‘உயிர்த்தலம்’ சிறுகதைகளைப் படிக்கும் உங்களுக்கு....

சரி என்பதற்கு உங்களுக்கு
விளக்கம் தேவையில்லை. சரியில்லை என்பதை எப்படி என பார்க்கும் முன்....
இந்திரா
பார்த்தசாரதியின் ‘ஒரு ரூபாய்’ கதையிலிருந்து சில வரிகள்:
“மினி-பஸ் என்பது ஒரு சங்கப் பலகை. அது சாந்தினிசௌக் போய்ச் சேருவதற்குள் குறைந்தது
நூறு பேராவது அதற்குள் இருப்பார்கள். ஆண்-பெண் அனைவரும் பால் உணர்வு நீங்கி, ஆத்ம நிலையில் உறவாடும் இடம். வெயிலில் வதங்கி, வியர்வையில் அனைவரும் உருகி ஒருவர் மீது ஒருவராய் நிற்கும் போது, ஆண்- பெண் உணர்வு எங்கிருந்து வரும்? காமத்தைக்
கடக்க உதவும் மினி-பஸ் ஒரு
தெய்வ சந்நிதானம், சந்தேகமே இல்லை. அல்லது மினி-பஸ் கி.பி 2000ல்
இருக்கப்போகும் பாரதமா? எலிப் பொறியில் அகப்பட்ட எலிகள் ஒன்றையன்று அடித்துக் கொண்டு சாகின்றன.”
நூறு பேரைச் சுமக்கும் மினிபஸ் என்பதை நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் கூறாகச் சொல்லத் துவங்கி அதையே எதிர்கால பாரதத்தின் குறியீடாக விரிப்பது, இந்திரா பார்த்தசாரதியின் சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் யுக்தி.
இந்த ஒரு கோணத்தில்
இ.பா.வின் version 2.0 என ஆபிதீன் அவர்களை சொல்லலாம்.
புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து என்பார் ஜெயமோகன். ஆபிதீன் அவர்களின் எழுத்தும் வாழ்வின்
நெருக்கடிகளை நகைச்சுவையாக்கிக் கடக்க முயலும் தியானம் தான்.
பரந்த விஷயஞானமும், சுய எள்ளலும், எல்லா புனிதங்களையும்
கேள்விக்குள்ளாக்கும் ஹராமித் தனத்தையும் ஒருங்கே கொண்டவை அவரது கதாபாத்திரங்கள்.
நாகூரின் வட்டார வழக்கில்
எழுதப்பட்ட இந்த version 2.0 வின் சிக்கலும், அழகும் அதன் வட்டார வழக்குத் தான்.
‘வாழைப்பழம்’ என்ற ஆபிதீன் நானாவின் கதைக்கு கொள்ளை அழகான எழுத்துக்கு நடுவில் ‘ஆபாசம்’ கலந்து நிற்கிறது என நான் முகநூலில் அங்கலாய்த்திருப்பதற்கு, வாழைப்பழ கதைக்கே இத்தனை ஆதங்கம் எனில் ஆபிதீனின் ‘தினம் ஒரு பூண்டு’க்
கதையை டெட்டாலால் கழுவி
விட்டுத்தான் படிப்பீர்களா என கேள்வி எழுப்பி
இருந்தார் Sadayan Sabu.
( ‘வாழைப்பழம்’,
‘தினம் ஒரு பூண்டு’ இரண்டு கதைகளும் இந்த தொகுப்பில் இருக்கிறது.)
இப்படி எல்லாம் ஏன் இவர்
எழுத வேண்டும் கேட்டால்,
"நாட்டில் நடப்பைதை
சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம்
ஏன் நடக்கிறது" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இவையெல்லாம்
ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டு
தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான்
சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான்
வருத்தம்." என ஜி. நாகராஜன் போல சொல்ல முடியாது.
ஏனென்றால் ஆபிதீன் அவர்களின் கதைக்களம் வேறு, நாகராஜனின் கதைக்களம் வேறு. திரு நாகராஜனின் கதைக்களம் முற்றிலும் மாறுபட்ட உலகம். அந்த சூழலுக்கு அது தேவைப் பட்டிருக்கலாம். மேலும், வேறு சிலரைப் போல
நரகல் நகைச்சுவையை added attraction ஆகக் கொண்டு தூக்கி
நிறுத்த வேண்டிய தேவை ஆபிதீனின் கதைகளுக்கில்லை. அன்றாட வாழ்வின் இக்கட்டான
சூழ்நிலைகளை, வாழ்வின் நெருக்கடிகளை நகைச்சுவையாக்கி எளிமையாகக் கடக்க உத்வேகமளிக்கும் motivation
தான் அவர் எழுத்தின் மிகப் பெரிய பலம்.
எங்களைப் போன்ற எளிய வாசகர்களுக்காக ஆபிதீன் அதிகம்
எழுத வேண்டும். அதுவும் நாவல் எழுத வேண்டும். அதன் மூலம் வைக்கம் பஷீருக்கு பின் ஏற்பட்ட வெற்றிடத்தை ஓரளவு நிறைவு செய்ய ஆபிதீனால் முடியும் என்பது
என் தாழ்மையான கருத்து.
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
No comments:
Post a Comment