தோழமையுடன்

Tuesday, November 29, 2011

இஸ்லாத்தில் இசை – நூல் அறிமுகம் : ஏபிஎம். இத்ரீஸ்


இஸ்லாத்தில் இசைஎன்ற கருத்தாக்கம் அறபு முஸ்லிம் சிந்தனைப் பரப்பில் மட்டுமல்ல இஸ்லாம் பரவிய ஆசிய சமூகங்களிலும் பெரும் வாதவிவாதங்களை இன்றுவரை கிளறிவிட்டுள்ள ஒரு விவகாரம் என்பதை நாம் நன்கறிவோம்.


நாம் வாழும் இப்பின்நவீன யுகத்தில் மட்டுமல்லாது பல நூற்றாண்டுகளாக எமது பாரம்பரியத்தில் இவ்விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. கருத்தியல்கள் அல்லது சிந்தனைகள் அடிப்படையில் ஒரு தேசம் உருவாகிய பின்பும் அதன் கோட்பாடு சார்ந்த வாதவிவாதங்கள் முடிவடையாமல் தொடர்வதைப் போல அழகியல் பற்றிய அல்லது நுன்கலை பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு குறித்த வாதமும் இந்த வகையிலேயே நோக்கப்பட வேண்டும்.
ஹந்தஸத் அஸ்ஸவ்த் ஒலி தொழில்நுட்பம்குறித்த ஆய்வு அறபு இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட நெடும் பாரம்பரியத்தைக் கொண்டது. பதிற்றுக்கணக்கான இமாம்கள், சட்ட வல்லுனர்கள், பிற துறை சார்ந்தவர்கள் இந்த ஒலித் தொழில்நுட்பத் துறையிலும் பெரும் பங்காற்றியுள்ளனர். சென்ற நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிக் ஓர்னமென்டேஷன்என்ற இஸ்லாமிய அழகியல் கலைகள் பற்றிய மிக விரிவான ஆய்வை முன்வைத்த இஸ்மாயில் பாரூக்கியும் அவரது துனைவியார் லம்யா அல் பாரூக்கியும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்கள் எனக் கருதுகின்றேன். இஸ்லாத்திற்கு ஒரு நாகரீக பதிலீட்டை கோரிநிற்கும் முகமாகவே இவ்வாய்வுகள் மேற்கிளம்பி வருகின்றன. இஸ்லாம் வெறும் இலட்சியவாதமாகவன்றி அது நடைமுறைச் சாத்தியமான பண்பாடாக முன்வைக்கும் வகையிலேயே மேற்குறித்த ஆய்வுகள் நம்மை வந்தடைகின்றன.
முஸ்லிம்கள் இந்த இடத்தை வந்தடைவதற்கு, இஸ்லாத்தில் இசை பற்றிய எதிர்மறைப் பார்வைகள் அல்லது பத்வாக்கள் பொதுமைப்படுத்தப்பட்டு அனைத்து வகையான இசை முயற்சிகளையும் அல்லது ஒலித் தொழில்நுட்பம் குறித்த எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்ற நிலைக்கு சென்றமை மிக முக்கியமான காரணியாகும். மற்றது பாடல், இசை, இசைக் கருவிகளை தடைசெய்து வந்துள்ள பலவீனமான ஹதீஸ்களை அப்படியே எந்தவித விமர்சனமுமின்றி வரலாறு நெடுகிலும் பரிவர்த்தனை செய்தமையும் காரணமாகும். இசை இன்றி எந்தவொரு வழிபாடும் பண்பாடும் உலகில் கிடையாது. முஸ்லிம்களால் நம்பப்படும் தாவூத் நபிகள் இசை மூலமே வழிபாடு செய்தார். அவர் இறைவனால் அருளப்பட்ட வார்த்தைகளைமிஸ்மார்எனும் யாழ் கருவி மூலமே இசைத்தார் எனவும் அப்போது மொத்த இயற்கையிலுள்ள அத்தனை ஜீவராசிகளும் அதற்கு கட்டுண்டு கிடந்ததாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய வழிபாடுகளில் அடிக்கடி ஓதப்படும் அல் பாதிஹா அத்தியாயம் ஏழு ஸ்வரங்களைப் போல ஏழு வசனங்களும் தனியான இசைத் தன்மை கொண்டது. அல்குர்ஆனை முறைப்படி ஓதுவதற்கு பயன்படும் தஜ்வீத் நெறிமுறைகள் இசைக் குறியீடுகளே.

