தோழமையுடன்

Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Thursday, March 17, 2022

காதலின் நாற்பது விதிகள் நாவல் ஒரு பார்வை

ஆசிரியர் : எலிஃப் ஷஃபாக் 

 தமிழில் : ரமீஸ் பிலாலி

அழகிய தமிழில் புகழ்பெற்ற இந்த நாவலைப் படிக்கும் போது என்ன ஒரு வசீகரமான கட்டமைப்பு  இப்படி  ஒரு ஆன்மிக நாவலை நாம் முயசித்தால் என்ன என்ற ஆசை எழுந்தது. அதே நேரத்தில் வெறும் சரித்திர நாயகர்களாக மட்டுமின்றிஆயிரக் கணக்கான மக்கள் இன்றும் பின்பற்றும் ஆன்மிக வழிகாட்டிகளாக இருப்போரின் வாழ்க்கையைஉபதேசங்களை எழுத்தாளர் புனைவின் வழியே தன் சொந்த கருத்தைப் புகுத்தி வடிவமைக்கும் நிலையின்   விபரீதத்தை எண்ணும் போது கூடவே அச்சமும் எழுந்தது. இனி நாவலைப் பார்ப்போம்:    

21ஆம் நூற்றாண்டு,13ஆம் நூற்றாண்டு என இரு வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கிறது  எலிஃப்  ஷஃபாக்கின்  “காதலின் நாற்பது விதிகள்”.  

21 ஆம் நூற்றாண்டு  - எல்லாவின் கதை 

குளத்தில் எரிந்த கல்லைப் போலச் சலனமற்ற    எல்லாவின் வாழ்வில்  வந்து விழுந்தது ‘காதல்’. காதலில் விழுந்த எல்லா இளம் பெண்ணுமல்ல!. இது வழமையான   காதல் கதையுமல்ல!.

நாற்பது வயதான எல்லா ரூபன்ஸ்டீன் தன் மூன்று   குழந்தைகளைச்   சுற்றியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அந்த அரவணைப்பையே      தன் வாழ்வின் இன்பமாகக் கருதி வாழ்ந்து வந்த அன்பான இல்லத்தரசி. அவளையே சுற்றி வந்த சிறுபிள்ளைகள் வளர்ந்து விட்ட நிலையில் அவளது அரவணைப்பும்,   வழிகாட்டுதலும்   அவர்களுக்குத்    தேவைப்படவில்லை      என்ற உண்மை  எல்லாவுக்கு அதிர்ச்சியூட்டியது. அதே நேரத்தில் பிற பெண்களுடன் இன்பம் காணும்   கணவனின் துரோகமும் சேர்ந்து கொள்ள அவள் அழகிய இல்லத்திலும்உள்ளத்திலும் தனிமையும்,   வெறுமையும் இருளாய் சூழ்ந்து கொண்டது.இது ஒரு சராசரிகதைதானே எனப் பொறுமையிழந்து விடாதீர்கள்.    இதன் Narration    முற்றிலும் வேறு ரகம்.

வாழ்வின் வெறுமையைப் போக்க ஓர் இலக்கிய நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினாள் எல்லாஅங்கு 13 ஆம் நூற்றாண்டின் சூஃபி கவிஞர் மௌலானா  ரூமி   மற்றும்   ஷம்ஸ் தப்ரேஸின் வாழ்க்கையை அடிப்படையாகக்     கொண்ட ஒரு புனைவின்   கையெழுத்துப் பிரதியை வாசிக்கும் வேலை   எல்லாவுக்கு   தரப்படுகின்றது.   காதலின் நாற்பது விதிகளைக்   கொண்டதாகக்    கதைக் களனை அமைத்திருந்தார் கதாசிரியர்   அஜீஸ் z.ஜஹாரா.   கொஞ்சம் கொஞ்சமாக, அவரையே தன் மனதின் வெற்றிடத்தை அன்பால் நிரப்ப வந்த ஷம்ஸ் தப்ரேஸாக வரித்துக் கொள்வதில் தொடர்கிறது     எல்லாவின் கதை..

13 ஆம் நூற்றாண்டு  - ரூமியின் வாழ்வில் இறைகாதல் தீபமேற்றிய   ஷம்ஸ் தப்ரேஸின் கதை

ரூமியவர்கள் ஷம்ஸ் தப்ரேஸை சந்திக்கும் முன்பே மார்க்க விற்பன்னராகவும், இறைஞான தத்துவங்களை அறிந்த தத்துவவாதியாகவும் புகழ் பெற்றவர் தான். மௌலானா ரூமியின் மனதில் இறைகாதல் தீயைப் பற்ற வைத்து ஞான கவிகளின் பேரரசராக அவரை மாற்றியது ஷம்ஸ் தப்ரேஸின் சகவாசம்.    

