தோழமையுடன்

Sunday, June 10, 2012

கடந்த கால காட்சி யாவும் கண்ணில் அலையாய் மோதிடும்!

“கடந்த கால காட்சி யாவும் 
கண்ணில் அலையாய் மோதிடும்
சிறந்த காலம் எம்மை விட்டு
சென்றதை மனம் நொந்திடும்”


எங்கள் குருநாதர் (ஷைகு) ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் பிரிவினால் விளைந்த இழப்பை எண்ணி வருந்தும் உள்ளங்ளில் ஒலிக்கும் பாடல் வரிகள் இவை.



“அல்லாஹ்வை அறிந்த இறைஞானிகள் இரண்டு விசயங்களை அதிகமாக செய்வார்கள். ஒன்று குர்ஆன் ஓதுவது. இரண்டாவது பிரார்த்தனை செய்வது. முதலாவது அல்லாஹ் நம்மிடம் பேசுவது. இரண்டாவது அல்லாஹ்விடம் நாம் பேசுவது” "என்பார்கள் என் குருநாதர்.

என் குருநாதருக்கு  மிகவும் நெருக்கமான அவர்களின் ஆன்மீக சகோதரர் ஜமாலிஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள் என் குரு நாதரின் குர்ஆன் வாசிப்பைப் பற்றி ஒரு முறை இப்படி சொன்னார்கள்:

 “உங்கள் ஷைகின் உன்னத அந்தஸ்தை நீங்கள் சரியாக விளங்கவில்லை. அவர்கள் திருமறையின் ஒரே பத்தியை பலமணி நேரம் வாசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கண்களிலிருந்து தாரை தாரையாய் ஆனந்த கண்ணீர் வடிந்து கொண்டிருக்கும். ஒரே பத்தியை விட்டு அவர்கள் பார்வை அகலாது. எத்தனை ஞான விளக்கங்கள் கிடைத்திருந்தால் அப்படி இருந்திருப்பார்கள்” என்று. உள்ளுணர்வுடன் கூடிய நுட்பமான குர்ஆன் வாசிப்பு என்பது பேரின்ப காதல் உரையாடல் அல்லவா!




அவர்கள் குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் இறைஞான அகமியங்களை பேச ஆரம்பித்தால் விளக்கங்கள் அருவியாய் கொட்டும். அந்த  கடல் போன்ற இறை ஞானத்தில் ஒரு சில துளிகளை அவர்களிடம் பருகிய என் போன்ற கடை நிலை மாணவர்களுக்கேஅவர்கள் கூறிய விளக்கத்தின் வெளிச்சத்தில் குர்ஆனை அணுகினால் எத்தனை மகத்தான பொக்கிஷமது என்பது புரிந்தது. அவர்களின் மெய்ஞான விளக்கம் வணக்கத்திற்குரிய அல்லாஹ்வின் மீது மட்டுமல்லநம் வாழ்வின் வட்டத்தில் அன்றாடம் சந்திக்கும் பெற்றோர்மனைவிமக்கள்சுற்றம்நண்பர்கள் என சக மனிதர்களின் மீதும்இன்னும் அதையும் தாண்டி இறைவன் படைத்த அனைத்து படைப்பினங்கள் மீதும் ஒரு நேசத்தை விதைத்தது.

அந்த எங்களன்பு குருநாதர் மறைந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. மறைந்தும் மறையாமல் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் உபதேசங்களை நினைவு கூறும் வருடாந்திர நினைவு தினம்  இன்ஷா அல்லாஹ் வரும் 10 ஜுன் முதல் 12 ஜுன் வரை தமிழகத்தில் லால்பேட்டை ஷரீஃபில் கொண்டாடப்படும். அதில் கலந்து கொள்வதற்காக உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆண்டு தோறும் சீடர்கள் செல்வது வழக்கம்.  இங்கு துபாய், அபுதாபியிலிருந்தும் பல சீடர்கள் இந்த வருடமும் வழக்கம் போல் விழாவில் கலந்து கொள்ள தாயகம் சென்றிருக்கின்றார்கள். அந்த விழாவுக்கு செல்ல முடியாதவர்களுக்கும் புதிதாக அறிமுகம்  பெறுபவர்களுக்கும் அவர்களின் புகைப்படங்களும், உபதேசங்களில் சிலவும் பார்வைக்கு வைத்துள்ளேன்.


