தோழமையுடன்

Thursday, May 14, 2015

எல்லாம் அவனா?




தாத்து ஒன்று – தாத்து இரண்டு அல்லது பல என்ற வேற்றுமையின் விளக்கம்:

தாத்து ஒன்று

“நிச்சயமாக தாத்து, உஜூது என்பன ஒரே அர்த்தத்துக்குள்ள இரு பெயர்களாகும் (இஸ்முகளாகும்). அந்த அர்த்தமாகிறது தாத்தைக் கொண்டும், அஸ்மாக்கள் கொண்டுள்ள கமாலைக் கொண்ட  வாஜிபான ஹக்காகும்”.- ஹைதராபாத் சூஃபி ஹஜ்ரத்.

‘ தாத்து ஒன்று’ என்பவர்கள் ‘தாத்து’ என்பதை ‘உஜுது’ என்றபொருளில் புழங்குகிறார்கள். அவர்களிடம் தாத்து ஒன்று என்பதன் பொருள் உஜுது ஒன்று என்பது தான். உஜுதின் அடிப்படையில் எல்லாம் அவன் என்று கூறுவதுடன் வெளிப்பாட்டின் (ஜுஹுருடைய) மர்த்தபாவில் உஜுது வெளிப்படுத்தும் கைரியத்தின் பாகுபாடுகளை பேணுகிறார்கள்.

 மர்தபயே ஹக்கையும், மர்தபயே ஹல்கையும் அவற்றுக்கு இடையே உள்ள ‘ஐனியத்து’ ‘கைரியத்து’ – ‘ஒன்றாக இருப்பது’ ‘வேறாக இருப்பது’ மசாயிலை தெளிவாக விளங்கி இருக்கின்றார்கள்.


சிருஷ்டியை அல்லாஹ் என்று சொல்லமாட்டார்கள். தாத்து என்றால் உஜுது என சொல்வதால் சிருஷ்டிக்கு தாத்து இல்லை – அதாவது உஜுது இல்லை என கூறுகின்றார்கள்.

சூஃபி ஹஜ்ரத்தின் கீழ் கண்ட வாசகங்களை கவனியுங்கள்:

“ஐனியத்துடைய ஹுக்முகளையும் (சட்டங்களையும்) குணபாடுகளையும் ஐனியத்துடைய மர்தபாவின் பேரிலேயே கட்டுப்படுத்தி வையுங்கள். கைரியத்துடைய ஹுக்முகளையும் குணபாடுகளையும் கைரியத்துடைய மர்தபாவிற்கே சொந்தமாக்குங்கள். 

எப்படி குதிரை, கழுதையானது உயிரினம் என்ற மர்தபாவில் மனிதன் தானானதாக இருந்தும் மனிதனில்லையோ, இன்னும் மனிதன் மாடு, குதிரை, கழுதை, தானானதாக இருந்தும் மாடு, குதிரை, கழுதை இல்லையோ அதேபோல் ஒவ்வொரு அணுவும் உஜுதுடைய மர்தபாவில் ஹக்கு தானானதாக இருந்தும் ஹக்கல்ல! இன்னும் ஹக்கு உஜுதுடைய மர்தபாவில் ஒவ்வொரு அணுவுக்கும் தானானதாக இருந்தும் அணுவல்ல. 

அல்லாஹுத்தஆலாவுக்கும் உலகாதி அணுக்களளுக்குமிடையில் கருத்தில் வேற்றுமை இருக்கிறது என்று தஸவ்வுப் உடைய உலமாக்கள் எல்லோருமே சொல்கிறார்கள். மேலும் அதன் ஹுக்முகளுக்கும் (சட்டங்களுக்கும்) ஆதாறுகளுக்கும் (குணப்பாடுகளுக்கும்) கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ஹக்குத்தஆலாவிற்கும் உலகத்தில் உள்ள அணுக்களுக்குமிடையில் ஒற்றுமையின் விதத்தையும் வேற்றுமையின் விதத்தையும் காட்சியாகவும் அனுபவமாகவும் அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஒவ்வொன்றின் ஹுக்முகளும் குணப்பாடுகளும் அவர்களிடத்தில் அலாதியாக இருக்கிறது. 