ஷம்ஸ் தப்ரேஸ்(ரஹ்) அவர்கள் மௌலானா ரூமி(ரஹ்) வாழ்வில் வந்ததால் ஏற்பட்ட மாற்றத்தை மௌலானா ரூமியவர்கள் கூற்றாக இப்படிச் சொல்லப்படுகின்றது.   

The fruit of my life is no more than three words -

I was raw, I was cooked, I was burned.

மனதைச் சுத்தம் செய்யும் சூஃபி வழி

வாழ்வின் போக்கில் பல்வேறு கற்பிதங்களால் களங்கமுற்ற மனம் என்பதை விஷத் தன்மை கொண்ட மரங்கள் அடர்ந்த காட்டுக்கு    உதாரணமாகச் சொல்லப்படுகின்றது.

அந்த விஷ விருக்ஷங்களை அழித்து காட்டை  சுத்தம் செய்ய இரண்டு வழிகள் உண்டு (இது உருவகம் என்பதால் மரங்களை அழிப்பது சுற்றுச் சூழல் பிரச்சனையல்ல என்பதை மறந்து விட வேண்டாம்).  காட்டை  சுத்தம் செய்வதில் முதல் வழி ஒவ்வொரு மரமாய் வெட்டி வீழ்த்துவது.  இந்த வழியில் காட்டை சுத்தம் செய்யப் பல வருடங்களாகும். இரண்டாவது வழி மரத்தில் தீயைப் பற்ற வைப்பது. அந்த தீ மரங்களை சில மணி நேரங்களில் அழித்து  காட்டை சுத்தம் செய்து விடும். இங்கே தீ என்பது இறைகாதலின் குறியீடு. ஞான விளக்கங்களின் வழியே ஆன்மிக சாதகனின்  மனதைச் சன்னம் சன்னமாகச் சுத்தம் செய்யும் போதே இறைகாதல் தீயை மூட்டி மனத் தூய்மையைத் துரிதப்படுத்துவது    சூஃபியாக்களின் வழி.

ரூமி என்ற தத்துவஞானியை இறைகாதல் வழியே அனுபவ ஞானத்தின் அடுத்த    கட்டத்துக்கு (மக்காமுக்கு) அழைத்து சென்றவுடன் பிரியாமல் பிரிந்து சென்று விடுகின்றார் ஷம்ஸ் தப்ரேஸ். மௌலானா ரூமீயின் புகழ் பெற்ற மஸ்னவி 25,000 ஈரடி செய்யுள்களைக் கொண்டது. அதை விட பெரியது 40,000 ஈரடி  செய்யுள்களைக் கொண்ட தீவானே ஷம்ஸ் -இ- தப்ரேஸ் எனும் இறைகாதல் காவியம்.

குருவிடம் நான் கொண்ட காதல் –அது

முஹம்மதர் மீதுள்ள காதல்! - அண்ணல்

முஹம்மதை நான் கொண்ட காதல் – அது

அல்லாஹ்வின் மீதுள்ள காதல்!

எனப் பாடுவார் மறைந்த என் ஆன்மிக நண்பர் கவிஞர் இக்பால் ஃபைஜி.

மஜ்னூனின் கண்களால் தான் லைலாவின் அழகைக் காண முடியும் எனச் சொல்லப்படுவதைப் போல ஷம்ஸ் தப்ரேஸின் அக அழகைத்    தரிசிக்க மௌலானா ரூமியின் கண்கள் வேண்டும். அதன் அந்தரங்கம் (ஹகீகத்) இந்த கட்டுரையின் விவரணத்திற்க்கப்பாற்பட்டது.

மௌலானா ரூமியிடம் ஷம்ஸ் தப்ரேஸ் கொண்ட அதீத செல்வாக்கைக் கண்டு அதைத் தாங்கிக் கொள்ள முடியாத  பொறாமைகாரர்கள்  அவரைக்   கொன்றுவிட்டார்கள்.  அவரது அடக்க ஸ்தலம்  கொன்யாவில் உள்ளது எனச் சொல்பவர்களும் உண்டு. அந்த அடிப்படையில் அமைந்தது தான் இந்த நாவல். ஆனால் ரூமியின் வாழ்வையும், கவிதைகளையும் ஆய்வு செய்து Rumi:Past and Present, East and West எழுதிய கட்டுரையாளர் Franklin Lewis இதற்கான வலுவான ஆதாரங்கள் ஏதுமில்லை என மறுப்பதாக William C. Chittic தனது Me and Rumi – The Autobiography of Sham-i. Tabrizi என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஷம்ஸ் தப்ரேஸ், மௌலானா ரூமீயின்  கூற்றுகளிலிருந்து சுயசரித பாணியில் தொகுக்கப் பட்ட “மகாலாத்தே ஷம்ஸ் தபரேஸ்” என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு தான் Me and Rumi.   ஷம்ஸ் தப்ரேஸின் அடக்க ஸ்தலம் இரானில் குய் (khuy) என்ற இடத்தில் இருப்பதாகவும் அதில் கூறப்படுகின்றது. Me and Rumi என்ற நூல் அஜீஸ்z. ஜஹாராவின் அறையில் காணப்பட்டதாக இந்த நாவலில் வருவதும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.