புகைப்படங்கள் அனைத்தும் அவர்கள் துபாய் வந்த போது எடுக்கப்பட்டவை. தங்கள் உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் சிரமம் பாராமல் துபாய்க்கு வந்து அவர்கள் விடிய விடிய கண்விழித்து ஞான உபதேசங்கள் செய்த அந்த நாட்களை நினைக்கும் தோறும் கண்கள் கண்ணீரை சொரிகின்றன.




சீடர்களான நாங்கள் எங்கள் குருநாதர் மீது கொண்ட நேசத்தை பார்த்து   “ என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான காதல் ” என கூறுவோர் சிலரும் உண்டு. அவர்களுக்கு:

 “ஃபைஜியை நான் கொண்ட காதல் - அண்ணல்
முஹம்மதர் மேல் கொண்ட காதல்.
முஹம்மதர் மேல் கொண்ட காதல் – அது
அல்லாஹ்வின் மீதுள்ள காதல் .”  
                             
என பாடிய கவிஞர் இக்பால் ஃபைஜியின் வரிகள் தான் எங்கள் தன்னிலை விளக்கம்.


ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள் கூறியவற்றிலிருந்து.......

மூஃமினின் தன்மை
குதிரை லாடம் கிடைத்தால்இதை கொடுத்த அல்லாஹ் குதிரையை கொடுப்பான் என்று நம்புகிறவர் தான் மூமின். 

வணக்கம் என்றால் என்ன?
தன் இஷ்டத்திற்கு வாழ்வதை குழி தோண்டி புதைத்து விட்டு அல்லாஹ்வின் இஷ்டத்திற்கு ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு பெயர் தான் வணக்கம்.

'அல்லாஹு அல்லாஹ்திக்ர்:
யார் 'அல்லாஹு அல்லாஹ்என்று சதாவும் அல்லாஹ்வை அழைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் ராஜ வாழ்க்கை வாழ வைப்பான். அவரை எங்கும் எப்பொழுதும் கேவலப்படுத்த மாட்டான். 

இரண்டு துர்க்குணங்கள்:
சூஃபியாக்கள் சொல்கிறார்கள்: மனிதனிடத்தில் இரண்டு துர்க்குணங்கள் முளைத்து   விட்டால் அதற்கு பிறகு அவனில் இக்லாஸ் என்ற தூய உள்ளம் இருக்காது. ஒன்று தனது தீனுடைய செயல்பாடுகளுக்காக மக்களிடையே நன் மதிப்பை தேடுவது. இரண்டாவதுதான் செய்யக்கூடிய சன்மார்க்க நல காரியங்களுக்கு பகரமாக இந்த துனியாவுடைய பலனை எதிர்பார்ப்பது.

இறை பாதையில் மிக உயர்வான படித்தரம்
இறை பாதையில் மிக உயர்வான படித்தரம் எந்த வினாடியும் தான் அல்லாஹ்விடம் தேவை உள்ளவன் (முஹ்தாஜ் ) என்பதை மறக்காமல் இருத்தல். 

ஈருலக வெற்றிக்கு வழி:
ஈருலக வெற்றி அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்வதில் தான் இருக்கிறது. நம்முடைய எந்த காரியமும் வெற்றியாக வேண்டுமானாலும் அதற்கு ஒரே வழி அல்லாஹு தஆலாவை தியானிப்பது தான். அல்லாஹ்வை கல்பிலும் சிந்தனையிலும் தரிப்படுத்தி கொள்ளுங்கள். அவன் தான் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அருளாளன்.

அல்லாஹ்வால் ஞானம் கொடுக்கப்பட்டவர்
அல்லாஹ் யாருக்கு தன்னை பற்றிய ஞானத்தை கொடுக்கின்றானோ அவர்களை வறுமையில் வைக்க மாட்டான்.

அரசனாக வாழ விரும்பினால்
சிருஷ்டிகளுக்கு மத்தியில் அரசனாக வாழ விரும்பினால்தொழுகையுடைய நேரம் வந்தால் உனது நெற்றியை சஜ்தாவில் வைத்து விடு.