அவர்கள் ‘ஜைது’ அல்லாஹ் என்றோ, ‘அம்ரு’ அல்லாஹ் என்றோ, ‘ரூஹு’ அல்லாஹ் என்றோ அல்லது ‘சடம்’ அல்லாஹ் என்றோ சொல்லவில்லை. அவர்களிடத்தில் ‘தஅய்யு’னுடைய மர்தபா லா தஅய்யுனுடைய மர்தபாவை விட்டும் – குறிப்பான மர்தபா குறிப்பில்லாத மர்தபாவை விட்டும் அலாதியானதாக இருக்கும்.

தாத்து இரண்டு 

"தாத்து இரண்டு" என்பவர்களும் "தாத்து ஒன்று" என்பதை உஜுதின் அடிப்படையில் குறிப்பிடும் போது ஒத்துக் கொள்கின்றனர். ஆயினும் இந்த பிரிவினர் அதிலிருந்து வேறுபடுவதற்கான  அடிப்படையை முதலில் விளங்க வேண்டும். அந்த அடிபடை குர்ஆனிய பாணியாகும்.

4:82    وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ

4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

இதைப் போன்ற பல இறைவசனங்கள் 'அல்லாஹ் அல்லாத' கைருல்லாவின் – சிருஷ்டியின் இருப்பை தரிப்படுத்துகின்றன.


குர்ஆன் கூறும் குர்ப், அக்ரபு, மஈய்யத், இஹாதத் எல்லாம் ரப்பு, அப்து என்ற இருமை நிலையின் அடிப்படையிலானது. இருமை இல்லாவிட்டால் குர்ப், அக்ரபு, மஈய்யத், இஹாதத் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே நேரத்தில் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சிருஷ்டியும் அல்லாஹ்வின் உஜுதைக் கொண்டு தான் இருக்கிறது. ஆகவே இருமை என்ற உடன் இரண்டு உஜுது என்று பொருள் கொள்ளக் கூடாது. ஆகவே பிரியாமல் பிரிந்து நிற்க்கும் இந்த இருமை நிலை தெளிவாக அறிய வேண்டிய ஒரு நுட்பமான விசயமாகும்.

மேலும் சிந்தித்து பாருங்கள்.

இரத்தம், பன்றி இறைச்சி, தானாக இறந்தவை ஹராம் என்கிறது இறைவேதம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சிருஷ்டியும் அல்லாஹ்வின் உஜுதைக் கொண்டு தான் இருக்கிறது என்பதால் அல்லாவின் உஜூத் ஹராமாகுமா?

மதுக்கோப்பை இருக்கிறது. மது அதன் கோப்பை எல்லாமே அல்லாஹ்வுடைய உஜூதை கொண்டு தான் இருக்கிறது. ஆனால் பாரித்தாலாவின் உஜூது ஹராம் இல்லை. பின் எது ஹராம்?. ஷை.

ஹலால், ஹராம் மசாயில் ‘ஷை’ எனப்படும் சிருஷ்டியின்  மீதாகும்.

ஹக்குடைய உஜுதைக் கொண்டு தான் சிருஷ்டிகள் காட்சியளிக்கின்றன ஆனால் சிருஷ்டி என்பது ஹக்கு இல்லை.

சிருஷ்டி என்பது ஹக்கு என்றால்,

புலன் உணர்வுகள் யாருக்கு சொந்தம்?

இன்ப துன்பங்களை அனுபவிப்பது யார்?

பாவம் செய்வது யார்?

தண்டனை யாருக்கு?

அப்து யார்?

ரப்பு யார்?

‘இன்ன வஸ்து’ என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தது யார்?.

‘மைய்யித்’ என்ற நிலை யாருக்கு சொந்தம்.

‘ஃபக்கீர்’ என்ற நிலை யாருக்கு சொந்தம்?

ஆக உஜுதால் ஒன்றாக இருப்பதுடன் ஹக்கையும் சிருஷ்டியையும் வேறுபடுத்தி ஒரு வகை இருமை நிலையை குர்ஆன் பேசுகின்றது.

ஹக்குக்கும், சிருஷ்டிக்கும் இடையே உஜுதால் ஒன்றுபட்ட நிலை (ஐனியத்) இருப்பதுடன் இன்னொரு அடிப்படையில் முற்றிலும் வேறுபட்ட நிலையும் (கைரியத்) இருக்கிறது.

