தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து
மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப்
பயிலரங்கில் சுந்தர ராமசாமி ஆற்றிய உரை ( 25.03.95) நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும்
எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
ஆர்வம் இருந்தால் எழுதலாம். எல்லோரும் அதைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற
அவசியமும் கிடையாது.அப்படியொரு கட்டாயம்,
சமூகத் தேவை எதுவுமே இல்லை. சிறுகதை எழுதாமல் சிறந்த பிரஜையாக
வாழமுடியும். சிறுகதை எழுதுபவர்களைவிட, படிப்பவர்களைவிட
உயர்ந்த மனிதர்களாக அவர்கள் இருக்கவும் கூடும். சிலர் சிறுகதைகள் படிக்காமல் வேறு
அற்புதமான நூல்களைப் படித்திருப்பார்கள். சிலர் திருக்குறள் படித்திருப்பார்கள்.
சிலர் சிலப்பதிகாரம் படித்திருப்பார்கள். கம்பராமாயணம் படித்திருப்பார்கள். நமது
தலைவர் திரு. ஹமீத் அவர்களின் தகப்பனார் ஆன செய்க்குத்தம்பிப் பாவலர் இருக்கிறார்.
மிகப்பெரிய புலவர். இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரிய புலவர்களில் ஒருவர் என்று
சொல்லலாம். ஆனால் அவர் சிறுகதையை விரும்பிப் படித்திருப்பாரா என்பது சந்தேகம்
தான். அதை வைத்து ஒருவரை நாம் மதிப்பிட முடியாது.