குறிப்பு: அல்லாஹ்வை குறித்த நேரங்களில் வணங்குவதால் பூமியில் அரசர்களை போல் வாழலாம். அல்லாஹ்விற்கு தலை வணங்கியவர்களை அவன் மற்ற சிருஷ்டிகளுக்கு தலை வணங்கும் நிலை ஏற்படுத்த மாட்டான் என்பது கருத்து.

'நான்என்ற வாடை
தரீக்கத்திற்குள் வந்த பிறகும் உங்களிடையே 'நான்என்ற வாடை வீசுமானால்நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை அடைய முடியாது. நான் என்ற அகம்பாவம் வரும் போது அல்லாஹ் உன்னை ஷைத்தானிடம் ஒப்படைத்து விடுகிறான்.

வாழ்க்கையின் நோக்கம்
அல்லாஹ்வை தேடுங்கள்;
அல்லாஹ்வை அடையுங்கள்;
அல்லாஹ்வை நேசியுங்கள்;
அல்லாஹ்வுடன் வாழுங்கள்;
அல்லாஹ்வுக்கு அர்ப்பனமாகுங்கள்.

பொறுமைவீரம்பணிவு பெற வழி
"நபிமார்களின் சரித்திரங்களை படியுங்கள் - பொறுமை வரும்
சஹாபாக்களின் சரித்திரங்களை படியுங்கள் - வீரம் வரும்
வலிமார்களின் சரித்திரங்களை படியுங்கள் - பணிவு வரும்."

ஒருமை இருமை
"சிருஷ்டிகள் ஒரு போதும் அல்லாஹ் ஆக முடியாது. அல்லாஹ் ஒரு போதும் சிருஷ்டியாக முடியாது. ஆனால் அல்லாஹ் இல்லாமல் ஒரு கணமும் சிருஷ்டிகள் இருக்க முடியாது. "




            ஃபைஜி நியூஸ் லெட்டர் ஆசிரியர் ஹுசைன் முஹம்மது ஃபைஜி, அபுதாபி








உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

2 comments:

Anonymous said...

ஒரு உண்மையான ,முரீது,,ஒரு உண்மையான முர்ஷித்தின் ,பிரிவை நினைத்து,
எழுதினாலும்,,,மனதில்,உள்ள,,,,கெட்ட எண்ணங்களை ,,நீக்கும்,சாட்டையடி
சொற்களால்,,,உணர்ந்து,,பாவமன்னிப்பு,கேட்கவைத்தது!
அல்ஹம்துலில்லாஹ்!
அருமை சகோதரரே!நூருல் அமீன்!
அல்லாஹ் ,தங்களுக்கு,,இல்மேலதுன்னியை ,வழங்கி,,ஈருலக
நற்பேறுகளை,வழங்கி,,,பெருமானாரின் அருகில் இருக்கும்,
பாக்கியம் வழங்குவானாக!, ,

HM Rashid said...

”காதலனே! இது மட்டும் நினைக்காதே
உன் பிரிவில் நான் நிம்மதியாய் இருக்கிறேன் என்று.
விளக்கு இரவில் மட்டும்தான் எரியும்
நான் எரிகின்றேன் இரவும் பகலும்.
நயவஞ்சகர்களே! எச்சரிக்கை!
இப்பாதையில் ஒருபோதும் காலடி வைக்காதீர்,
இது காதலின் வீதி,
அனைவருக்குமான பாதை அல்ல.
கிணற்றுக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமாக உள்ளது
எப்படி நான் நிரப்பி வருவேன் மண்பானையை அங்கிருந்து?
பதில் சொல்லுங்கள், குருவே நிஜாமுத்தீனே!
.................. ………………….. ……………….
அறியா மருத்துவனே! அப்பால் போ,
காதலரின் மதத்தில் நிம்மதி என்பது வேறு
இந்த மதுவின் போதை என்பது வேறு
பாடசாலையில் திரட்டிய அறிவு என்பது ஒன்று
காதலின் அடையப்படும் அறிவு என்பது வேறு
…………… ……………… ………...........
கிணற்றுக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமாக உள்ளது
எப்படி நான் நிரப்பி வருவேன் மண்பானையை அங்கிருந்து?