அந்த இன்னொரு அடிப்படை என்ன? அதன் மூலம் ஹக்கையும், சிருஷ்டியையும் பிரித்தறிய வேண்டிய நிலை அவசியம் என்பது விளங்குகிறது அல்லவா?. 

அந்த அடிப்படை தான் சிருஷ்டியின் தாத்தை ஹக்குடைய தாத்தை விட்டு பிரித்தறிவதாகும் .

தாத்து இரண்டு அல்லது பல என்பவர்கள் தாத்து என்பதை உஜுது என்று பொருள் கொள்வதில்லை. மாறாக, பெயர் இன்னும் தன்மைகளும் மீளுமிடத்தை (மர்ஜயே அஸ்மா வ ஸிபாத்) குறிக்கின்றார்கள்


அப்துல் கரீம் ஜீலி(ரஹ்) தங்கள் இன்சானுல் காமில் பாகம் 1 பக்கம் 13ல் இப்படி கூறுவதை பாருங்கள்.

அறிந்து கொள்ளுங்கள்எதன்  பக்கம்  அஸ்மாக்களும்  சிபாத்துகளும் இணைக்கப்படுகிறதோ அதுவேஜாத்ஆகும். இதில்  உஜூது  இஃதிபார் செய்வதில்லை. (அதாவது பெயர்களும் தன்மைகளும் மீளுமிடமே தாத் ஆகும். அதற்கு  உஜூது இருப்பினும் இல்லாவிடினும் சரியே!) ஆக இஸ்மும் சிபாத்தும் இணைக்கப்பட்ட ஒவ்வொரு வஸ்துவையும் ஜாத் என்று கூறலாம்"

ஆக இந்த அர்த்தத்தின்படி அல்லாஹ்வின் தாத்து என்பது அல்லாஹ்வின் உஜுதின் மேல் மீளும். அல்லாஹ்வை பொருத்தவரை தாத்து தான்  உஜுது. உஜுதுதான் தாத். ஆனால் சிருஷ்டிகளை பொருத்தவரை தாத்து என்பது ஆலமே ஷஹாதத்தில் சிருஷ்டிகளின் பெயர் இன்னும் தன்மைகளும் மீளும் சிருஷ்டிகளின் உருவை/உடலை குறிக்கும். 

ஆலமே மிஸாலில் ‘ஜிஸ்மு மிஸாலை’ (மிஸாலி உடலை)க் குறிக்கும்.

ஆலமே அர்வாஹில் ‘ரூஹை’க் குறிக்கும்.

ஹகீகத்தில் இறைவனின் அறிவு ஞானத்தில் உள்ள குறிப்புகளாம் ‘தஅய்யுனை’  இன்னும்  ‘அஃயானே சாபிதாவை’க் குறிக்கும்.

அந்த தாஅய்யுன்னுடன் உஜுடைய தொடர்பால் ஜிஸ்மு காட்சியளிக்கிறது.

அந்த தாஅய்யுன்னுடன் இல்முடைய தொடர்பால் கல்பும், நூருடைய தொடர்பால் ரூஹும், ஷுஹுதுடைய தொடர்பால் நப்ஸும் உருவாகிறது. 

ஆக சிருஷ்டிகளின் தாத் என்பது உஜுதை நோக்கி மீளாது. 

சிருஷ்டிகள் ஹக்குடைய உள்ளமைக் கொண்டு காட்சியளித்தாலும் சிருஷ்டிகளின் உடல் ஹக்குடைய உள்ளமையல்ல. 

அல்லாஹ்விற்கு ஜிஸ்மு இருக்கிறது என நம்புவது முஜஸ்ஸிமியாக்களின் கொள்கை.

ஹக்குக்கும் சிருஷ்டிக்கும் உதாரணம் சொல்லும் போது

தண்ணீரும் – ஐசும் போல

தங்கமும் – நகையும் போல

மெழுகும் – அதனால் செய்யப்பட்ட வடிவங்களும் போல என ஞானிகள் சொல்வதெல்லாம் ஐனியத் என்ற உஜுதால் ஒன்றுபட்ட நிலையை விளக்குவதற்காகத்தான்.

