கைமிகும் ஷாஹுல் ஹமீது வலியுல்லாவின் உபதேசங்களில் காணக்கிடைத்தது.

 “அல்லாஹ்வின் மீது அன்பு கொள்வது என்பதே மார்க்கத்தின் சாரமாகவும், மனித வாழ்க்கையின் லட்சியமாகவும் இருக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் மீது அன்பு கொள்வதென்பது அவ்வளவு சாத்தியமானதா? அவனோ அரூபி! அரூபியான அவனை நேசிப்பது எப்படி? அன்பர்களே நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நமக்கு தெரியாத ஒன்றின் மீது நம் அனுபவத்தில் அறிந்திராத ஒன்றின் மீது அன்பு கொள்வதென்பது எப்படி சாத்தியமாகும். அல்லாஹ்வை பற்றிய அறிவு நமக்கிருந்தாலன்றி அவன் மீது நாம் கொள்கின்ற நேசம் முழுமையடையாது என்பதால் தான் எம் பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மார்க்கத்தில் முதன்மையானது இறைஞானம் (அவ்வலு தீனி மஃரிஃபதில்லாஹ்) என்று தெளிவுற கூறியுள்ளார்கள்” என்பதும் அவர்களின் உபதேசங்களில் ஒரு பகுதி.

 “ஹே நல்லறிவாளர்களே! உண்மையையும், பொய்யையும் பிறித்தறிவிக்கும் பொருட்டு அல்லாஹ் என்னை ஹிந்துஸ்தானத்தில் தோன்றச் செய்துள்ளான்” என கூறும் மகானவர்களின் வாசலில் நின்று குணங்குடி மஸ்தான் ஸாஹிப் வலியுல்லா பாடிய பின் வரும் பாடல் வரிகள் மிகவும் பிரசித்தமானது:

 திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி!

சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி!

ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!

அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அனைந்தருகில் நிற்பர் கோடி!

மக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி!

வசனித்து கொழுவீற்றிருக்குமும்
மகிமை சொல வாயுமுண்டோ

தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே!

தயவு வைத்தெமையாளும் சற்குணம் குடிகொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே! 

நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் பெயர் கூட தெரியாத நிலையில் நானூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு சரித்திர நாயகர் மறைந்தும் மறையா மங்கா புகழுடன், கொடி பறக்கும் கோட்டையுடன், தென்னகத்து திரு விளக்காய் ஒளி வீசுகின்றார்கள்.

இது அவர்களின் கந்தூரி நாட்கள். முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்து சகோதரர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு அவர்களை எங்கள் ‘நாகூர் ஆண்டவர்’ என அழைத்து கொண்டாடும் நாட்கள் இது.


இன்றைய நாளில் அடக்கஸ்தலங்களை ஜியாரத் செய்வது நபிவழியாக (சுன்னத், முஸ்தஹபான ஒன்றாக) இருக்க அதை இணைவைப்பாக (ஷிர்க்காக) விளங்கும்விலக்கும் போக்கு ஒரு மோசமான பேஷனாகி விட்டது.

நமது இந்தியா போன்ற பன்முக கலாச்சார சூழலில் கந்தூரி நாட்களை மனித நேயமும்இறைநேசமும் மணக்கும் இஸ்லாமிய கலாச்சார விழாவாக நடத்துவது எப்படி  என்பது அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய ஒன்று.

அதே நேரத்தில் அந்த விழாவினையொட்டி நடக்கும் நிகழ்வுகளில் இறைஞானமில்லா அறியாமையால் நிகழும் அனாச்சாரங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதும் உண்மை.


எங்கள் சிஸ்தியுல் காதிரி ஞானபாட்டையின் ஷெய்குமார்கள் கந்தூரி நாட்களில் நாகூரில் வந்து அதபுடன் தங்கி இருந்து பாதுஷா நாயகத்தின் அருளுடன் ஏகத்துவ இறைஞான பாடங்கள் நடத்தி, இறைப்புகழ் பாடுவது வழக்கம். அந்த நாட்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற கிருபையான நாட்கள். 