புனைவு என்ற வகையில் ஏதோ ஒரு அடிப்படையில் கதாசிரியர் எழுதுவது தவறல்ல என்றாலும் ஷம்ஸ் தப்ரேஸ் அவர்கள் அடிப்படையில் இஸ்லாமிய சட்டக்கலையில் தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞராவார்.அவர் ரூமியை சந்திக்க கொன்யாவிற்கு வந்த போது மார்க்க அடிப்படையில் பிற   அறிஞர்களையும் சந்தித்து அடிக்கடி உரையாடி இருக்கின்றார் என்றும் மார்க்க விசயத்தில் அவர்களின்      குறைகளைச் சாடியிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. அத்தகையவரை புனைவு என்ற பெயரில் மார்க்கத்தை மீறுபவராகக் காட்டுவது புனைவின் வழியே நிகழ்ந்த வரலாற்றுத் திரிபு வேலையும்    வன்மையாகக் கண்டிக்கதக்கதுமாகும்.

சூஃபியிசம் “சமய கட்டுபாடுகளைலிருந்து விடுதலை பெற்றது” எனச் சிலர் வலியுறுத்தக் காரணம் அதன் உலக பொதுமைக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அவர்களின் கற்பனையினால்தான் என்கின்றார் மார்டின் லிங்ஸ். ஒருவேளை எலிஃப் ஷஃபாக்கின் புனைவில் இந்த மேற்கத்திய மனோபாவம் வெளிப்பட்டிருக்கக் கூடும்.

உண்மையில் சூஃபி ஞானிகள் குர்ஆன் சொல்லும் ‘எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம்’ என்பதைத் தரிசன உண்மையாய் கண்டவர்கள். அவர்கள் எப்போதும் இறை முன்னிலையில் இருப்பதால் மார்க்க வரம்புகளைப் பேணுவதில் சாமானியர்களை விட மிகவும் சிறப்பாக முன்னிற்பவர்கள்.

 அதே நேரத்தில் அவர்கள் மார்க்க கோட்பாடுகளைக் கடுமையாக்குபவர்களுமல்ல.

சூஃபிகளுக்கெல்லாம் தலைவரான முஹம்மது நபி (ஸல்) ஒரு விசயத்தைச் செய்வதில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வழிமுறைகள் இருக்கும் போது அதில் எளிதானதையே மக்களுக்குப் பரிந்துரைக்கச்    செய்வார்கள்.அது தான்   சாமானியர்களுக்கு     நபிகள் காட்டிய வழி. அந்த நபிவழி தான் சூஃபி வழி.

‘எல்லா சிருஷ்டிகளையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான்’ இறைஞானம் வந்ததற்கான அடையாளம் என்பார்கள் எனது ஞான குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்). சூஃபியிசத்தின் அந்த மனிதநேய பகுதியை அழகாகச் சொல்லி இருக்கிறது இந்த நாவல். புனைவு என்ற வகையில் எலிஃப் ஷஃஆக்கின் இந்த நாவலின் விஷேச கட்டமைப்பு ஒரு தனித்த பாணியில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.  உலகப் புகழ் பெற்ற இந்த நாவலைத் தமிழுக்குத் தந்ததற்காகச் சீர்மை பதிப்பகத்திற்கு நன்றி! ரமீஸ் பிலாலியின் மொழிபெயர்ப்பு இந்த நாவலில் சிறப்பான   உச்சத்தைத் தொட்டு வாசிப்பை இனிமையான அனுபவமாக மலர செய்திருக்கிறது   ரமீஸுக்கு வாழ்த்துகள்!. இன்னும் சிறப்பான பல மொழிபெயர்ப்புகளை அவர் வழங்க ஆசிக்கின்றேன்!   


 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Tuesday, March 2, 2021

பரிபூரணத்தை நோக்கிய யாத்திரை - கனவுக்குள் கனவு நாவலை முன்வைத்து - கீரனூர் ஜாகிர்ராஜா

கனவுக்குள் கனவுநாவல் தமிழுக்குப் புதுவிதமான வரவு. காரணம் இது பேசுகின்ற விடயம்சூஃபித்துவம். தமிழில் எழுதப்பட்ட முதல் சூஃபி நாவல் இது  என்று சூஃபியிசத்தில் தோய்ந்த எழுத்தாளராகிய நாகூர் ரூமி மதிப்பிடுகிறார்

