தோழமையுடன்

Thursday, March 17, 2022

காதலின் நாற்பது விதிகள் நாவல் ஒரு பார்வை

ஆசிரியர் : எலிஃப் ஷஃபாக் 

 தமிழில் : ரமீஸ் பிலாலி

அழகிய தமிழில் புகழ்பெற்ற இந்த நாவலைப் படிக்கும் போது என்ன ஒரு வசீகரமான கட்டமைப்பு  இப்படி  ஒரு ஆன்மிக நாவலை நாம் முயசித்தால் என்ன என்ற ஆசை எழுந்தது. அதே நேரத்தில் வெறும் சரித்திர நாயகர்களாக மட்டுமின்றிஆயிரக் கணக்கான மக்கள் இன்றும் பின்பற்றும் ஆன்மிக வழிகாட்டிகளாக இருப்போரின் வாழ்க்கையைஉபதேசங்களை எழுத்தாளர் புனைவின் வழியே தன் சொந்த கருத்தைப் புகுத்தி வடிவமைக்கும் நிலையின்   விபரீதத்தை எண்ணும் போது கூடவே அச்சமும் எழுந்தது. இனி நாவலைப் பார்ப்போம்:    

21ஆம் நூற்றாண்டு,13ஆம் நூற்றாண்டு என இரு வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கிறது  எலிஃப்  ஷஃபாக்கின்  “காதலின் நாற்பது விதிகள்”.  

21 ஆம் நூற்றாண்டு  - எல்லாவின் கதை 

குளத்தில் எரிந்த கல்லைப் போலச் சலனமற்ற    எல்லாவின் வாழ்வில்  வந்து விழுந்தது ‘காதல்’. காதலில் விழுந்த எல்லா இளம் பெண்ணுமல்ல!. இது வழமையான   காதல் கதையுமல்ல!.

நாற்பது வயதான எல்லா ரூபன்ஸ்டீன் தன் மூன்று   குழந்தைகளைச்   சுற்றியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அந்த அரவணைப்பையே      தன் வாழ்வின் இன்பமாகக் கருதி வாழ்ந்து வந்த அன்பான இல்லத்தரசி. அவளையே சுற்றி வந்த சிறுபிள்ளைகள் வளர்ந்து விட்ட நிலையில் அவளது அரவணைப்பும்,   வழிகாட்டுதலும்   அவர்களுக்குத்    தேவைப்படவில்லை      என்ற உண்மை  எல்லாவுக்கு அதிர்ச்சியூட்டியது. அதே நேரத்தில் பிற பெண்களுடன் இன்பம் காணும்   கணவனின் துரோகமும் சேர்ந்து கொள்ள அவள் அழகிய இல்லத்திலும்உள்ளத்திலும் தனிமையும்,   வெறுமையும் இருளாய் சூழ்ந்து கொண்டது.இது ஒரு சராசரிகதைதானே எனப் பொறுமையிழந்து விடாதீர்கள்.    இதன் Narration    முற்றிலும் வேறு ரகம்.

வாழ்வின் வெறுமையைப் போக்க ஓர் இலக்கிய நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினாள் எல்லாஅங்கு 13 ஆம் நூற்றாண்டின் சூஃபி கவிஞர் மௌலானா  ரூமி   மற்றும்   ஷம்ஸ் தப்ரேஸின் வாழ்க்கையை அடிப்படையாகக்     கொண்ட ஒரு புனைவின்   கையெழுத்துப் பிரதியை வாசிக்கும் வேலை   எல்லாவுக்கு   தரப்படுகின்றது.   காதலின் நாற்பது விதிகளைக்   கொண்டதாகக்    கதைக் களனை அமைத்திருந்தார் கதாசிரியர்   அஜீஸ் z.ஜஹாரா.   கொஞ்சம் கொஞ்சமாக, அவரையே தன் மனதின் வெற்றிடத்தை அன்பால் நிரப்ப வந்த ஷம்ஸ் தப்ரேஸாக வரித்துக் கொள்வதில் தொடர்கிறது     எல்லாவின் கதை..