நாகூரில் எங்கள் ஷெய்கு நாயகம் ஃபைஜிஷாஹ்(ரஹ்) அவர்கள் பாதுஷா நாயகத்தின் பேரர் பாக்கர் சாஹிப் ஆலிம் (ரஹ்) (வலது) அவர்களுடன் நேசத்துடன் உரையாடிய காட்சி.

“ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!

அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அனைந்தருகில் நிற்பர் கோடி!”

எனும் பாடல் வரிகளுக்கேற்ப இன்னும் எத்தனை எத்தனையோ ஆன்மீக பெரியார்கள் இன்றைய தேதியில் அங்கே கூடியிருப்பார்கள் என்பது உறுதி!.


00000
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் தமது மகனுக்கு “மகனே! அவ்லியாக்கள்பால் ஒரு போதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே!” என உபதேசித்திருக்கிறார்கள் ஆனால் இன்றைய நாளின் பார்த்தால் மதிக்கப்பட வேண்டிய மார்க்க பெரியார்களின், வலிமார்களின் கண்ணியம் மனதை விட்டு நீங்கியவர்களாக நம் இளைஞர்களில் ஒரு சிலர் வலம் வருகிறார்கள்.

ஏன் ஹன்பல்(ரஹ்) அப்படி சொன்னார்கள். அவ்லியாக்களை வெறுப்பது 'இறைவனோடு தொடுக்கும் போர்' என்பதுடன் அதனால் விளையும் பெரிய ஆபத்து என்ன என்பதற்கு ஷைத்தானின் சரித்திரத்தில் நமக்கு விளக்கம் இருக்கிறது.

ஷைத்தான் ஆரம்பகாலத்தில் இறைவனுக்கு நெருக்கமானவனாகவே இருந்தான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இறைவனை வணங்கிய வணக்கசாலி அவன் என்றும் வானவர்களுக்கே பாடம் போதித்த அறிஞன் எனவும் சொல்லப்படுகின்றது.

அப்படிப்பட்டவன் இறைவனின் வெறுப்புக்கு எப்படி ஆளானான்?
அவன் மது அறுந்தவில்லை, விபச்சாரம் செய்யவில்லை, அனாதைகளின் சொத்தை அபகரிக்கவில்லை, திருடவில்லை, பொய், புறம் பேசவில்லை பின் என்ன தான் செய்தான்?

ஆதம் நபியை கண்ணியபடுத்துவதற்காக வேண்டி அவர்களுக்கு சஜ்தா செய்ய இறைவன் சொன்னதற்கு மாறு செய்தான்

கண்ணியப்படுத்த வேண்டியவர்களை கண்ணியப்படுத்தாதது தான் அவனை ஷைத்தானாக்கியது

மனிதர்களுக்கு சஜ்தா செய்வது இன்று மார்க்கத்தில் தடை செய்யப்பட்டு விட்டாலும் பெற்றோர், பெரியோர்களுக்கு மரியாதை செய்வது தொடர்கிறது.

ஆகவே தோழர்களே நீங்கள் அவுலியாக்களை நேசித்து கொண்டாடினால் அது ஒரு பாக்கியம். அவர்களைப் பற்றிய விளக்கம் இல்லையென்றால் அவர்களுக்கு எதிராக நாவசைக்காமல் அதபுடன் ஒதுங்கி இருப்பது நலம்.

000

வலிமார்களின் உறைவிடத்தில் பெறும்  நன்மையை விளங்க இந்த இறைவசனங்களை சிந்தித்து பாருங்கள்.

அவருடைய (மரியம்(அலை) அவர்களுடைய) இறைவன் அவர் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவர் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவரிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவர்(மரியம் அம்மா பதில்) கூறினார். (3:37)


هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்." (3:38)

மேற் கூறிய திருவசனங்களை கவனியுங்கள். மரியம் (அலை) அவர்கள் ஒரு நபியின் தாயாராக இருந்தாலும் அவர்கள் நபியல்ல. இறையருள் பெற்ற இறைநேசச் செல்வி – வலிய்யா ஆவார். ஜகரியா (அலை) அவர்களோ நபியாவார்கள், இருந்தும் மரியமவர்களிடத்தில் அல்லாஹ்வின் அருள் இறங்குவதை உணர்ந்த மாத்திரத்தில்  அந்த இடத்தில் இறைவனினிடம் தன் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள்.