முதலில் ‘கனவுக்குள் கனவு’ ஒரு நாவல் தானா என்னும் கேள்வியிலிருந்து தொடங்கலாம். இக்கேள்விக்கும் கூட அவசியம் என்ன என்று கேட்டால் – இது வழக்கமான தமிழ் நாவலாக இல்லை  என்பதே பதில். பின் நவீனம், அமைப்பியல், மாய யதார்த்தம் என்றெல்லாம் தமிழ் நவீன இலக்கியவாதிகள் பேசத்தொடங்கி ஆண்டுகள் பல கடந்துவிட்டன. ஆனாலும் யதார்த்தவாதமே இங்குக் கோலோச்சுவது மறுக்கவியலாத யதார்த்தம். யதார்த்தவாதப் படைப்புகளுக்குள்ளே மேற்சொன்ன உத்திகள் அவ்வப்போது தோன்றி அல்லது ஊடாடி மறைகின்றன தான். இந்திய நாவலாசிரியர்களில் பெரும்பான்மையினர் யதார்த்தவாத எழுத்தாளர்களே. பின் நவீனம், மாய யதார்த்தம் என்று எழுதப்படுகின்ற சில எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வாசகப் பொருட்படுத்தலின்றி தோல்வியையே தழுவியிருக்கின்றன. ஆனால் இம்முயற்சிகளை நாம் வளர்ச்சியாகக் கருதியே தீர வேண்டும்.



நூருல் அமீன் ஃபைஜி தனது முதல் நாவல் – முயற்சியை பரீட்சார்த்தமாகவே தொடங்குகிறார். சூஃபித்துவம் குறித்த தொடக்க நிலைப் புரிதல் கூட இல்லாத வாசகர்களுக்கு Auto suggestion, Self hypnosis, Self Image, Ontology எல்லாம் புதிதாகவும் புதிராகவுமே இருக்கும். எளிய தமிழ் வாசகன் முழுக்க புனைவு சஞ்சாரத்தில் மிதக்கப் பயிற்றுவிக்கப்பட்டவன். ஃபைஜியின் நாவலிலும் புனைவுலகமென ஒன்று இருக்கவே செய்கிறது. அவருக்குத் தமிழ் நவீன எழுத்துகளில் பரிச்சயமிருக்கிறது. ‘விவேகங்கள் கூடிய பின்பும் கீழ்மையிலே சிக்குண்டு கிடக்கிறோம். இந்த போதாமைக்கு எதிரான போராட்டத்தைத்தான் பரிபூரணத்தை நோக்கிய யாத்திரையாக நான் கூறுகின்றேன்’ என்கிற சுந்தர ராமசாமியின் மேற்கோளை நாவலின் 11-வது அத்தியாயத்தில் பயன்படுத்துவதன் மூலம் மெல்ல நமக்கு உணர்த்துகிறார். மட்டுமல்ல, இந்நாவலை ஃபைஜி ஏன் எழுதினார் என்பதற்குமே கூட சு.ரா.வின் மேற்கோள் பொருந்திப் போகிறது. இந்நாவல் வாசகப் போதாமைக்கு எதிரான போராட்டத்தைத்தான், பரிபூரணத்தை நோக்கிய யாத்திரையைத்தான் முன்வைக்கிறது.

 

நாவல் நிகழும் களம், மக்கள் தொகையில் கால்பங்குக்கும் மேல் இந்தியர்களைக் கொண்டதும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக விலையுயர்ந்ததுமான துபாய் நகரம்.

இம்தியாஸ் தன் அறையிலிருந்து வெளியேறி பால்கனியில் வந்து நின்று, ஈச்சை மரங்களின் அழகை ரசிப்பது நாவலுக்கு ஒரு நல்ல தொடக்கமென்றால் – இம்தியாஸின் இளைய மகள் ஹசீனா, புறா முட்டையிட்டிருப்பதை வாப்பாவிடம்  கூறி, அதைப் படம் எடுத்து ‘பிளாட் நம்பர் 102-இல் மணிப்புறாவின் குடியேற்றம்’ என முகநூல் நிலைத்தகவலிட்டு வைப்பதும், சில நாட்களுக்குள் புறாக்கள் பறந்துவிட, கூடு காலியாவதும், பிறகு அவள் அட்டையில் TOLET எழுதி கூட்டில் செருகுவதும் என ஒருவித கவித்துவம் இழையோடும் சிறுகதை அரங்கேற்றமே இந்நாவலுள் நிகழ்கிறது. சரி, நாவல் இப்படித்தான் நகரும் போலிருக்கிறது என நாம் நினைக்கையில், அன்பில் முகம்மது என்பவன் இம்தியாஸுக்கு போன் செய்து ‘எனக்கு ஃபனாவாக வேண்டும்’ என்கின்றான், ‘பாஸ்ட் புட் கடையில் ஒரு மசால் தோசை பார்சல் என்பது போல’ என்று இதைக் கேலி செய்யும் ஃபைஜி அடுத்தடுத்த அத்தியாயங்களில் ‘விஷயத்துக்கு’ வந்துவிடுகிறார். நமக்கோ தளிர்விட்ட மரத்துக்கு சலாம் கூறி, மரத்திடமிருந்து பதில் சலாமும் பெறும் ஜமீலைப் போன்ற அற்புதமான குழந்தைகளின் வழியாகவே கூட இந்நாவல் சொல்லப்பட்டிருக்கக் கூடாதா என்னும் ஏக்கம் தோன்றிவிடுகிறது. ஆபரேஷன் செய்ய வந்தவர் கத்தியை எடுக்காமலிருப்பதாவது.


