அன்புள்ள அய்யனார் விஸ்வநாதனுக்கு,
பழி நாவலைப் பற்றிய என் முந்தைய பதிவின்
தொடர்பாக சில விளக்கங்கள்.
எண் ஒன்று…..
ஒரு மயிரும் புடுஙக முடியாத இயலாமையின் நிதர்சனம் தந்த
ஆயாசமும் தான் அய்யனாரின் வீட்டுக் கதவுகளைத் தட்ட வைத்தது என்ற வார்த்தைகள்…..
பழைய தமிழ்ப் படங்களில் சண்டைக் காட்சிகளில் கதாநாயகன் வில்லன் எல்லாம் ஆக்குரோசமாக மோதிக் கொண்டிருக்கும் போது.
யாரையும் தாக்க முடியாத காமடியன் எனக்கு கிடைத்தவன் நீ
தான் என ஒரு ஒல்லி குச்சி ஓமக்குச்சியை ஆசாமியைப் பிடித்துக் கொண்டு. ஆய் …ஊய் எனத் தாக்குவது போன்றது. ( ஓமக்குச்சி எனச் சொல்வாயோ
எம் ஆசானை எனச் சீடர்கள்
யாரும் கத்தியை உருவ வேண்டாம். நானும் அய்யனாரின் ரசிக மன்றத்து ஆள் தான்……)
எண் இரண்டு….
இந்த மிருக காட்சி சாலையில் உள்ள கூண்டின் கதவுகள் திறந்து கிடக்கிறது சாமி!. இங்கே மிருகங்களுக்குப் பசியை விற்க வேண்டாம் என்ற வார்த்தைகள்…
சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் ஏற்படுத்திய மன ரீதியான பாதிப்பின் வேதனை இருந்ததனால் இதற்கு எதிரான எல்லா
காரணிகளும் களையப் பட வேண்டும் என்ற வகையில் முன் வைத்த கோரிக்கையே! தவிரத் தாக்குதல் நோக்கம் கொண்ட வார்த்தைகள் அல்ல.
ஒரு புத்தகத்தை படித்ததனால் குற்றங்கள்
நடக்கிறது என்பது நிச்சயமாக முட்டாள்
தனம் தான். ஆனால் ஒரு புத்தகம் நம் உணர்வைச் சிறிதளவு கூட சீண்டாது என்பதுவும் ஒரு வகை அப்பாவித்தனம்
இல்லையா?. (இதை சொல்லுங்கள் கோபால்.. சொல்லுங்கள் என்று சரோஜா தேவி வாய்ஸில் படிக்கவும்)
எளிதில் புறம் தள்ள முடியாத அப்பழுக்கற்ற
உங்கள் எழுத்து திறன் நேசிக்கத்தக்கது. உங்கள் எழுத்தைச் சொற்பமே
வாசித்திருந்தாலும். உங்கள் எழுத்தின்
மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு உண்மை. நண்பரே வீட்டுக்கு வாருங்கள் என அழைத்ததும் sincere ஆக உங்கள் நட்பு நாடியே!. ஆகவே இதை எதிர்ப்பாளனின் வார்த்தையாகப் பார்க்காமல் ஒரு
நண்பனின் கோரிக்கையாகப் பாருங்கள்.
அடுத்து பாலியல் எழுத்தைத் துணிச்சலாக எழுதுவது பற்றி திரு ஜெயமோகன் கூறுவதையும் உங்கள் முன் வைக்க ஆசைப்படுகின்றேன்:
“பாலியல் எழுத்தைத் துணிச்சலாக
எழுதுவது என்பதொன்றும் சிறப்பல்ல. எல்லா எழுத்தாளர்களும் தேவையான துணிச்சலுடன்தான்
எழுதுகிறார்கள். ஆனால் அவ்வாறு எழுதுபவர்களில் எத்தனைப்பேர் அதை நுட்பமாக, மெய்யாக எழுதுகிறார்கள்? கணிசமான தமிழ்
எழுத்தாளர்கள் பாலியல்வரட்சியால் அவதிப்படுபவர்கள். பூஞ்சையான உள்ளமும் அதற்கேற்ற சம்பிரதாயமான
வாழ்க்கையும் கொண்டவர்கள். ஆகவே அனுபவத்திலிருந்து எவரும் எழுதுவதில்லை.
பெரும்பாலும் அவை பகற்கனவின் சித்தரிப்புகள். தஞ்சைப் பிரகாஷ் எழுதியதைப்போல. ஆகவே
பகற்கனவுகளை நாடுபவர்களால் சிக்கத்தக்கவை. உதாரணமாக
ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொருநாளே நாவலில் கந்தன் மீனாவுடன் உறவுகொண்டு
முடிந்ததும் மீனா சுருண்டு கிடந்து அழுகிறாள். உள
அழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு அது. அந்த
அழுகைக்குப்பின் அவள் அதற்கான காரணமாகக் காணாமல்போன தன் மகனைப்பற்றி நினைத்துக்கொள்கிறாள். இது ஆசிரியரின் நுண்ணிய
அனுபவ அவதானிப்பின் வெளிப்பாடு. இத்தகைய இடங்கள் தமிழிலக்கியத்தில் மிகக்குறைவே”
என்கின்றார் ஜெயமோகன்.
முழுவதும் படிக்காமல் விமர்சனம் செய்கின்றாய்
என்ற கேள்வியிலிருந்த நியாயத்தைக் கருதி. உங்கள் பழி நாவலை முழுமையாக
வாசித்தேன். ஒரு சாதாரண கருவை
அழகியலோடு சொல்லும் உங்கள் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது. ஆனால் அதில் விரவி
இருக்கும் மிகை காமம் நாவலின் அழகியல் ஒருமையை வெகுவாக சிதைக்கிறது என்பது என் எண்ணம்.
அமீரகத்தின் சாருவே!, நீங்கள் இன்னும் சிறப்பான உச்சங்களைத் தொட வேண்டும் என்பது என் ஆசை.
பேரன்புடன்,
நூருல் அமீன்
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.