13 ஆம் நூற்றாண்டு  - ரூமியின் வாழ்வில் இறைகாதல் தீபமேற்றிய   ஷம்ஸ் தப்ரேஸின் கதை

ரூமியவர்கள் ஷம்ஸ் தப்ரேஸை சந்திக்கும் முன்பே மார்க்க விற்பன்னராகவும், இறைஞான தத்துவங்களை அறிந்த தத்துவவாதியாகவும் புகழ் பெற்றவர் தான். மௌலானா ரூமியின் மனதில் இறைகாதல் தீயைப் பற்ற வைத்து ஞான கவிகளின் பேரரசராக அவரை மாற்றியது ஷம்ஸ் தப்ரேஸின் சகவாசம்.    

ஷம்ஸ் தப்ரேஸ்(ரஹ்) அவர்கள் மௌலானா ரூமி(ரஹ்) வாழ்வில் வந்ததால் ஏற்பட்ட மாற்றத்தை மௌலானா ரூமியவர்கள் கூற்றாக இப்படிச் சொல்லப்படுகின்றது.   

The fruit of my life is no more than three words -

I was raw, I was cooked, I was burned.

மனதைச் சுத்தம் செய்யும் சூஃபி வழி

வாழ்வின் போக்கில் பல்வேறு கற்பிதங்களால் களங்கமுற்ற மனம் என்பதை விஷத் தன்மை கொண்ட மரங்கள் அடர்ந்த காட்டுக்கு    உதாரணமாகச் சொல்லப்படுகின்றது.

அந்த விஷ விருக்ஷங்களை அழித்து காட்டை  சுத்தம் செய்ய இரண்டு வழிகள் உண்டு (இது உருவகம் என்பதால் மரங்களை அழிப்பது சுற்றுச் சூழல் பிரச்சனையல்ல என்பதை மறந்து விட வேண்டாம்).  காட்டை  சுத்தம் செய்வதில் முதல் வழி ஒவ்வொரு மரமாய் வெட்டி வீழ்த்துவது.  இந்த வழியில் காட்டை சுத்தம் செய்யப் பல வருடங்களாகும். இரண்டாவது வழி மரத்தில் தீயைப் பற்ற வைப்பது. அந்த தீ மரங்களை சில மணி நேரங்களில் அழித்து  காட்டை சுத்தம் செய்து விடும். இங்கே தீ என்பது இறைகாதலின் குறியீடு. ஞான விளக்கங்களின் வழியே ஆன்மிக சாதகனின்  மனதைச் சன்னம் சன்னமாகச் சுத்தம் செய்யும் போதே இறைகாதல் தீயை மூட்டி மனத் தூய்மையைத் துரிதப்படுத்துவது    சூஃபியாக்களின் வழி.

ரூமி என்ற தத்துவஞானியை இறைகாதல் வழியே அனுபவ ஞானத்தின் அடுத்த    கட்டத்துக்கு (மக்காமுக்கு) அழைத்து சென்றவுடன் பிரியாமல் பிரிந்து சென்று விடுகின்றார் ஷம்ஸ் தப்ரேஸ். மௌலானா ரூமீயின் புகழ் பெற்ற மஸ்னவி 25,000 ஈரடி செய்யுள்களைக் கொண்டது. அதை விட பெரியது 40,000 ஈரடி  செய்யுள்களைக் கொண்ட தீவானே ஷம்ஸ் -இ- தப்ரேஸ் எனும் இறைகாதல் காவியம்.

குருவிடம் நான் கொண்ட காதல் –அது

முஹம்மதர் மீதுள்ள காதல்! - அண்ணல்

முஹம்மதை நான் கொண்ட காதல் – அது

அல்லாஹ்வின் மீதுள்ள காதல்!

எனப் பாடுவார் மறைந்த என் ஆன்மிக நண்பர் கவிஞர் இக்பால் ஃபைஜி.

மஜ்னூனின் கண்களால் தான் லைலாவின் அழகைக் காண முடியும் எனச் சொல்லப்படுவதைப் போல ஷம்ஸ் தப்ரேஸின் அக அழகைத்    தரிசிக்க மௌலானா ரூமியின் கண்கள் வேண்டும். அதன் அந்தரங்கம் (ஹகீகத்) இந்த கட்டுரையின் விவரணத்திற்க்கப்பாற்பட்டது.