ஆறடி உயரம், பொன்னிறம், கம்பீரக்குரல், அழகிய தாடி என ஷெய்குவை அறிமுகப்படுத்துவது சரி. அது என்ன எழுத்தாளர் பாலகுமாரனைப் போல முகச்சாயல்? இது மட்டுமல்ல – இந்திரா காந்தியைப் போல முன் நெற்றியில் சற்றே இளநரை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியைப் போன்ற கவர்ச்சிகரமான தோற்றம், எழுத்தாளர் ஆதவன் ஜாடை என்றெல்லாம் சில பாத்திரங்களை அறிமுகப்படுத்துவது ஆசிரியர், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சுஜாதாவின் கதாபாத்திரங்கள் கணேஷ் – வசந்தையும் விட்டுவைக்கவில்லை. நியாஸ் என்னும் பாத்திரத்தை ரஜினி ரசிகனாகக் காட்டுகிறவர், ஒரு அத்தியாயத்தில் அனுஷ்கா, ஹாரிஸ் ஜெயராஜ்ஜையும் சுட்டுகிறார். இவையெல்லாம் கசப்பு மருந்தின் மேலே தடவப்பட்ட இனிப்புகளா? நல்ல படம் ஒன்றை எடுத்துவிட்டு, வணிகத்துக்காக சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி நடனத்தை இடைச்செருகும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் உத்தியா? புரியவில்லை.


ஆன்மிகத்தை அடிநாதமாகக் கொண்ட நாவல் எழுத விஷய ஞானமும், தெளிவும் துணிச்சலும் வேண்டும். ஜெயமோகனுக்கு ஒரு வாசகர் வட்டம் இருந்ததால், அவரால் விஷ்ணுபுரமும், வெண்முரசு வரிசை நாவல்களும் எழுத இயன்றது. நூருல் அமீன் ஃபைஜி துணிந்திருக்கிறார். தமிழில் எழுதும் இஸ்லாமிய எழுத்தாளர்களில் பலருக்கும் அவர்களுடைய ஆன்மிகத்தை எப்படி வாசகனுக்குக் கடத்துவதென்பதில் குழப்பம் இருந்தது. மத வரையறைகளுட்பட்ட, ஒழுக்கம் போதிக்கின்ற ஆக்கங்களை அவை சரியாகச் சித்தரிக்கப்படாத காரணத்தால் வாசகர்கள் தொடர்ந்து புறக்கணிக்கவே செய்தனர். ஒரு பிரத்தியேகமான ஆன்மிகப் புனைவை வெற்றிகரமாகத் தருவதற்கு எந்த சமூக எழுத்தாளனாலும் இன்றுவரை இயலவில்லை.


கனவுக்குள் கனவு நாவலில் ஷெய்கு ‘வகுப்பு’ எடுக்கிறார். வகுப்பு நமக்கொன்றும் சலிப்பூட்டவில்லை. வாசகர்களுக்கு?


போர்ஹேஸ், காஃப்கா, மார்க்வேஸ், கால்வினோ, தல்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி போன்றோரை உள்வாங்கிக்கொண்ட தமிழ் நவீன அறிவு ஜீவச்சமூகம் சூஃபித்துவத்தை உள்வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். வெறுமனே, தோன்றியபொழுது சூஃபிக்கதைகளை, கவிதை வரிகளை தொட்டுக்காட்டுவதுடன் ஒதுங்கிக்கொள்வது நுனிப்புல் மேயும் சமாசாரமாகிவிடும். நூருல் அமீன் ஃபைஜி போன்றவர்கள் வாசக பொருட்படுத்தலுக்கு உள்ளாவதால் மட்டுமே இது சாத்தியமாகும்.