வலிமார்களின் உறைவிடத்தில் இறைவனிடம் அருள் வேண்டுவதற்கு இந்த இறைவசனத்தை ஆதாரமாக கூறுகின்றார்கள் ஞானவான்கள்.

பாதுஷா நாயகம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியத்தின் பொருட்டால் சம்பூரணமான ஈமானுடன்  சீமானாக  நம்மை வாழச்செய்வானாக! ஆமீன்!









13 comments:

love you all_af said...

so nice article.....very understanding

Anonymous said...

The pictures are not loading. Please upload again.

Shafiyath Rani said...

தகுந்த நேரத்தில் வந்த தரமான விளக்கங்கள்!
மாஷா அல்லாஹ்!

Shafiyath Rani said...

Thakuntha kaalathil vantha Tharamaana vilakkam!

Hasan Bilali said...

Dear Moula,

Very nice article!! But how can we eliminate the things which are not recommended during Kandoori?

Anonymous said...

Assalamu alaikkum(warah),

Moula,Can you please describe Gunangudi appa Words ,it would help us to understand well...

Anonymous said...

Very nice article.write more articles like this.


-s.ahmed

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

உங்கள் கட்டுரை படித்தேன் அதில் எனக்கு சில மாறுப்பட்ட கருத்துள்ளது.நீங்கள் இறை நேசர்களை நேசிக்க சொல்வதுடன் அவர்களை பின் பட்டர வேண்டும் என்கின்ற தொனியில் கட்டுரை எழுதியுள்ளதுப் போல எனக்கு தோன்றியுள்ளது சகோ.நபி(ஸல்)அவர்கள் கொண்டு வந்த மார்கத்தை பின்பற்றுவதர்க்கே நாம் அனுப்பப்பட்டுள்ளோம்.அதாவது நபி(ஸல்)அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரம் இது மட்டுமே ஹதீஸ்,இதை மட்டும் தான் ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும்,மாறாக எந்த இறை நேசர்களின் சொல்லையும் பின்பற்ற தேவை இல்லை மேலும் அதை பின்பற்றவும் கூடாது.

//ஹன்பல்(ரஹ்) அப்படி சொன்னார்கள். அவ்லியாக்களை வெறுப்பது 'இறைவனோடு தொடுக்கும் போர்'//இந்த கருத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்மந்தம் சகோ. எஅனக்கு விளக்கவும் ஏனென்றால் இதில் நபியவர்களின் சொல்,செயல்,அங்கீகாரம் இவை எதுவும் இல்லை அதனால் இந்த கருத்திற்கு முஸ்லிம்கள் மதிப்பு தர எந்த அவசியமும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.சுருக்கமாக சொல்வதேன்றால்.சிறந்தவர்கள் நாமா அல்லது இறைநேச அவ்லியாக்களா என்றால் நிச்சயம் அவர்கள் தான்(அவ்லியா)ஆனால் அவ்லியாவா அல்லது நபி(ஸல்)அவர்களா என்றால் நிச்சயம் நபி ஸல் அவர்கள் தான்.ஆக நாம் மதிப்பு குடுத்து கண்ணியபடுத்தவேண்டியது நபி(ஸல்)அவர்களின் சொற்களை தான் மற்றவர்களின் சொற்களை அல்ல.

//இன்றைய நாளில் அடக்கஸ்தலங்களை ஜியாரத் செய்வது நபிவழியாக (சுன்னத்,முஸ்தஹபான ஒன்றாக) இருக்க அதை இணைவைப்பாக (ஷிர்க்காக)விளங்கும் – விலக்கும் போக்கு ஒரு மோசமான பேஷனாகி விட்டது.//கப்ருகளின் மீது கட்டிடம் எழுப்பக்கூடாது,கப்ருக்களை பூசக்கூடாது,அதை வணக்கஸ்தலம் ஆக்கக்கூடாது என்பது போன்ற நபிமொழிகளை தூக்கி எறிந்துவிட்டு அனாச்சாரங்களும் மார்கத்திற்கு சம்மந்தமில்லாத செயல்களை செய்யும் ஒரு இடத்தை முஸ்லிமான ஒருவன் அங்கு நடக்கும் பாவ செயல்களை தம் கரத்தாலோ,நாவிநாளோ,குறைந்தப்பட்சம் தன மனதாலோ வெறுத்து ஒதுக்காமல் அங்கு கொடியேற்றும் செயலுக்கு முட்டு கொடுத்து.எந்த பாவ செயல்களையும் தடுக்காமல் ஜியாரத்திற்கு மட்டும் செல்வேன் என்று சொல்வது எந்தவகையில் முஸ்லிமான நமக்கு நியாயம்.அங்கு நடக்கும் அனசாரங்களுக்கும் அங்கு அடங்கியுள்ள அவ்ளியாகளுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலாம்.ஊரில் உலகில் எவ்வளோவோ கப்ருகள் இருந்தும் அங்கு சென்றால் தான் ஈமான் வழுப்பேரும் என்பது சரியான கருத்தாக எனக்கு தென்படவில்லை.நன்மையை ஏவி தீமையை தடுக்க உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும் என்று அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.அங்கு நடக்கும் அனாச்சாரங்களை முதலில் தடுப்போம் பின்பு குடும்பத்துடன் ஜியாரத் செல்வோம்.