மௌலானா ரூமியிடம் ஷம்ஸ் தப்ரேஸ் கொண்ட அதீத செல்வாக்கைக் கண்டு அதைத் தாங்கிக் கொள்ள முடியாத  பொறாமைகாரர்கள்  அவரைக்   கொன்றுவிட்டார்கள்.  அவரது அடக்க ஸ்தலம்  கொன்யாவில் உள்ளது எனச் சொல்பவர்களும் உண்டு. அந்த அடிப்படையில் அமைந்தது தான் இந்த நாவல். ஆனால் ரூமியின் வாழ்வையும், கவிதைகளையும் ஆய்வு செய்து Rumi:Past and Present, East and West எழுதிய கட்டுரையாளர் Franklin Lewis இதற்கான வலுவான ஆதாரங்கள் ஏதுமில்லை என மறுப்பதாக William C. Chittic தனது Me and Rumi – The Autobiography of Sham-i. Tabrizi என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஷம்ஸ் தப்ரேஸ், மௌலானா ரூமீயின்  கூற்றுகளிலிருந்து சுயசரித பாணியில் தொகுக்கப் பட்ட “மகாலாத்தே ஷம்ஸ் தபரேஸ்” என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு தான் Me and Rumi.   ஷம்ஸ் தப்ரேஸின் அடக்க ஸ்தலம் இரானில் குய் (khuy) என்ற இடத்தில் இருப்பதாகவும் அதில் கூறப்படுகின்றது. Me and Rumi என்ற நூல் அஜீஸ்z. ஜஹாராவின் அறையில் காணப்பட்டதாக இந்த நாவலில் வருவதும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.

புனைவு என்ற வகையில் ஏதோ ஒரு அடிப்படையில் கதாசிரியர் எழுதுவது தவறல்ல என்றாலும் ஷம்ஸ் தப்ரேஸ் அவர்கள் அடிப்படையில் இஸ்லாமிய சட்டக்கலையில் தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞராவார்.அவர் ரூமியை சந்திக்க கொன்யாவிற்கு வந்த போது மார்க்க அடிப்படையில் பிற   அறிஞர்களையும் சந்தித்து அடிக்கடி உரையாடி இருக்கின்றார் என்றும் மார்க்க விசயத்தில் அவர்களின்      குறைகளைச் சாடியிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. அத்தகையவரை புனைவு என்ற பெயரில் மார்க்கத்தை மீறுபவராகக் காட்டுவது புனைவின் வழியே நிகழ்ந்த வரலாற்றுத் திரிபு வேலையும்    வன்மையாகக் கண்டிக்கதக்கதுமாகும்.

சூஃபியிசம் “சமய கட்டுபாடுகளைலிருந்து விடுதலை பெற்றது” எனச் சிலர் வலியுறுத்தக் காரணம் அதன் உலக பொதுமைக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அவர்களின் கற்பனையினால்தான் என்கின்றார் மார்டின் லிங்ஸ். ஒருவேளை எலிஃப் ஷஃபாக்கின் புனைவில் இந்த மேற்கத்திய மனோபாவம் வெளிப்பட்டிருக்கக் கூடும்.

உண்மையில் சூஃபி ஞானிகள் குர்ஆன் சொல்லும் ‘எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம்’ என்பதைத் தரிசன உண்மையாய் கண்டவர்கள். அவர்கள் எப்போதும் இறை முன்னிலையில் இருப்பதால் மார்க்க வரம்புகளைப் பேணுவதில் சாமானியர்களை விட மிகவும் சிறப்பாக முன்னிற்பவர்கள்.

 அதே நேரத்தில் அவர்கள் மார்க்க கோட்பாடுகளைக் கடுமையாக்குபவர்களுமல்ல.

சூஃபிகளுக்கெல்லாம் தலைவரான முஹம்மது நபி (ஸல்) ஒரு விசயத்தைச் செய்வதில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வழிமுறைகள் இருக்கும் போது அதில் எளிதானதையே மக்களுக்குப் பரிந்துரைக்கச்    செய்வார்கள்.அது தான்   சாமானியர்களுக்கு     நபிகள் காட்டிய வழி. அந்த நபிவழி தான் சூஃபி வழி.