கனவுக்குள் கனவு நாவலில் குறிப்பிட்டுச் சொல்ல மற்றொரு விடயம், அது தரும் துபாய் நகரத்தின் கலவையான சித்திரங்கள். 95 சதவிகிதம் எண்ணெய் வளம் சாராத ரியல் எஸ்டேட், டிரேடிங் வங்கிகள் கடன் வழங்கும் நிறுவனங்கள் சார்ந்தே துபாய் நகரின் பொருளாதாரம் இருக்கிறது என்கிற தகவல் வியப்பூட்டுகிறது. லெஹ்மன் பிரதர்ஸ் என்னும் முதலீட்டு வங்கியின் வீழ்ச்சியுடன் தொடங்கிய நிதி நெருக்கடியிலிருந்து துபாய் மீண்டு, அசாதாரண வளர்ச்சி பெற்ற வரலாறும் இந்நாவலில் உண்டு. அமீரகத்தின் மொத்த மக்கள் தொகை ஒரு கோடிக்கும் குறைவு. இதில் சுமார் 15 சதவிகிதம் பேர் மட்டுமே அதன் குடிமக்களாகிய அரேபியர். 85 சதவிகிதம் பேர் வெளிநாட்டுக்காரர்கள். இவர்களுடைய குடியிருப்பு விசா, சுற்றுலா விசா, லைசென்ஸ் கட்டணங்கள் இவற்றைக்கொண்டே துபாயின் பொருளாதாரம் உச்சத்தை அடைந்தது போன்ற தகவல்கள் அரியவை.


முற்றிலும் புதிய வாசிப்பனுபவத்தை வழங்கிய இந்நாவல் வாசித்து வரவேற்கப்பட வேண்டும். இது ஒரு இஸ்லாமிய நாவல் என்பதைக் காட்டிலும் இந்திய நாவல் என்றறியப்பட வேண்டிய அவசியம் உள்ளது.


நூருல் அமீன் ஃபைஜி வெற்றி தோல்வி குறித்துச் சிந்திக்காமல், இதே சூஃபித்துவத் தளத்தில் குறிப்பாகப் புனைவின் வழி தொடர்ந்து இயங்க வேண்டும். பரிபூரணத்தை நோக்கிய யாத்திரை என்பது அதுவாகவே இருக்கமுடியும். வாழ்த்துக்கள்.



 கனவுக்குள் கனவு (நாவல்)

நூருல் அமீன் ஃபைஜி

புல்லாங்குழல் வெளியீடு – நாகை

பக்கம் – 212. விலை ரூ 250/-

Wednesday, April 3, 2019

பழி நாவலை முன் வைத்து - 2

அன்புள்ள அய்யனார் விஸ்வநாதனுக்கு,

பழி நாவலைப் பற்றிய என் முந்தைய பதிவின் தொடர்பாக சில விளக்கங்கள்.

எண் ஒன்று…..

ஒரு மயிரும் புடுஙக முடியாத இயலாமையின் நிதர்சனம் தந்த ஆயாசமும் தான் அய்யனாரின் வீட்டுக் கதவுகளைத் தட்ட வைத்தது என்ற வார்த்தைகள்…..


பழைய தமிழ்ப் படங்களில் சண்டைக் காட்சிகளில் கதாநாயகன் வில்லன் எல்லாம் ஆக்குரோசமாக மோதிக் கொண்டிருக்கும் போது. யாரையும் தாக்க முடியாத காமடியன்  எனக்கு கிடைத்தவன் நீ தான் என ஒரு ஒல்லி குச்சி ஓமக்குச்சியை ஆசாமியைப் பிடித்துக் கொண்டு. ஆய் …ஊய் எனத் தாக்குவது போன்றது.  ( ஓமக்குச்சி எனச் சொல்வாயோ எம் ஆசானை எனச் சீடர்கள் யாரும்        கத்தியை உருவ வேண்டாம். நானும் அய்யனாரின் ரசிக மன்றத்து ஆள் தான்……)  

எண் இரண்டு….

இந்த மிருக காட்சி சாலையில் உள்ள கூண்டின் கதவுகள் திறந்து கிடக்கிறது சாமி!. இங்கே மிருகங்களுக்குப் பசியை விற்க வேண்டாம் என்ற வார்த்தைகள்

சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் ஏற்படுத்திய மன ரீதியான பாதிப்பின் வேதனை இருந்ததனால் இதற்கு எதிரான எல்லா காரணிகளும் களையப் பட வேண்டும் என்ற வகையில் முன் வைத்த கோரிக்கையே! தவிரத் தாக்குதல் நோக்கம் கொண்ட வார்த்தைகள் அல்ல.

ஒரு புத்தகத்தை படித்ததனால் குற்றங்கள் நடக்கிறது என்பது நிச்சயமாக முட்டாள் தனம் தான். ஆனால் ஒரு புத்தகம் நம் உணர்வைச் சிறிதளவு கூட சீண்டாது என்பதுவும் ஒரு வகை அப்பாவித்தனம் இல்லையா?. (இதை சொல்லுங்கள் கோபால்.. சொல்லுங்கள் என்று சரோஜா தேவி வாய்ஸில் படிக்கவும்)

எளிதில் புறம் தள்ள முடியாத அப்பழுக்கற்ற உங்கள் எழுத்து திறன் நேசிக்கத்தக்கதுஉங்கள் எழுத்தைச் சொற்பமே வாசித்திருந்தாலும்.    உங்கள் எழுத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு உண்மை. நண்பரே வீட்டுக்கு            வாருங்கள் என அழைத்ததும் sincere ஆக உங்கள் நட்பு நாடியே!.  ஆகவே இதை எதிர்ப்பாளனின் வார்த்தையாகப் பார்க்காமல் ஒரு நண்பனின் கோரிக்கையாகப்  பாருங்கள்.

