வீட்டுகுள் நுழைந்ததும் “என்னங்க அஹ இன்னைக்கு திரும்பி
வந்தாஹங்க!” என்றாள் என் மனைவி.
“எஹ?” என்றதும்.
“தாவா ஆண்டிங்க!” புன்னகையுடன் அவள் சொன்னதும், அதே கேலிப்புன்னகை
என் முகத்திலும் பரவியது.
‘தாவா ஆண்டி(Dawa Aunty) ’ என அழைக்கப்படும் 65 வயது மதிக்க தக்க
மூதாட்டி நேற்று தான் எங்கள் வீட்டுக்கு முதன் முறையாக வந்தார். நடுப்பகல் உச்சி வெயில்
நேரத்தில் வியர்க்க விருவிருக்க வந்த தாவா ஆண்டியை மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்து
சென்று உபசரித்தாள் என் மனைவி.
அதிலும் ‘நான்’ எழுதிய ஆன்மீக புத்தகத்தை குறித்து
“ ரெண்டு தடவ படிச்சேன்மா. ரொம்ப நல்ல புக்கு. உன்னட மாப்பிளை ரொம்ப புத்திசாலிம்மா”
என்று தாவா ஆண்டி சொன்னதும் ‘தன் கணவனை ஆன்றோன் என சொல்லக் கேட்ட’ என் மனையாள் ‘மணந்த
போதினும் பெரிதுவந்து’ தாவா ஆண்டியையும் பெரிதுவக்கத் துவங்கினாள்.