‘எல்லா சிருஷ்டிகளையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான்’ இறைஞானம் வந்ததற்கான அடையாளம் என்பார்கள் எனது ஞான குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்). சூஃபியிசத்தின் அந்த மனிதநேய பகுதியை அழகாகச் சொல்லி இருக்கிறது இந்த நாவல். புனைவு என்ற வகையில் எலிஃப் ஷஃஆக்கின் இந்த நாவலின் விஷேச கட்டமைப்பு ஒரு தனித்த பாணியில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.  உலகப் புகழ் பெற்ற இந்த நாவலைத் தமிழுக்குத் தந்ததற்காகச் சீர்மை பதிப்பகத்திற்கு நன்றி! ரமீஸ் பிலாலியின் மொழிபெயர்ப்பு இந்த நாவலில் சிறப்பான   உச்சத்தைத் தொட்டு வாசிப்பை இனிமையான அனுபவமாக மலர செய்திருக்கிறது   ரமீஸுக்கு வாழ்த்துகள்!. இன்னும் சிறப்பான பல மொழிபெயர்ப்புகளை அவர் வழங்க ஆசிக்கின்றேன்!   


 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Wednesday, February 16, 2022

நூலாய்வு : விடுதல்களும் தேடல்களும் (கட்டுரைகள்)