அடுத்து பாலியல் எழுத்தைத் துணிச்சலாக எழுதுவது பற்றி திரு ஜெயமோகன் கூறுவதையும் உங்கள் முன் வைக்க ஆசைப்படுகின்றேன்:

பாலியல் எழுத்தைத் துணிச்சலாக எழுதுவது என்பதொன்றும் சிறப்பல்ல. எல்லா எழுத்தாளர்களும் தேவையான துணிச்சலுடன்தான் எழுதுகிறார்கள்ஆனால் அவ்வாறு எழுதுபவர்களில் எத்தனைப்பேர் அதை நுட்பமாகமெய்யாக எழுதுகிறார்கள்கணிசமான தமிழ் எழுத்தாளர்கள் பாலியல்வரட்சியால் அவதிப்படுபவர்கள். பூஞ்சையான உள்ளமும் அதற்கேற்ற சம்பிரதாயமான வாழ்க்கையும் கொண்டவர்கள். ஆகவே அனுபவத்திலிருந்து எவரும் எழுதுவதில்லை. பெரும்பாலும் அவை பகற்கனவின் சித்தரிப்புகள். தஞ்சைப் பிரகாஷ் எழுதியதைப்போல. ஆகவே பகற்கனவுகளை நாடுபவர்களால் சிக்கத்தக்கவைஉதாரணமாக ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொருநாளே நாவலில் கந்தன் மீனாவுடன் உறவுகொண்டு முடிந்ததும் மீனா சுருண்டு கிடந்து அழுகிறாள். உள அழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு அது. அந்த அழுகைக்குப்பின் அவள் அதற்கான காரணமாகக் காணாமல்போன தன் மகனைப்பற்றி நினைத்துக்கொள்கிறாள். இது ஆசிரியரின் நுண்ணிய அனுபவ அவதானிப்பின் வெளிப்பாடு. இத்தகைய இடங்கள் தமிழிலக்கியத்தில் மிகக்குறைவேஎன்கின்றார் ஜெயமோகன்.

முழுவதும் படிக்காமல் விமர்சனம் செய்கின்றாய் என்ற கேள்வியிலிருந்த நியாயத்தைக் கருதி. உங்கள் பழி நாவலை முழுமையாக வாசித்தேன். ஒரு சாதாரண கருவை அழகியலோடு சொல்லும் உங்கள் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது. ஆனால் அதில் விரவி இருக்கும் மிகை காமம் நாவலின் அழகியல் ஒருமையை வெகுவாக சிதைக்கிறது என்பது என் எண்ணம்.

அமீரகத்தின் சாருவே!, நீங்கள் இன்னும் சிறப்பான உச்சங்களைத் தொட வேண்டும் என்பது என் ஆசை. 

பேரன்புடன்,

நூருல் அமீன்










உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Thursday, March 28, 2019

அய்யனார் விஸ்வனாத்தின் 'பழி'யை முன்வைத்து





அன்புள்ள அய்யனார் விஸ்வனாத்,

உங்கள் 'பழி' நாவலை ஒரு சில அத்தியாயங்கள் படித்தவுடன, தொடர முடியாமல் மூடி வைத்து விட்டேன். நிச்சயமாக நீங்கள் ஒரு நவீன புஷ்பா தங்கதுரையோ, உங்கள் கதை ராணி முத்தில் வரக் கூடிய நாலாந்தர கதையோ இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல நீங்கள் முயன்றால் மேல்நாட்டு கிளாசிக்கல் எழுத்தின் தரத்தில் தமிழில் எழுத முடியும் அத்தகைய ஒரு ஆகர்சம், மேஜிக் உங்கள் எழுத்தில் இருக்கிறது. எங்களுக்காக அப்படி நீங்கள் எழுத வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இப்படித்தான் ஆபிதீன் நானாவிடம் நீங்கள் வைக்கம் பஷீரைப் போல எழுத வேண்டும் எனச் சொன்னதற்கு. அப்படி எழுதக் கூடிய ஒரு எழுத்தாளர் இருக்கிறார். ஆனால் அவருக்கும் என் பூண்டு கதை தான் பிடிக்கிறது என்ன செய்ய என்றார். அந்த நேரத்தில் முன்னோடி எழுத்தாளர் புதுமைப் பித்தன் போர்னோவை விரும்பி வாசிப்பார் என எங்கோ படித்தது தான் ஞாபகத்திற்கு வந்தது. அதபு கருதி ஆபிதீன் நானாவிடம் பதில் பேசவில்லை.