மேலும் எழுத நிறைய விஷயம் உள்ளது கேள்வியெழுப்பினால் இன்ஷா அல்லாஹ் பதில் தருவேன்.

எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி www.tvpmuslim.blogspot.com

புல்லாங்குழல் said...

சகோதர் திருவாளப்புத்தூர் முஸ்லிமுக்கு,
நீங்கள் எதிர் கருத்தை நாகரிகமாக முன் வைத்ததற்கு நன்றி!

1.அல்ஹம்து சூராவில் வரும் "யாரெல்லாம் ஜெயம் பெற்றார்களோ (அந்த ஸித்திகீன்கள், ஷுஹதாக்கள்,ஸாலிஹீன்கள் என்பவர்கள் தான் வலிமார்கள்) அவர்களின் பாதையை தான் நாம் இறைவனிடம் வேண்டுகின்றோம்.
2.அவ்லியாக்களை வெறுப்பது 'இறைவனோடு தொடுக்கும் போர்' என்பது நபிமொழியின் சாரம்.
3.கப்ரின் மீது கட்டிடம் போன்ற விபரங்களுக்கு விருப்பு, வெறுப்பின்றி சகோ. ஷேக் அப்துல்லா ஜமாலியின் உரையையும் கேளுங்கள்.
4. உங்கள் பக்கம் நன்றாக இருந்தது உங்கள் சேவையை தொடர வாழ்த்துகள்.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

1.இஸ்லாத்தை விளங்க வேண்டும் என்றால் நபி(ஸல்)அவர்கள் விளக்கியதுபோன்று தான் விளங்கவேண்டும்.""யாரெல்லாம் ஜெயம் பெற்றார்களோ (அந்த ஸித்திகீன்கள், ஷுஹதாக்கள்,ஸாலிஹீன்கள் என்பவர்கள் தான் வலிமார்கள்) அவர்களின் பாதையை தான் நாம் இறைவனிடம் வேண்டுகின்றோம்" என்று அர்த்தம் வைத்தால் நபி ஸல் அவர்களும் நீங்கள் குறிப்பிட்ட நபர்களை சுட்டிக்காட்டி அவர்களின் வழியை தா என்றா அல்லாஹ்விடம் பிராத்தித்து இருப்பார்கள்.இங்கு நமக்கு யார் வழிகாட்டி நபி ஸல் அவர்களா?அல்லது நீங்கள் குறிப்பிடும் நபர்களா?

2.அவ்லியாக்களை வெறுக்க யாரும் சொல்லவில்லையே.அவர்கள் அவ்லியாக்கள் தான் என்பதற்கு நம்மிடம் என்ன அத்தாச்சி உள்ளது குர்ஆனிலோ,நபி மொழியிலோ நம்மால் காட்டமுடியுமா?இன்னவர்களை இறைநேசர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்றால் அல்லாஹ்வோ அல்லது நபி ஸல் அவர்களோ தான் குறிப்பிட வேண்டும் நாமாக யாரையும் அவ்வாறு குறிப்பிட முடியாது ஏனென்றால் நபி ஸல் அவர்களுடன் மார்க்கம் முழுமை பெற்று விட்டது.//அவ்லியாக்களை வெறுப்பது 'இறைவனோடு தொடுக்கும் போர்' என்பது நபிமொழியின் சாரம்.// அது எந்த நபிமொழி என்பதை தாருங்கள்.

