தோழமையுடன்

Monday, August 15, 2011

எது கவிதை?

நேற்று இலங்கை வானொலியினரால் வாசிக்கப்பட்ட “எது கவிதை..?” எனும்  சபீரின் கவிதையை படிக்குமுன் ஆரம்பமாக 'கவிதைப் புரிதல்' பற்றி   சபீரின் சில விளக்கங்கள்:
                     
“கவிதையோ கதையோ கட்டுரையோ , என்னைப் பொறுத்தவரை ஒரு செய்தி இருக்கனும், உணர்வு இருக்கனும், வாசிக்க அழகு இருக்கனும் மேலாக தெளிவாயிருக்கனும்.                                                   
  .



ஊமைக் குறியீடுகளின்மூலம் புரியவைப்பதிலிருந்து நம்மை தப்பிக்கவைத்தது மொழி. இதைக்கொண்டும் நாம் சொல்வதும் எழுதுவதும் சட்டென புரிய வேண்டாமா? கவிதைகளோடும் தமிழ்நாட்டின் பழுத்த எழுத்தாளர்களின் படைப்புகளோடும் பரிச்சயம் மிக்க என்போன்றவர்களுக்கே நவீன கவிதைகள் சட்டென புரிபடுவதில்லை. பத்து பேருக்குப் புரிந்தால் போதும் என்று எழுதுபவர்களில் எனக்கு செலவழிக்க நேரமுமில்லை”  என்பது கவிஞர் சபீரின் வாதம். இதை அவரே எழுதிய இரண்டு கவிதைகள் மூலம் விளக்குகின்றார். 

என் வாசகர்களில் நிறைய பேர்களுக்குப்பிடித்தது. திண்ணையில் நான் எழுதியது எனும் சபீரின்  முதல் கவிதை :

'மம்மி' தாலாட்டு!
 நல்ல டைனோஸர்
மிளகாச் சட்னி கேட்காமல்
இட்லி உண்டது
படுக்கச்செல்லுமுன் 
பால் குடித்தது
'மூச்சா' வந்தால்
டாடி டைனோஸரை எழுப்பியது

தொப்பி யணிந்து
பள்ளி சென்றது
பள்ளிக்கூட 
உணவு இடைவேளையில்
அம்மா தந்துவிட்ட
சிற்றுண்டி உண்டது

கருப்புக் காரை
விரட்டியது
கணக்கு சாரை
மிரட்டியது

சுலைமானுடனும் ஷாருக்குடனும்
விளையாடியது
பலூன் பாலுவிடம்
'கட்டி' விட்டது
சுஷ்மிதா திருடிய
ஷார்ப்பெனெரை
பிடுங்கித் தந்தது

மம்ஸார் பார்க்கில்
கிரிக்கெட்டில்
ஷாருக்குக்கு நாட் அவுட் சொன்னது

மேலும்
நல்ல டைனோஸர்
எழுந்ததும் பல் துலக்கியது
சுவரில் கிறுக்காமல்
காகிதத்தில் எழுதியது
உடை ஈரமானால்
உடனே மாற்றியது

...மகன் உறங்கியதும்
மேலும்
கேவலப் படுவதிலிருந்தும்
தப்பியது டைனோஸர்!

 கீழே உள்ளதும் திண்ணையில் சபீர் எழுதியதுதான்: நம்ம ஜாகிரே (எங்கள் இருவரின் நண்பன்) புரியலடான்னுட்டான் எனும் சபீரின் இரண்டாவது கவிதை.

கடன்

நிசப்தங்களுடன்
உரையாடுவதில்
மனம் லயிப்பதுண்டு.
நீண்டநேரத்
தனிமையில்...
எனக்குப் பிடிக்காதவர்
திறக்கக் கதவோ
பிடித்தவரைத் 
தடுக்ககத் தாழ்ப்பாளோ
இருக்காத நிசப்தம்...

உரையாடல்களினூடே
அண்ணனிடமோ தம்பியிடமோ
அக்காளிடமோ தங்கையிடமோ
அப்பாவிடமோ நண்பனிடமோ
மனைவியிடமோ காதலியிடமோ
என
எல்லோரிடமும்
கேட்கப்படாமல் விடுபட்ட
கேள்விகள்
அணிவகுத்தாலும்
அம்மாவிடம் மட்டும்
சொல்லி முடிக்கவியலாத
பதில்கள்
மட்டுமே 
மிஞ்சி நிற்கின்றன!

 கவிதையின் புரிதல் பற்றி இவர்கள்:

தமிழின் பிரபல எழுத்தாளர் நீல. பத்மநாபன் ஒரு பேட்டியில் இப்படி குறிப்பிடுகின்றார், “ இப்போது வரும் கவிதைகளை நான் படித்து வருகிறேன். சிலதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கவிதை என்பது மனசில தைக்கிற மாதிரியும், தீயை உண்டாக்குவதாகவும் இருக்கவேண்டும். தமிழில் அப்படி கவிதைகள் இப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்தக் கவிதைகளை விளக்கிச் சொல்வதற்கு இன்னொருவர் தேவைப்படுகிறார்”என்று.

"உள்ளத் துள்ளது கவிதை - இன்ப
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெளிந்து ரைப்பது கவிதை."
என்கின்றார்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

இதே புரிதலைப் பற்றி, “எட்டாம் வகுப்பு இயற்பியல் பாடத்தைக் கூட புரிந்து கொளவதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. கதையோ கவிதையோ ஒரு பி.ஏ. படித்தவர் கூட சிரமமில்லாமல் புரிய வேண்டும் என்றால் எப்படி என்ற கேள்வியை எழுப்புகின்றார்” பிரபல இலக்கியவாதி சுந்தர ராமசாமி. 