நூல் : விடுதல்களும் தேடல்களும் (கட்டுரைகள்)
ஆசிரியர் : கவிஞர் நிஷா மன்சூர்
சுத்த பரிபூரணச் சுகவாரி தன்னிலோர்
சொட்டாகினுந் தொட்டபேர்
நல்லவர்கள் நல்லவர்கள் நல்லவர்க ளென்றைக்கு
நானு(ம்) நல்லவனாவனோ!
குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் கவிதை வரிகள் இவை. பேரின்ப கடலில் குடம் குடமாய் அள்ளி பருகிய தன் ஆன்மிக உச்சத்திலிருந்து இறங்கி வந்து அதில் ‘சொட்டாகிலும் தொட்டு விட‘ நம்மை அழைக்கும் தாய்மையின் கருணை வரிகள் இவை.
இத்தகைய ஞான கவிதைகள் வழியே தமிழ் வளர்த்த இறைஞானிகளின் ராஜபாட்டையில் நம்மை அழைத்துச் செல்கிறது விடுதல்களும் தேடல்களும் என்ற நிஷா மன்சூரின் கட்டுரை தொகுப்பு. குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பாவில் ஆரம்பித்து தமிழகத்தை சார்ந்த இறைஞானிகளின் கவிதைகளில் தொடர்ந்து மௌலானா ரூமி வரை ஞானத்தேனள்ளி நம்மைப் பருக செய்திருக்கிறார் ஆசிரியர்.
இதே வகையில் ...
சத்திய மூர்த்தியின் ‘தாகங்கொண்ட மீனொன்று’ எனும் மௌலானா ரூமியின் கவிதைகள்.
'ரூமீ கவிதைகள்’என்ற தலைப்பில் எழுதிய தமிழன்பனின் கவிதைகள்.
கணேஷ் வெங்கட்ராமின் தமிழாக்கத்தில் உமர் கையாமின் ‘ரூபையாத்,
ரமீஸ் பிலாலியின் மொழியாக்கத்தில் ஷெய்கு பஹாவுதீன் வலது அவர்களின் ‘நீருக்குள் மூழ்கிய புத்தகம்’
இன்னும் எனது ‘கனவுக்குள் கனவு’ சூஃபி நாவலுக்கு எழுதிய மதிப்புரைகள்
அனைத்தும் நேர்த்தியான ஆன்ம விருந்தாகப் படைத்திருக்கிறார்.
நிஷா மன்சூரின் அழகிய விளக்கத்தால் ஆகர்சிக்கப்பட்டு அந்த ஞான கவிதை நூல்களைக் கையிலெடுத்தால் ஞானிகள் சென்ற அந்த ராஜபாட்டையின் திக்குத் தெரியாமல் அலைய நேரிடலாம் அஃபிஃபீயைப் போல.
இரண்டாம் உலகப் போருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக, புகழ் பெற்ற எழுத்தாளர் நிக்கல்ஸன் தன்னுடைய எகிப்திய மாணவராகிய அஃபிஃபீயிடம் ஷெய்குல் அக்பர் இப்னு அரபி (ரஹ்) அவர்களின் படைப்புகளைப் படிக்கச் சொன்னார். அஃபிஃபீ ‘ஃபுஸுசுல் ஹிகம்’ நூலைப் பல முறை படித்தும், கஷானியின் விரிவுரை விளக்கத்தைப் படித்தும் கூட தன்னால் அதில் இருக்கும் எந்த விஷயத்தையுமே பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தனக்கு இதுவரை அரபு மொழியில் எழுதப்பட்ட எந்த நூலும் இது போன்று கடினமாக இருந்ததில்லை என்றும் இதுவே முதன் முறை என்றும் பேராசிரியர் நிக்கல்ஸன் அவர்களிடம் கூறியதாக The Diffusion of Ibn 'Arabi's Doctrine என்ற கட்டுரையில் Michel Chodkiewicz குறிப்பிடுகின்றார்.
வருணனைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளின் ஏகாந்த இருப்பின் விளக்கம் என்பது மொழிகளுக்கெட்டா மர்மமாகும். தேன் என்பதை தன் வாழ்நாளில் ஒரு முறை கூட சுவைக்காத ஒருவனுக்குத் தேனின் சுவையை விளக்க முடியாது. சுவைத்தவனுக்கோ அதன் விளக்கம் தேவையிராது.
தேனின் சுனையைக் கூட எழுத்தில் வடிக்க முடியாத போது. ‘தவ்க்’ எனும் பேரின்ப அனுபவ வாயிலாய் இறைஞானிகள் தாம் சுவைத்த பேரின்ப தேனின் சுவையைத் 'தாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம்' எனும் பேராவலால் நமக்களிக்க முனைந்தார்கள்.
சாதாரண பேச்சு நடையில் விவரிக்க முடியாத விஷயங்கள் அவை. உவமைகளால் விளக்க முடியா ஒன்றை ஒரு வகையில் விளங்கிக் கொள்ள பல்வேறு உவமைகளாலும், உருவகங்களாலும் விளக்க அவர்கள் முயலுகின்ற மகா கருணையின் வடிவங்கள் தான் கவிதையாய் கட்டுரையாய் நம்மை வந்தடைந்திருக்கிறது.