3.ஜமாலியின் விவாதத்தை பார்த்த பின்புதான் என் கப்ருகளின் மேல் கட்டிடம் எழுப்பும் எதிர்ப்பு இன்னும் வழுப்பெற்றது.

4.என் தளத்தை பார்வை இட்டமைக்கு நன்றி

புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்.வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....-WWW.TVPMUSLIM.BLOGSPOT.COM

புல்லாங்குழல் said...

திருவாளபுத்தூர் முஸ்லிம்,

1.அல்ஹம்து சூராவில் வரும் அன் அம்தவிற்கு குர் ஆனில் வேறொரு இடத்தில் வரும் விளக்கம் தான் கூறும் ஸித்திகீன்கள்,ஸுஹதாக்கள்,ஸாலிஹீன்கள் என்பது.

2. வலிமார்கள் யார் என்பதற்கு விளக்கம் குர்ஆன் ஹதீஸில் இருக்கிறது.கியாமத் நாள் வரை யார் வலியாக வருவார்கள் என்ற லிஸ்டா நீங்கள் கேட்கிறீர்கள்.

புல்லாங்குழல் said...

திருவாளபுத்தூர் முஸ்லிமுக்கு,

.//அவ்லியாக்களை வெறுப்பது 'இறைவனோடு தொடுக்கும் போர்' என்பது நபிமொழியின் சாரம்.// அது எந்த நபிமொழி என்பதை தாருங்கள்.// என கேட்டிருந்தீர்கள். இதோ உங்கள் பார்வைக்கு:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக அல்லாஹு தஆலா கூறிகிறான்: யார் என் நேசரை விரோதித்துக் கொள்கிறாரோ நிச்சயமாக நான் அவரிடம் போர்ப்பிரகடனம் செய்துவிட்டேன். நான் அடியான் மீது பர்ளாக்கி யிருக்கும் பர்ளைவிட எனக்கு மிகப் பிரியமான ஒன்றைக் கொண்டு அடியான் என் பக்கம் நெருங்குவதில்லை. நபிலானவைகளைக் கொண்டு அடியான் என் பக்கம் நான் அவனை நேசிக்கும் வரை நெருங்கி விடுகின்றான். நான் அவனை நேசித்து விட்டால் அவன் கேட்கும் கேள்வியாக, அவன் பார்க்கும் பார்வையாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் அவனுக்கு கொடிப்பேன். அவன் என்னிடம் பாதுக்காப்பு தேடினால், அவனுக்கு பாதுகாப்பளிப்பேன். (புகாரி)

ரியாளுஸ்ஸாலிஹீன் பாகம் 2 ஹதீஸ் 386

Bilalia Arabic College said...

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக அல்லாஹு தஆலா கூறிகிறான்: யார் என் நேசரை விரோதித்துக் கொள்கிறாரோ நிச்சயமாக நான் அவரிடம் போர்ப்பிரகடனம் செய்துவிட்டேன். நான் அடியான் மீது பர்ளாக்கி யிருக்கும் பர்ளைவிட எனக்கு மிகப் பிரியமான ஒன்றைக் கொண்டு அடியான் என் பக்கம் நெருங்குவதில்லை. நபிலானவைகளைக் கொண்டு அடியான் என் பக்கம் நான் அவனை நேசிக்கும் வரை நெருங்கி விடுகின்றான். நான் அவனை நேசித்து விட்டால் அவன் கேட்கும் கேள்வியாக, அவன் பார்க்கும் பார்வையாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் அவனுக்கு கொடிப்பேன். அவன் என்னிடம் பாதுக்காப்பு தேடினால், அவனுக்கு பாதுகாப்பளிப்பேன். (புகாரி)

inda hadeeskku arabi moolam idudhan :
عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : إن الله قال ( من عادى لي وليا فقد آذنته بالحرب ، وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه ، وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه ، فإذا أحببته كنت سمعه الذي يسمع به ، وبصره الذي يبصر به ، ويده التي يبطش بها ، ورجله التي يمشي بها ، وإن سألني لأعطينه ، ولئن استعاذني لأعيذنه ) رواه البخاري