இஸ்லாத்தில் இசை கலாநிதி முஹம்மத் இமாரா தமிழில் அஷ்ஷெய்க் பி. தாரிக் அலி (நளீமி)நிகழ் வெளியீடு 2011 - பக்கம் 68 – விலை ரூ.180

அந்த வகையில் இஸ்லாத்தில் இசைஎன்ற கலாநிதி முஹம்மத் இமாரா அவர்கள் எழுதிய அஷ்ஷெய்க் பி. தாரிக் அலி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நிகழ் பதிப்பகத்தால் அழகிய வடிவமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்நூல் தமிழ் வாசகப் பரப்பில் காத்திரமான பணியாகும். நான் அறிந்தவரை இஸ்லாத்தில் இசை பற்றிய எதிர்மறைச் சிந்தனைகள் நிரம்பிய தமிழ் வாசகப் பரப்பில் இசை பற்றிய சமன் செய்யப்பட்ட பார்வை ஒன்றை முன்வைக்கும் இரண்டாவது நூலாக இதனைக் கருதுகின்றேன். பல தசாப்தங்களுக்கு முன்னர் அப்துல் வஹாப் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவின் ஓர் அத்தியாயமான கிதாபுஸ் ஸமாஃ இசை கேட்பதிலுள்ள இஸ்லாத்தின் ஒழுங்கள்என்ற நூலுக்குப் பின் வருகின்ற இரண்டாவது வரவாக இதனைக் கொள்ளலாம்.

அல்குர்ஆன் சுன்னாவின் ஒளியில் பாடலும் இசையும், கருத்து முரண்பாடுகளுக்கான காரணங்கள், பல்வேறு சட்டமரபுகளின் பார்வையில் இசை பற்றிய கருத்துக்கள், நுன்கலைகள் பற்றிய இஸ்லாத்தின் பொதுப் பார்வை ஆகிய பெருந்தலைப்புக்களில் இந்நூலில் இஸ்லாத்தில் இசை பற்றிய ஆராயப்படுகின்றது. இசை பற்றிய உடன்பாடான நிலைப்பாட்டை எடுக்கும் போதே எமக்கான மாற்றீடுகளை உருவாக்கும் முயற்சியில் நாம் முனைப்போடு செயற்பட முடியும். வெறும் பத்வாக்களையும் சமயவாதப் பிரதிவாதங்களையும் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருப்பதால் மாற்றீடுகளை உருவாக்குகின்ற பணி தாமதப்படும் என்பதில் சந்தேகமில்லை. நமது பாரம்பரியத்தில் இசை பெற்றுவந்த வகிபாகத்தையும் அதில் புலமை வாய்ந்த கலைஞர்களையும் அவர்களது சாதனைகளையும் இசை முயற்சிகளையும் கோவைப்படுத்துவதும் மறுவார்ப்புச் செய்வதும் அத்தகைய கலைஞர்களுக்கான வாய்ப்புக்களை சமூகக் களத்தில் பெற்றுக் கொடுப்பதும் முஸ்லிம் இசை மரபை ஒரு பயில் நிலை கற்கை நெறியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதுமே இன்றைய எமது தேவையாக இருக்கின்றது. எனவே நிகழ் பதிப்பகமும் எதிர்காலத்தில் இசையை பயில்வதற்கான வெளியீடுகளை கொண்டுவர வேண்டுமென ஆசைப்படுகின்றோம்.

நன்றி: எபிஎம் இத்ரீஸ் -  உரிமைப்பதிலீடுகளற்ற உலகு

7 comments:

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

1. ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****


2. தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம். தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது விடியோ காணவும்


.

அரபுத்தமிழன் said...

//இஸ்லாமிய வழிபாடுகளில் அடிக்கடி ஓதப்படும் அல் பாதிஹா அத்தியாயம் ஏழு ஸ்வரங்களைப் போல ஏழு வசனங்களும் தனியான இசைத் தன்மை கொண்டது. ‘ஸபுஉமதானி’ என்பது கூட ‘சரிகமபதநி’ என்பதையே நினைவூட்டுவதாகவுள்ளது. //

கேட்குறதுக்கு நல்லாதான் இருக்கு ஆனாலும் பயமாயிருக்கு.