ஆகவே, இஸ்லாமிய ஞான கவிதைகளின் வாசிப்பு என்பது ஆழ்மன கவிதை வாசிப்புடன் கூடிய தமிழறிவு, அடிப்படை ஆன்மிக ஞானம், கொஞ்சம் அரபு வார்த்தைகளின் விளக்கம் என பல்வேறு களங்களையும் உள்ளடக்கிய ஒரு நுணுக்கமான முயற்சியாகும் என்பதை மனதில் கொண்டு நாம் வாசிப்பைத் தொடர வேண்டும்.
நிஷாமன்சூரின் கட்டுரைகள் அவரது புலமையைக் காட்டுவதற்காக எழுதப்பட்டவையல்ல. இறை ஞான பொக்கிச அறைகளின் ஒரு ஜன்னலைத் திறந்து அதன் உள்ளே இருக்கும் பொக்கிசத்தை நமக்குக் காட்டித் தருவதுடன் அதைச் சென்றடையவும் நம்மை அன்புடன் அழைக்கிறது.
மீண்டும் அஃபிஃபிக்கு வருவோம்…
மேலே சொன்ன பேராசிரியர் நிக்கல்சனின் மாணவர் அஃபிஃபீ இப்னு அரபியவர்களின் ஞான விளக்கத்தை அறிந்து கொள்வதில் ஏற்பட்ட ஆரம்ப தடைகளால் சோர்ந்து விடவில்லை. அவர் எந்த அளவு தன் முயற்சியில் வெற்றி பெற்றார் என்றால் இப்னு அரபியவர்களின் ஞான விளக்கங்களை ஆராய்ந்து அதை “The Mystical Philosophy of Muhyid Din Ibnul 'Arabî” எனும் நூலாக எழுதினார். இன்று இப்னு அரபியவர்களை கற்க்கும் மேற்கத்திய தத்துவ மாணவர்களுக்குத் தவிர்க்க முடியாத reference book ஆகத் திகழ்கிறது A.A.அஃபிஃபீயின் இந்த நூல்.
பேராசிரியர் நிக்கல்சன் போன்றவர்கள் “சுய முயற்சியின் மூலம் தத்துவ படுத்திய (philosophize) அறிவை அடைந்து கொண்டோம் ஆனால் practicing sufi இல்லையாதலால் ‘தவ்க்’ எனும் அனுபவ ஞானத்தை அடைய முடியவில்லை” என சொல்லுகின்றார்கள்.
அந்த சுத்த பரிபூரணச் சுகவாரி தன்னிலோர் சொட்டாகினும் தொட்டு விட - அந்த பேரின்ப அமுதூட்ட ஒரு ஆசான் தேவை
“இணங்கும் மெய்ஞான பேரின்பக் கடலின்
இன்னமு தெடுத்தெமக்களிப்போன்” என அப்பா தன் ஆன்மிக ஆசானை குறித்து பாடுவது போல
ஒரு முறையான ஆன்மிக குருவின் வழிகாட்டலுடன் ஆன்மிக அகப்பயணம் (சுலூக்) வழியாகத் தான் அந்த நிலையை எட்ட முடியும்.
000000
'வறட்டு சர்ச்சைகளில் வரலாற்றைத் தொலைத்த சமூகமும் புனைவுகளின் வழி வரலாற்றை ஆளும் கற்பிதங்களும்' என்ற கட்டுரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட இஸ்லாமிய சமூகத்தை தம் புனைவுகளில் தவறாகச் சித்தரிக்கும் அறியாமையையும். சரியாக முன் வைக்க வேண்டிய இஸ்லாமியர்கள் சமயம் சார்ந்த சர்ச்சைகளிலேயே மூழ்கிக் கலை இலக்கியத்தில் பின் தங்கி இருக்கும் நிலையையும் பேசுகிறது.
பன்மை சமூக அமைப்புள்ள நம் நாட்டின் இலக்கிய வரலாற்றில் இசுலாமிய புலவர்களும், கவிஞர்களும் எப்போதும் விடுபட்ட படைப்பாளிகளாக இருப்பதையும் அவர்களைக் கொண்டாட வேண்டிய காலத்தின் தேவையையும் முன் வைக்கிறது 'தமிழ் இலக்கிய வரலாறு - விடுதல்களும், தேடல்களும் கண்டடைய வேண்டிய புள்ளிகளும்' என்ற ஆய்வுக் கட்டுரை.
பக்கீர் இசை பாடல்களும், இளைஞர்களின் நற்பணி மன்றங்களும் சார்ந்த nostalgia ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.
இந்த தொகுப்பின் ஆன்மிக சுவையுடன் ஒத்திசைவு பெறாத அகப்பாடல் விளக்கம் பற்றிய கட்டுரையை நிஷா மன்சூர் வேறொரு தொகுப்பில் சேர்த்திருக்கலாம். திருஷ்டி பொட்டு!.
இறுதியாக, கவிஞர் அபியவர்களின் மணிவிழாவுக்காக எழுதப்பட்ட கட்டுரையும் ஒரு போனஸாக இணைந்து வாசிப்பின்பத்தை நல்குகிறது.
ஒட்டு மொத்தத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
இலக்கிய உலகில் நிஷா மன்சூர் இன்னும் விரிவாக தன் பங்களிப்பை தொடர வேண்டும் என்பது என் அன்பான கோரிக்கை.
வெளியீடு:
தேநீர் பதிப்பகம்
24/1, மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர்
ஜோலார்பேட்டை – 635851
தொடர்புக்கு: +91 9080909600
Like
Comment
Share




உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.