“கவிதை என்பது சில வரிகளில் கடல் அளவிலான அர்த்தப் பரிமாணத்தை
உள்ளடக்கி காட்டவல்லது”என்கின்றார் கவிஞர் தாஜ்.

 மீண்டும் சபீர்….
அடுத்த கட்ட கவிதையையும் வெகு சீக்கிரம் சபீரிடம் எதிர்பார்க்கலாம் என்பது என் நம்பிக்கை.பெண்ணுரிமை என்ற பெயரில் ஆபசமாக எழுதுபவர்களை கடுமையாக சாடும் சபீர் . பெண் கவிஞர்கள் எழுதிய நல்ல கவிதைகளை வரவேற்க்கவும் தயங்கவில்லை. 

 ‘என் கடல்’ என்னும் அனாரின் கவிதையை ரசிக்கும் சபீர் அனாரின் ஊஞ்சல் கவிதையை 'சூப்பர்' என பாராட்டுகின்றார்.
என் கடல்
ஒன்றுமில்லை
என்றைக்கும் போல
காதோரம் பதிக்கையில்
அலையோசையிடம் கேட்டேன்
விசனத்தோடு
இவ்வளவு அழிவாயென
அதன் மூர்க்கம் குறித்து.
அவ்வளவுதான்;
எவ்வளவோ தடுத்தும் கேளாமல்,
என்னுடைய சங்கிலிருந்து
இறங்கிப் போய்விட்டது
கடல்
திரும்பியே பாராமல்.

இறுதியாக “எது கவிதை” என்பது பற்றி சபீரின் விளக்க கவிதை. அதிரை நிருபர் என்னும் வளைதளத்தில் வெளியானது. (அதிரை நிருபர் தளத்துக்கு நன்றி!)

எது கவிதை...?

எது கவிதை...?

 மெல்ல விடிவதை
 நல்ல மொழிதனில்
 செல்ல வரிகளால்
 சொல்ல முடிவதே…கவிதை!

 உனக்குள் உருவாகும்
 உள்ளத்து உணர்வுகளை
 உள்ளது உள்ளபடி
 உளராமல் உரைத்தால்…கவிதை!

 பாலையில் யாவர்க்கும்
 காலையும் மாலையும்
 பாலை வார்க்கும்
 வேலை பார்க்கும்…கவிதை!

 சூரிய கிரணங்கள்
 மேவிய தருணங்கள்
 கூரிய வார்த்தைகளால்
 கூறிய வருணனை…. கவிதை!

 நுனுக்க உணர்வுகளையும்
 மினுக்கக் கனவுகளையும்
 துனுக்குத் தோரணங்களையும்
 திணித்துவைத்த அனு...கவிதை!
 கலைத்துப் போட்ட
 பொம்மைகள்
 குப்பை யென்றால்
 அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!

 உதறிய பூக்களும்
 சிதறிய இதழ்களும்
 கூலமென்றால்
 கோர்த்தெடுத்த மாலையே…கவிதை!

 அத்தனை பிள்ளைகளின்மேல்
 அன்பிருந்தாலும்
 செல்லப் பிள்ளையே….கவிதை!

 கவிதை…
 எழுதியவர் பிரசவித்தபின்
 வாசிப்பவர் கருவுறும் விந்தை.

 கவிதை…
 காட்டாறு எனினும்
 வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு.

 கவிதை…
 கதையோ கட்டுரையோவல்ல
 வரி வரியாய் வாசிக்க,
 வரிகளுக்கிடையே வாசிக்கப்படும் வசியம்.

 கவிதையில் மட்டுமே…
 வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
 வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்

 கவிதையில் மட்டுமே
 காகிதங்கள் கருவுறும்
 காரியங்கள் உருப்பெறும்

 வானவில்லை மொழி பெயர்த்தால் கவிதை!
 வாசமுல்லை வழி வாய்த்தால் கவிதை!
 கானகத்துக் குயில் பாட்டும்
 காமமற்ற காதலும்தான் கவிதை!

 தேசிய கீதமும் கவிதை
 நேசிக்கும் பாஷையும் கவிதை
 சாரள வெளிச்சமும் கவிதை
 சூரியப் பிரவாகமும் கவிதை

 மின்மினி வெளிச்சமும் கவிதை
 மின்னாத இருளும் கவிதை
 சொல்லிய வார்த்தைகளும் கவிதை
 சொல்லாத வெற்றிடமும் கவிதை

 வட்டத்துக்குள் அடங்க
 ஆரமல்ல கவிதை
 மாதத்துக்குள் முடிய
 வாரமல்ல கவிதை

 வாசிக்கத் திணற
 கவிதை பாரமுமில்லை
 வார்த்தைகளுக்குள் அடங்க
 கவிதைக்கு நேரமுமில்லை.

 எது கவிதை?
 கரம் கொண்டு விதைத்தால்
 மரம்
 கருவிதை விதைத்தால்
 கவிதை!!!


5 comments:

ஷர்புதீன் said...

nice

புல்லாங்குழல் said...

கருத்துக்கு நன்றி ஷர்புதீன்.

அரபுத்தமிழன் said...

very very nice.
கவிஞர் பற்றி மேலும் அறியத்தரலாமே.

Chitra said...

கவிதை குறித்த இலக்கணங்களும் கருத்துக்களும் கவிதை தொகுப்புகளும் அருமையாக வந்து உள்ளன. நல்ல பதிவுங்க.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

ரமலான் நல்வாழ்த்துக்கள்