புல்லாங்குழல் said...

நியாயமான பயம். அந்த ஒற்றை வரியை நீக்கிவிட்டேன். சாரி இத்ரீஸ் பாய்.

Anonymous said...

SEE HERE WHAT DR KVS HABEEB MOHAMED SAYING ABOUT MUSIC IN ISLAM

http://youtu.be/xzrmAm1k5-0

Ibn Thahir said...

ஓ. நூருல் அமீன் அவர்கள் பரிந்துரை செய்தாலும் "நளீமீ" ஒருவரால் தமிழுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு படைப்பு எந்தளவு தூரம் அஹ்லுஸ் ஸுன்னாவுடன் உடன்பட்டிருக்கும் என்ற சந்தேகம் உள்ளூர இருக்கத்தான் செய்தது. நண்பர் ஒருவரின் மூலம் ஒரு "ஸலபி" புத்தக நிலையத்தில் இந்த புத்தகம் இருப்பதை உறுதி செய்ததும் எனது சந்தேகம் இரட்டிப்பானது.

புத்தகத்தை வாங்கி படித்து முடித்ததும் எனது சந்தேகம் பெருமளவு பிழை என்றே பட்டது. கலாநிதி இமாரா இசையை அதன் வரிகள், தன்மை மற்றும் அது இசைக்கப்படும் சூழல் என்பவற்றை வைத்து வாஜிபாக, சுன்னத்தாக, மக்ரூஹாக, ஹராமாக பிரிக்கலாம் என்கிறார். ஆனால் அக்கருத்தை நியாயப்படுத்தும் சாக்கில் அதிகளவில் இப்னு தைமியாவை பயன்படுத்தியதையும், ஆங்காங்கே இப்னு தைமியா ஸுபிகளின் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கூறிய வார்த்தைகளையும் இடையிடையே லாவகமாக புகுத்தியிருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.

இப்னு தைமியா இசையை ஆதரித்தவர் என்ற செய்தி சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இசையை ஆதரித்தவர்களில் இமாம் காழீ அபூபக்கர் இப்னுல் அரபி, இமாம் ஷவ்கானி ஆகியோரை குறிப்பிடாமல் விட்டது குறைபாடே. எனினும் இசை குறித்த ஆய்வில் தமிழில் வெளிவந்துள்ள மிக முக்கியமான ஒரு புத்தகம் இது என்பதில் சந்தேகமில்லை.

fazhan nawas said...

இஸ்லாமிய கலை, இலக்கிய, இசை, வரலாற்று உள்ளிட்ட துறைகளுக்கு சூபிகள்
வழங்கிய பங்களிப்பு மகத்தானதாகும். ஸலபிகளின் கோட்பாடுகளை மறைமுகமாகவும்
நேரடியாகவும் ஆதரித்து வரும் இஃவான்கள் இதனை மறைமுயன்றாலும் கூட்.
இஃவான்களைப் பொறுத்தவரை இரட்டை வேடம் பூண்டு இலங்கையில் தமது இருப்பை
உறுதிப்;படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எவ்வாறாயினும் இந்த நூலாசிரியருக்கு சூபிகளின் பங்களிப்புக்களை எடுத்துக் காட்டுவதில்
இருக்கும் காழ்புணர்வு தான் இப்னு தைமிய போன்றவர்களின் சிந்தனைக் கருத்தை நோக்கி அவரை ஈடுபடுத்துவதில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ளார்.
உதாரணமாக, இலங்கையின் அரபுத் தமிழ் வரலாற்றை பார்க்கும் போது செய்ஹ் அல் செய்லான் முஸ்தபா நாயம் அவர்களின் பங்களிப்புக்களை
எந்த விதத்திலும் மறைக்க முடியாது

புல்லாங்குழல் said...

இப்னு தாஹிர்,ஃபஜன் நவாஸ் உங்கள் அலசலுக்கு நன்றி!நான் இத்ரீஸ் அவர்களின் நூல் அறிமுகத்தைத் தான் பார்க்க முடிந்தது. புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை. நான் தற்சமயம் துபாயில் இருக்கின்றேன். இங்கே புத்தகம் கிடைக்க வழியுண்டா? தகவல் சொல்லவும்.