உனக்குப் பிடிக்காவிட்டால் படிக்காதே. ஒரு எழுத்தாளனுக்கு அவன் எப்படி எழுத வேண்டும் எனச் சொல்லுவது அசட்டுத் தனமா? அடாவடித்தனமா? எனக் கேட்டால் எனக்குத் தெரியவில்லை. எப்படியாவது இருந்து விட்டு போகட்டும். இன்று காலையில் படித்த Hussain Amma வின் வரிகளில் இருந்த வேதனை தான் எனக்கு உங்களிடம் இதைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது ..

ஹூசைனம்மா

"பொள்ளாச்சி கொடூரம் ……. நெஞ்சில் கடப்பாரையைப் பாய்ச்சியது. "எத்தனை பேருடா வருவீஙக?" என்ற ஒரு வசனம் தந்த அதிர்வின் காரணமாகவே, மகாநதி படத்தின் நகைச்சுவை காட்சிகளைக் கூட பார்ப்பதில்லை. அதன் நிஜ வெர்ஷன் இந்த பொள்ளாச்சி கொடூரம்!!

சற்றே அதைக் கடந்தால், இதோ தமிழகத்தின் ஆஸிஃபா.... அக்குழந்தையின் பெயரைத் தெரிந்துகொள்ளக் கூட அச்செய்தியை வாசிக்கப் பயமாக இருக்கிறது.

எங்கே போகிறது தமிழகம்? என்ன நடக்கிறது? ஏன் இப்படி?

நோய்க்கு மருந்து கொடுப்பதோடு, நோய்முதல் நாடுவதுதான் இப்போதைய அவசரத் தேவை. குடியும், ஊடகங்களில் ஆபாசம் ஆகியவையே முதற்காரணிகள்.

பொள்ளாச்சி நிகழ்வுகள், ஆபாச படங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டை நமக்கு உணர்த்துகின்றன. போர்னோகிராஃபி என்பது பொழுதுபோக்காக இருந்தது போய், ஒரு சீரியஸான தொழிலாக மாறிவிட்டது. ஹாசினி, சென்னை அபார்ட்மென்ட் மாற்றுத்திறனாளி சிறுமி, இப்போது கோவை சிறுமி உட்பட அதன் விளைவுகள்தான்.

சமீபத்தில் போர்ன் வலைத்தளங்கள் தடை செய்யப்பட்ட போது மக்கள்(???) எதிர்ப்பின் காரணத்தால் தடை நீக்கப்பட்டது.

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்? "ஆண்கள் திருந்த வேண்டும்" என்ற கோஷம் மட்டுமே பயன் தராது. தவறு செய்யத் தூண்டும் காரணிகளும் -தவறு செய்தால் கொடுந்தண்டனை கிடைக்கும் என்ற பயமின்மை உட்பட - ஆராயப்பட்டுக் களையப்பட வேண்டும்".

அதிகாலையில் ஹூசனம்மாவின் இந்த வரிகளைப் படித்ததும் ....நம் தாயகத்தை நினைக்கையில்.....போலீஸ் ஸ்டேசன் இல்லாத ஒரு பொறுக்கி சாம்ராஜ்யத்தில் மக்கள் வாழ்வது போன்ற ஒரு பிரமையும்.

எடுஙகடா அந்த திருப்பாச்சி அருவாளை அந்த கயவாளி தோப்புக்குள்ளே பூந்து எல்லா வாழைப்பழத்தையும் சீவி எறிந்திடலாம் என்ற வேகமும்....

பெருந்திரளாக மக்களின் கைகளில் ஏந்தி நிற்கும் தீபந்தங்கள், மெழுகுவர்த்திகள் இருள் நீக்கும் என சிறிது ஆசுவாசமும்….

எங்கே...ஒரு சுவிட்ச போட்டு எல்லா வெளிச்சத்தையும் அணைத்து விடுவார்கள் அந்த மோடி மஸ்தான்கள் என்ற பயமும்….

ஒரு மயிரும் புடுஙக முடியாத இயலாமையின் நிதர்சனம் தந்த ஆயாசமும் தான் அய்யனாரின் வீட்டு கதவுகளைத் தட்ட வைத்தது.

இந்த மிருககாட்சி சாலையில் உள்ள கூண்டின் கதவுகள் திறந்து கிடக்கிறது சாமி!. இங்கே மிருகங்களுக்கு பசியை விற்க வேண்டாம்.

எதிர்கால தஸ்தாவஸ்கியான நீங்கள் குடும்பத்துடன் ஒரு தேநீர் அருந்த வீட்டுக்கு வாருங்கள். உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கின்றேன்.

பேரன்புடன்,
அமீன்

அய்யனாருக்கே அறுவாளா என ஆசிப் பாய் சொல்வது காதில் கேட்கிறது. நம்ப வேண்டாம். நட்பு நாடியே இந்த மடல்.