ஒரு வகையில் ( ஏக் தரஃபா) ஐனியத் என்ற உஜுதால் ஒன்றுபட்ட நிலையை விளக்க சொன்ன உவமையை எல்லா வகையிலும் பொறுத்திப் பார்க்க கூடாது.

எப்படி தங்க மோதிரத்தில் தங்கம் இல்லாது மோதிரம் காட்சியளிக்காதோ அதைப் போல அல்லாஹ்வின் உஜுது இன்றி சிருஷ்டிகளின் உடல் தோற்றமளிக்காது என்பதுடன் 

மோதிரத்தை உடைத்தால் தங்கம் உடைவது போல உடலில் ஏற்படும் மாற்றங்கள் உஜுதை பாதிக்காது. 

தண்ணீர் நிலை மாறி ஐசாவதைப் போல உஜுது மஹ்லூக்காக மாறிவிடவில்லை.
மெழுகு வடிவங்களில் பாகம் பிரிவதைப் போல உஜுது பங்கு பிரிவதில்லை.
உஜுதுக்கு கைஃபியத்  -  அமைப்பு இல்லை.

உஜுதில் தஜ்ஜியா  -  பாகமாய் பிரிவது (portion by portion), தக்ஸீம்  -  துண்டு துண்டாக பிரிவது. தகைய்யுர்  -  நிலை மாற்றம்,  தபத்துல்  -  இன மாற்றம்  (conversion) இல்லை.
ஹக்குடைய உஜுதுக்கு முரணாகவோ(லித்), இணையாகவோ(நித்) இன்னொரு உஜுது இல்லை. 

உஜுதில் கம்மியத் -  எண்ணிக்கை இல்லை. அது ஏகம் எண்ணிக்கையில் கட்டுப்பட்டதில்லை. அதனால் பிளாஸ்க்கில் பால் இருப்பது போல ஒன்றுக்குள் ஒன்றாகவோ (ஹுலூல்), சீனியும் பாலும் கலந்திருப்பது போல இரண்டற கலத்தலொ (இத்திஹாத்) உஜூதில் சாத்தியமே இல்லை.

ஏகமாய் இருப்பதுடன் ஏராளமாய் காட்சியளிக்கும் சிருஷ்டிகளுடன் உஜுதால் ஐனாக இருக்கின்றது. சிருஷ்டிகள் தங்களுடைய தாத்தால் ஹக்குக்கு கைராக இருக்கின்றது.
உஜுதால் ஐனியத்தும் உண்மை, தாத்தால் (பெயரும் தன்மைகளும் மீளுமிடம்) கைரியத்தும் உண்மை.

சுருக்கமாக சொன்னால் லித் - முரண் (opposite),நித் -  இணை, ஹுலூல் - ஒன்றுக்குள் ஒன்று, இத்திஹாத் - இரண்டற கலத்தல், கம்மியத் -  எண்ணிக்கை, கைஃபியத்  -  அமைப்பு, தகைய்யுர்  -  நிலை மாற்றம், தபத்துல்  -  இன மாற்றம்  (conversion), தஜ்ஜியா  -  பாகமாய் பிரிவது (portion by portion), தக்ஸீம்  -  துண்டு துண்டாக பிரிவது இவை அனைத்தும் சிருஷ்டிகளி (ஷை)ல் அமைந்தது. இவைகளை ஹக்கின் பக்கம் சேர்க்கக் கூடாது.
ஷையின் ஹகீகத் தஅய்யுன் இன்னும்  அஃயானே சாபிதா.

அஃயானே சாபிதா இல்மே ஹக்கில இருக்கின்ற மஃலூம், கியாலி சூரத், அது அல்லாஹ் அல்லாதது (கைரே ஜாதே ஹக்) என்பதை உங்களுடைய மனதில் தரிபடுத்தியவர்களாக ஐனியத் பேச வேண்டும்.

சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா – அவன் தானே அவையாயிருக்க வஸ்துகளை வெளிப்படுத்தியவன் துய்யவன்- ஷெய்குல் அக்பர் இப்னு அரபி ரஹ்மதுல்லாஹி அலைஹி.

உஜுதால் ஐனியத்தும் உண்மை, தாத்தால் (பெயரும் தன்மைகளும் மீளுமிடம்) கைரியத்தும் உண்மை. சுப்ஹானல்லாஹி வ பி ஹம்திஹி!







உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: