தோழமையுடன்

Sunday, December 4, 2011

இஸ்ரேல் : அநீதியின் மீது கட்டப்பட்ட தேசம் - க. திருநாவுக்கரசு - புதுதில்லி



நம் நீதியுணர்வின் சுரணை என்பது இன்றைய புத்தம் புதிய அநீதிகளுக்கெதிராக மட்டும் தற்காலிகமாக குரல் எழுப்பும். 70 வருடங்களாய் பலஸ்தீனத்தின் மீது இழைக்கப்படும் அநீதி என்பதோ டூத்பேஸ்ட் விளம்பரத்தைப் போல நமக்கு  சகஜமான ஓரு நிகழ்வாகி விட்டது.

காலச்சுவடு மார்ச் 2009ல் க.திருநாவுக்கரசு எழுதிய  இந்த கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. நீண்டகாலமாய் தொடரும்  துயரம் என்பதால் கட்டுரை சிறிது நீள்கிறது. பொறுமையுடன் படிக்கும் உங்கள் சிரத்தையை வேண்டிய வண்ணமாய்..



இஸ்ரேல்  : அநீதியின் மீது கட்டப்பட்ட தேசம்                          - க. திருநாவுக்கரசு - புதுதில்லி
 
பாலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா. பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை, அவர்களின் துயரத்தை இதைவிடச் சுருக்கமாக அதே நேரத்தில் மனத்தைத் தைக்கும் விதமாக ஒருவர் கூற முடியாது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக வரலாற்றில் இரண்டு விவகாரங்கள் மனித மனசாட்சியை உலுக்கின. எந்தவொரு தார்மீக அளவுகோலின்படியும் ஏற்கப்பட முடியாதவை இவை. இதில் ஒன்றான தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் 1994இல் முடிவுக்குவந்தது. ஆனால் 1940களில் தொடங்கிய பாலஸ்தீன மக்களின் துயரம் இன்றளவும் தொடர்கிறது. இதற்கான தீர்வு கண்ணுக்கெட்டிய வரையில் தென்படவில்லை.

இப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள ஜியோனிசம் (Zionism)  மற்றும் ஜியோனிச இயக்கம் ((Zionist Movement)  பற்றிய புரிதல் ஓரளவேனும் அவசியம். ஐரோப்பா முழுவதும் தாங்கள் ஒதுக்கிவைக்கப்படுவதாலும் வேறுபடுத்தப்படுவதாலும் தங்களுக்கென்று ஒரு தேசம் அவசியம் என்று ஐரோப்பிய யூதர்கள் கருதினர். பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றிய ஆல்பிரட் டிரேபஸ் என்கிற அதிகாரி தவறாக ராஜ துரோகக் குற்றஞ் சாட்டப்பட்டுத் தீவிர சிறைத் தண்டனைக்கு ஆளானார். இவர் யூதர். இந்த நிகழ்வு ஏற்கனவே யூதர்களுக்கு எதிராக இருந்த உணர்வுகளைத் தீவிரப்படுத்தியது. இந்தச் சூழலில் 1897இல் தியோடர் ஹெர்ஸல் என்பவரால் உருவாக்கப்பட்ட இயக்கமே ஜியோனிச இயக்கம். ஜியோனிசக் கோட்பாட்டின் படி யூதப் பிரச்சினைக்கான தீர்வு என்பது 2000 வருடங்களுக்கு முன்னர் யூதர்களின் தாயகமாக விளங்கிய இஸ்ரேலுக்கு (இன்றைய பாலஸ்தீனம்) திரும்பிச் சென்று அங்கு ஒரு யூத அரசை நிறுவுவதுதான். யூதர்கள் வெளியேறுவதன் மூலம் தங்கள் நாடுகளில் நிலவிய யூத எதிர்ப்புப் பிரச்சினை மறைந்துபோகும் என நம்பிய ஐரோப்பிய நாடுகளும் இதற்கு ஆதரவளித்தன. ஜியோனிச இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான சய்ம் வெய்ஸ்மானின் தொடர்ந்த முயற்சிகளின் காரணமாக அன்றைய வல்லரசும் ஏகாதிபத்தியமுமான பிரிட்டனின் வெளியுறவுத் துறைச் செயலர் (அமைச்சர்) ஆர்தர் ஜேம்ஸ் ஃபேல்போர் (Arthur James Balfour) வெளியிட்ட அரசு அறிக்கையின் மூலம் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான அரசை நிறுவப் பிரிட்டன் தனது ஆதரவை நல்கியது. ஃபேல்போர் அறிக்கையே பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவாவதற்கான அடிப்படையை உருவாக்கியது. 1947ஆம் ஆண்டு நவம்பர் 29இல் ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இரு தற்காலிக, யூத, அரபு அரசுகள் உருவாக்கப்பட்டன. 1948ஆம் ஆண்டு மே 14இல் இஸ்ரேல் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. 1930களிலிருந்தும் குறிப்பாக 1947 - 48களில் ஜியோனிஸ்டுகள் மேற்கொண்ட படுகொலைகளும் அதன் மூலம் அரபு மக்கள் மத்தியில் ஜியோனிஸ்டுகள் திட்டமிட்டு ஏற்படுத்திய பீதியாலும் சுமார் எட்டு லட்சம் பாலஸ்தீன மக்கள் அகதிகளாயினர். இஸ்ரேல், சுதந்திர தினம் கொண்டாடும் ஒவ்வொரு வேளையிலும் பாலஸ்தீனர்கள் இந்த மாபெரும் வெளியேற்றத்தை அல் நக்பா என்று நினைவுகூர்கின்றனர்.

பாலஸ்தீனர்களுக்குத் தாங்கள் இழைக்கும் கொடுமையைப் பற்றி ஜியோனிசத் தலைவர்கள் முற்றிலுமாய் உணர்ந்திருந்தனர். முக்கியமான ஜியோனிசத் தலைவர்களுள் ஒருவரும் சுதந்திர இஸ்ரேலின் முதல் பிரதமருமான டேவிட் பென் குரியன் 1930களின் இறுதியில் அவர்களுக்குள் நடந்த கூட்டம் ஒன்றில் இப்படிக் கூறினார்: ‘‘வெளிநாடுகளில் நடக்கும் அரசியல் விவாதங்களில் அராபியர்கள் நமக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பைக் குறைத்துக் காட்டுவோம். ஆனால் நமக்குள்ளாவது உண்மையை மறுக்காமல் இருப்போம். அரசியல்ரீதியாக நாம் ஆக்கிரமிப்பாளர்கள், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடுகிறார்கள். . . இந்த நாடு அவர்களுடையது, ஏனெனில் அவர்கள் இங்கே வசிக்கிறார்கள். ஆனால் நாமோ இங்கே குடியேற வந்தவர்கள். அவர்களுடைய பார்வையில் நாம் இந்த நாட்டை அபகரிக்க வந்துள்ளவர்கள், நாம் இன்னும் இங்கு வெளியாட்கள்தாம்’’. மேலும் அவர் பேசுகிறபோது, ‘‘அராபியர்கள் ஏன் சமாதானத்தை ஏற்க வேண்டும்? நான் அராபியர்களின் தலைவனாக இருந்தால் இஸ்ரேலுடன் ஒருபோதும் சமாதானத்தை ஏற்க மாட்டேன். . . யூத எதிர்ப்பு, நாஜிகள், ஹிட்லர், ஆஷ்விட்ஸ் என நாம் ஏராளமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இதில் அரபு மக்களின் தவறு என்ன? அவர்கள் பார்ப்பது ஒரு விஷயத்தைத் தான்: நாம் இங்கு வந்து அவர்களது நாட்டை அபகரித்துக்கொண்டோம்’’ என்றும் கூறினார்.

‘‘பாலஸ்தீனர்களின் கண் முன்னேயே அவர்களது முன்னோர்கள் வாழ்ந்துவந்த நிலத்தையும் கிராமங்களையும் நாம் கைப்பற்றுகிறோம் . . . நாம் காலனிய ஆதிக்கவாதிகள், இரும்புத் தலைக்கவசமும் மெஷின் துப்பாக்கிகளும் இல்லாமல் இங்கு ஒரு மரத்தை நடவோ ஒரு வீட்டைக் கட்டவோ நம்மால் முடியாது’’ என்றார் இஸ்ரேலின் ராணுவத் தளபதியும் பின்னர் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவருமான மோஷே டாயன். ‘‘அரபு மக்கள் நமக்கு நீண்ட காலத்திற்குப் பிரச்சினையைத் தருவார்கள். அது ஒன்றும் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஒரு நாள் அவர்கள் அனைவரும் வெளியேறி நாம் இந்த நாட்டைப் பெற்று விடலாம். நாம் ஒருவர் என்றால் அவர்கள் பத்துப் பேர் இருக்கிறார்கள். ஆனால் யூதர்களாகிய நமக்கு அவர்களைவிடப் பத்து மடங்கு அறிவு அதிகம் அல்லவா?’’ என்றார் ஜியோனிசத்தின் மிக முக்கியமான தலைவரும் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதியுமான சய்ம் வெய்ஸ்மான். ஆகவே ஜியோனிஸ்டுகள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தே இருந்தார்கள்.
 
அதே நேரத்தில் பல யூத அறிஞர்களிடையே இப்படி ஒரு அரசை உருவாக்குவதற்குப் பலத்த எதிர்ப்பும் இருந்தது. “2000 வருடங்களுக்கு முந்தித் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை ஒவ்வொரு தேசமும் சொந்தம் கொண்டாடத் தொடங்கினால் இந்த உலகம் ஒரு பைத்தியக்கார விடுதியாக மாறிவிடும்என்றார் உலகப் புகழ்பெற்ற உளவியல் அறிஞரும் மார்க்சியச் சிந்தனையாளருமான எரிக் ஃப்ராம் (Erich Fromm).  யூத அரசு ஒன்றை உருவாக்குவதைவிட அராபியர்களுடன் சமாதானமாக ஒன்றிணைந்து வாழ்வதே சிறப்பானது என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். தனது இளமைப் பருவத்தில் ஒரு ஜியோனிஸ்டாக இருந்த நோம் சோம்ஸ்கி அப்போதே யூத அரசு உருவாவதைக் கடுமையாக எதிர்த்தார். அக்காலகட்டத்தில் ஜியோனிஸ்டுகளில் ஒரு சிறு பகுதியினர் இஸ்ரேல் உருவாவதைக் கடுமையாக எதிர்த்தனர்.

இஸ்ரேல் அரசு உருவாக ஆதரவு திரட்டுவதில் ஈடுபட்டிருந்த ஜியோனிசத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமான அறிக்கை ஒன்றை மகாத்மா காந்தியிட மிருந்து பெறப் பெரிதும் முயன்றனர். அத்தகைய அறிக்கை தங்கள் நோக்கத்திற்கு மாபெரும் தார்மீக வலுச்சேர்க்கும் என்று அவர்கள் நம்பினர். ‘‘யூதர்கள் பாலான எனது பரிவு, நீதியைப் பார்ப்பதில் எனது கண்களை மறைத்துவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு தாய்நாடு வேண்டுமென்ற யூதர்களின் கோரிக்கையை என்னால் ஏற்க முடியவில்லை. மற்ற மக்களைப் போலவே அவர்களும் ஏன் தாங்கள் பிறந்து வளர்ந்த நாட்டையே சொந்த நாடாகக் கொள்ளக் கூடாது?’’ பாலஸ்தீனர்களது உரிமையைப் பற்றிப் பேசுகிறபோது, ‘‘ஆங்கிலேயர்களுக்கு எப்படி இங்கிலாந்து சொந்தமோ பிரெஞ்சுக்காரர்களுக்கு எப்படி பிரான்ஸ் சொந்தமோ அதைப் போலவே பாலஸ்தீனம் அராபியர்களுக்குச் சொந்தமானது. அராபியர்கள்மீது யூதர்களைத் திணிப்பது தவறானதும் மனிதத்தன்மையற்றதும் ஆகும். மானமிகு அராபியர்களை ஒழித்துப் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ யூதர்களின் தேசமாக்குவது என்பது மனித குலத்திற்கே எதிரான குற்றம்’’ என்றார் காந்தி. நேர்மையும் நீதியுணர்வும் கொண்ட யாருமே இஸ்ரேல் அரசை ஒருபோதும் ஆதரித்ததில்லை.
 
எந்த நாட்டிற்கும் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உண்டு. ஆகவே காஸாவிலிருந்து தொடுக்கப்படும் ஹமாஸின் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இஸ்ரேல் நடத்தும் பதில் தாக்குதல் நியாயமானது, இதற்காக இஸ்ரேலைக் கண்டிப்பது தவறு என்பது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளின் வாதம். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையை அதன் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போதும் இஸ்ரேல்மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதலுக்கும் பாலஸ்தீனம்மீது இஸ்ரேல் நடத்தும் பொருளாதார மற்றும் ராணுவத் தாக்குதலுக்கும் இடையே உள்ள இட்டு நிரப்ப முடியாத மிகப் பெரும் இடைவெளியைப் புரிந்துகொள்கிறபோதும் தான் பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் அரசு இழைத்துவரும் மாபெரும் அநீதியை, கொடுமையை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். ஒரு நாடு தான் தாக்கப்படும்போது அதற்குத் திருப்பித் தாக்கும் உரிமை உண்டு. அது நியாயமும்கூட. ஆனால் இஸ்ரேல் ஓர் ஆக்கிரமிப்புச் சக்தி என்பதையும் தனது ஆக்கிரமிப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து குடியேற்றங்களை நிகழ்த்திவரும் நாடு என்பதையும் மனத்தில் கொண்டால் இஸ்ரேலுக்கு இந்த நியாயம் பொருந்தாது என்பது புரியும். மேலும் சர்வதேசச் சட்டத்தின்படி ஒரு ராணுவத் தாக்குதலானது அதன் நோக்கத்திற்குத் தேவையான அளவைவிட அதிகமான இழப்பைப் பொதுமக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ ஏற்படுத்தக் கூடாது. அதாவது வன்முறையின் விகிதாச்சாரம் ஏறக்குறைய சமமாக இருக்க வேண்டும். ஹமாஸின் காஸம் ராக்கெட் தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டால் அதற்குப் பதிலடியாக நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொல்வது என்பது இஸ்ரேலின் பாணி.
 
பி.பி.சி. தொலைக்காட்சி (இதன் புகழ்பெற்ற நடுநிலைத்தன்மை இஸ்ரேலுக்குச் சாதகமானது) கூறுவதன்படி 2001இலிருந்து இதுவரை, அதாவது ஜனவரி 2009வரை, 8600 ராக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேல்மீது காஸாவிலிருந்து நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் உயிரிழந்த மொத்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 28. ஆனால் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 29இல் தொடங்கி 2008ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை நடந்த இரண்டாம் பாலஸ்தீன எழுச்சியின் போது காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 3000. இதே காலகட்டத்தில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 22. சமீபத்தில் 2008ஆம் ஆண்டு டிசம்பர் 27இல் தொடங்கித் தொடர்ந்து 22 நாட்கள் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 1400. அதாவது 28 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கு 4400 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் மிகப் பெரும் கொடுமை, கொல்லப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள் என்பதே. இதிலிருந்தே ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்கள் எவ்வளவு பலவீனமானவை என்பதும் ஹமாஸால் இஸ்ரேல் எதிர்கொள்ளும் ஆபத்து எத்துனை அற்பமானது என்பதும் விளங்கும். மேலும் இத்தாக்குதல்களின்போது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் கொண்ட குண்டுகளைப் பயன்படுத்தியது. இது உடல்மீது படுகிறபோது தோலைப் பொசுக்கிவிடும். இக்குண்டுகளை ஒரு ராணுவம் தன்னுடைய படைகளை எதிரிகளிடமிருந்து மறைப்பதற்கோ அல்லது இருள் சூழ்ந்த பகுதிகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தவோ பயன்படுத்தலாம். பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்ட ஒன்று. இஸ்ரேலின் தாக்குதலில் மனத்தை மிகவும் நெருடுகிற விஷயம் ஒன்று உண்டு. காஸாமீதான தாக்குதலின்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 82% இஸ்ரேலியர்கள் இஸ்ரேல் எல்லை மீறிநடந்துகொண்டுவிடவில்லை என்றே கருத்துத் தெரிவித்திருந்தனர். சில சமயங்களில் ஒரு மக்கள் சமூகத்தின் பெரும்பான்மை மனசாட்சியின்றி நடந்துகொள்ள முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
 
இஸ்ரேலின் அளவுக்குமீறிய வன்முறைப் பிரயோகத்தைப் பற்றித் தெரிந்தும் ஏன் ஹமாஸ் தாக்குதல் தொடுக்கிறது? ஏதோ ஹமாஸின் தாக்குதலிலிருந்துதான் பிரச்சினையே ஆரம்பமாவது போல் மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதால் பெரும்பாலான மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிவதேயில்லை. 2008 டிசம்பர் 27இல் இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர் ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மிஷால் போர்நிறுத்தம் ஒன்றை முன்மொழிந்தார். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் 2005இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது அது. வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது, எல்லைப் பாதைகள் திறக்கப்பட்டு பாலஸ்தீனத்தின் இரு பகுதிகளான வெஸ்ட் பேங்க், காஸா இடையில் ஆட்கள் மற்றும் பண்டங்களின் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறுவதை இஸ்ரேல் உத்திரவாதப்படுத்துவது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள். ஆனால் 2006 தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்த ஃபடா (Fatah) வெற்றிபெறாது ஹமாஸ் வெற்றிபெற்றதால் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ரத்துசெய்துவிட்டது. ஆகவே ஹமாஸ் சமாதானத்திற்குத் தயாராக இல்லை என்று கூறுவது உண்மை கலவாத பொய். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையில் நடந்துள்ள எல்லா பழைய ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் ஹமாஸ் அப்படியே ஏற்க வேண்டுமென நிபந்தனை விதிக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் 2005-ஒப்பந்தத்தைப் போல் பல ஒப்பந்தங்களைத் தங்களுக்கு வசதிப்படாதபோது காற்றில் பறக்கவிட்டிருக்கின்றன.
 
காஸாமீது இஸ்ரேல் விதித்திருக்கும் கடுமையான பொருளாதாரத் தடையாலும் காஸா - எகிப்து இடையிலான போக்குவரத்துப் பாதையை இஸ்ரேல் மூடிவைத்திருப்பதாலும் (இப்பாதையின் மூலம்தான் காஸாவின் 15 லட்சம் மக்களுக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருட்கள், மின்சாரம் தயாரிப்பதற்குத் தேவையான எரிபொருள் ஆகியவை வர முடியும்.), காஸாவின் வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்தை இஸ்ரேல் முழுமையாகக் கட்டுப்படுத்துவதாலும் காஸா வாழ் மக்கள் படும் துயரம் சொல்லிமாளாது. ஒரு நாடு தான் ஆக்கிரமிக்கப்படும் போது அதற்கு எதிர்வினையாற்றுவது மிக இயல்பானது. சகல வகைகளிலும் தன்னை ஒடுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்துக்கொள்ள ஒரு நாடு நடத்தும் போராட்டத்தைத்தான் இன்று ஹமாஸ் நடத்துகிறது. மதம், பெண்ணுரிமை சம்பந்தமான விஷயங்களில் உலகெங்கும் உள்ள முற்போக்காளர்களுக்கு ஹமாஸுடன் தீவிரமான கருத்து மாறுபாடு உண்டு, ஆனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான அவர்களது போராட்டம் முற்றிலும் நியாயமானது என்பதிலும் நேர்மையாக நடந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் பாலஸ்தீன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதிலும் யாருக்கும் மாறுபாடே கிடையாது.
 
1967ஆம் ஆண்டு இஸ்ரேலை எகிப்து மற்றும் சில அரபு நாடுகள் தாக்கக்கூடும் என்ற சூழல் நிலவியது. அப்படித் தாக்கும்பட்சத்தில் இஸ்ரேலே வெற்றிபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. மேலும், உண்மையில் எகிப்திற்குப் போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என்பது இஸ்ரேலுக்குத் தெரிந்தே இருந்தது என்பது மெனாசெம் பிகின் (இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்) அபா எபான் (இஸ்ரேலின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்), எஸர் வைட்ஸ்மேன் (முன்னாள் விமானப் படை தளபதி) ஆகியோர் பின்னர் பேசிய பேச்சுகளிலிருந்து தெரியவருகிறது. ஆனால் இந்தச் சூழலைப் பயன்படுத்தித் தனது எல்லைகளை விஸ்தரிக்க முடிவுசெய்த இஸ்ரேல் முன்தடுப்புப் போர் (Preemptive war) நடவடிக்கையாக எகிப்துமீது நடத்திய ஆறு நாள் போரில் எகிப்துக்கு ஆதரவாக ஜோர்டனும் சிரியாவும் பங்கேற்றன. இதில் ஜோர்டனிடமிருந்து வெஸ்ட் பேங்க் மற்றும் கிழக்கு ஜெருசலம், எகிப்திடமிருந்து காஸா, சினாய் தீபகற்பம், சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்ஸ் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. 1947ஆம் ஆண்டு ஐ.நா. அவை பிரிவினைத் திட்டத்தின்படி வெஸ்ட் பேங்க், கிழக்கு ஜெருசலம் மற்றும் காஸா பகுதிகள் அடங்கியது பாலஸ்தீனமாகும். ஆனால் 1948ஆம் ஆண்டு போரில் காஸா பகுதியை எகிப்தும் வெஸ்ட் பேங்க் மற்றும் கிழக்கு ஜெருசலத்தை ஜோர்டனும் கைப்பற்றிக்கொண்டன. 1967இல் தான் கைப்பற்றிய சினாய் தீபகற்பத்தை 1979ஆம் ஆண்டு இஸ்ரேல்-எகிப்து சமாதான உடன்படிக்கையின்படி இஸ்ரேல் எகிப்திடம் திருப்பித் தந்தது. ஆனால் கிழக்கு ஜெருசலத்தைத் தனது மேற்கு ஜெருசலம் பகுதியுடன் இணைத்து அதைத் தனது தலைநகராக 1980இல் இஸ்ரேல் அறிவித்தது. இதை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்ததுடன் செல்லாது என்றும் அறிவித்தது. இத்துடன் வெஸ்ட் பேங்க் மற்றும் காஸா பகுதிகளில் யூதக் குடியிருப்பை விஸ்தரிப்பதில் இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தது. ஒரு நாடு தான் வெற்றிகொண்ட பகுதிகளில் புதிய குடியேற்றங்களைச் செய்வது என்பது 1949ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்காவது ஜெனீவா ஒப்பந்தத்திற்கு எதிரானது. அவ்வாறு செய்வது சர்வ தேசச் சட்டங்களுக்கு எதிரானது என்பதை அன்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசகராக இருந்த தியோடோர் மெரான் (இவர் 2003இலிருந்து 2005 வரை முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான இன்டர்நேஷனல் கிரிமினல் டிரிபியூனலின் தலைவராக இருந்தார்.) இஸ்ரேல் அரசை எச்சரித்தார். ஆனால் இஸ்ரேல் அதைப் பொருட்படுத்தவில்லை.

பிரிட்டனின் பிரிவினைத் திட்டத்தின்படி உருவாகவிருந்த இஸ்ரேலை ஏற்பதாக ஜியோனிசவாதிகள் கூறியபோதிலும் இஸ்ரேலின் எல்லைகளை விஸ்தரித்துப் பாலஸ்தீனம் முழுவதையும் அபகரிப்பதைத் தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பது பென் குரியன் போன்ற முக்கியமான ஜியோனிசத் தலைவர்களின் பேச்சிலிருந்து தெரியவருகிறது. ‘‘பிரிவினையை நாம் ஏற்பது என்பது டிரான்ஸ்ஜோர்டனைக் கைவிடுவது என்பதாகாது. இன்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எல்லைகளுடனான அரசை நாம் ஏற்றுக்கொள்வோம், ஆனால் ஜியோனிச லட்சியங்களின் எல்லைகள் என்பது யூத மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதை வெளியார் யாரும் கட்டுப்படுத்த முடியாது’’ என்றார் பென் குரியன். ஒரு வருடம் கழித்து, 1938இல் ஜியோனிச இயக்கத்திற்குள் நடந்த ஓர் உரையாடலின் போது பென் குரியன் இப்படிக் குறிப்பிட்டார்: ‘‘புதிய அரசு உருவாவதன் மூலம் நாம் பலம் பெற்ற சக்தியான பிறகு பிரிவினை செய்யப்பட்டதை ஒழித்து இஸ்ரேலை மொத்த பாலஸ்தீனத்திற்கும் விஸ்தரிப்போம்.’’ ஐ.நா. அவையின் பிரிவினைத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு லிகுட் கட்சியின் முக்கியத் தலைவரும் பின்னர் பிரதமராகவும் ஆன மெனாசெம் பிகின் இப்படிக் கூறினார்: ‘‘தாயகத்தின் இந்தப் பிரிவினை சட்டப்படி செல்லாது. இந்தப் பிரிவினைத் திட்டத்தில் உள்ள நிறுவனங்கள், தனிநபர்களின் கையொப்பங்கள் செல்லாது. அது யூத மக்களைக் கட்டுப்படுத்தாது. இஸ்ரேல் நிலப்பரப்பு இஸ்ரேல் மக்களிடம் மீட்டு ஒப்படைக்கப்படும். முழுமையாக. என்றென்றைக்குமாக.’’ ஜியோனிச இயக்கத்தில் பென் குரியன் இடதுசாரிகளையும் பிகின் வலதுசாரிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இடது-வலது இடையிலான வேறுபாடு என்பது ஜியோனிசத் திட்டத்தை எப்படிச் சாத்தியமாக்குவது, அதற்கான தந்திரோபாயங்கள் என்ன என்பதில்தானே தவிர வேறொன்றுமல்ல. ஆகவே தொடரும் ஆக்கிரமிப்பும் புதிய குடியேற்றங்களும் இத்திட்டத்தின் ஒரு பகுதியே தவிர, பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஹமாஸின் வன்முறைக்கான எதிர்வினை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்ரேலுக்கான ராணுவ மற்றும் நிதி உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து அளித்துவருகிறது. உலகிலேயே அமெரிக்காவின் அதிகபட்ச நிதியுதவியைப் பெறும் நாடு இஸ்ரேல். வருடத்திற்கு மூன்று பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதி. காஸா, வெஸ்ட் பேங்க் பகுதிகளில் யூதக் குடியிருப்புகளை விஸ்தரிக்கத் தேவையான நிதியுதவியையும் அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் பெறுகிறது. யூதக் குடியிருப்புகளை இப்பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளக் கூடாது என்று அமெரிக்கா ஒருபோதும் கூறியதில்லை. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் கட்டற்ற ஆதரவே இஸ்ரேல்-அரபு மோதலுக்கு ஒரு சமாதானத் தீர்வு ஏற்படாதிருப்பதற்கும் பாலஸ்தீன மக்களின் மிக அடிப்படையான உரிமைகள்கூட அங்கீகரிக்கப்படாதிருப்பதற்கும் காரணம் என்கிறார் சோம்ஸ்கி.

2005ஆம் ஆண்டிலேயே காஸா பகுதியிலிருந்து தனது ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக இஸ்ரேல் கூறியபோதிலும் காஸாமீதான தனது பிடியை அது தளர்த்தவேயில்லை. காஸா நிலைமையைப் பற்றி மனித உரிமைகள் கண்காணிப்பு நவம்பர் 20, 2008இல் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மர்ட் (ணிலீuபீ ளிறீனீமீக்ஷீt) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘2005இல் தனது ராணுவத்தையும் குடியேற்றங்களையும் நிரந்தரமாக இஸ்ரேல் திரும்பப் பெற்றபோதிலும் சர்வதேசச் சட்டத்தின்படி காஸாவை ஆக்கிரமித்திருக்கும் சக்தியாகவே இஸ்ரேல் இருக்கிறது. ஏனெனில் காஸாவின் தினசரி வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டது. காஸா தனது அண்டை நாடுகளுடன் வான்வழி அல்லது கடல்வழி மூலமாக எந்த வர்த்தகத்தையும் மேற்கொள்ள முடியாது. காஸா மக்கள் நாட்டைவிட்டு எங்கும் வெளியே செல்ல முடியாது. மேலும் காஸா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இஸ்ரேல் வரி விதிக்கிறது. இஸ்ரேல் விதித்திருக்கும் தடைகளால் காஸா நகரின் மருத்துவம், தண்ணீர் விநியோகம், கழிவுநீர் சாக்கடை வசதி முதற்கொண்டு மின்விநியோகம்வரை அனைத்துமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டமைப்புகளில் சிறு கோளாறு ஏற்பட்டாலும் அதைச் சரிசெய்ய மாற்றுக் கருவிகளோ உபகரணங்களோ கிடையாது. காஸா நகரம் பல இரவுகளில் கும்மிருட்டில் மூழ்கியிருப்பது சர்வ சாதாரணம். நாள் ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் மின்சாரம் இல்லாத நிலை நம்முள் அரசாங்கத்திற்கு (அதிலும் நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம்) எதிராக ஏற்படுத்தும் கோபத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். எந்த அடிப்படை வசதியும் கிடையாது, அதற்குக் காரணம் நம்மை ஆக்கிரமிப்புச் செய்திருக்கும் நாடு என்றால் அதன்மீது எத்தகைய கோபம் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ள ஒருவர் அறிஞராக இருக்கத் தேவையில்லை. அதாவது சுருக்கமாகச் சொன்னால் காஸாவைத் தனது காலனியாக, அடிமையாக நடத்துகிறது இஸ்ரேல். தனது ராணுவத்தைக் காஸாவிலிருந்து திரும்பப் பெற்ற போதிலும் எகிப்தையும் காஸாவையும் இணைக்கும் ரஃபா பாதையைப் பாலஸ்தீனர்களிடம் இஸ்ரேல் ஒப்படைக்கவில்லை. பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 2005ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இப்பாதை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் இப்பாதை வழியே யார் போய் வரலாம் என்பதை இஸ்ரேல்தான் முடிவுசெய்யும். இப்பாதை இஸ்ரேல் ராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாதபோதிலும் இங்கு பொருத்தப்பட்டுள்ள 24 மணிநேர வீடியோ கேமராக்கள் மூலம் இதை இஸ்ரேல் எளிதாகக் கட்டுப்படுத்துகிறது.
 
காஸாவில் இஸ்ரேல் தனது குடியிருப்புகளைத் திரும்பப் பெற்றபோது அது குறித்துப் பாலஸ்தீனத் தலைவர்களுடனோ அல்லது அமைப்புகளுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அது முழுக்க இஸ்ரேலின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை. அது மட்டுமல்ல காஸாவிலிருந்து திரும்பப்பெறப்பட்ட யூதக் குடியிருப்புகளைவிட அதிகமான யூதக் குடியிருப்புகள் வெஸ்ட் பேங்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. எவ்வளவு நிலப்பரப்பை காஸாவில் இஸ்ரேல் காலிசெய்ததோ அதைவிட அதிகமான நிலப்பகுதி வெஸ்ட் பேங்க்கில் கையகப்படுத்தப்பட்டது. எல்லாவற்றையும்விட முக்கியமாக, ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் முக்கியமான நோக்கமே, ‘‘சமாதான நடவடிக்கைகளை நிறுத்துவதும், யாசர் அராபத் உடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதுமே’’ என்றார் இஸ்ரேலின் உயர் அதிகாரியும் அப்போதைய பிரதமரான ஏரியல் ஷரானினுக்கு நெருக்கமான ஆலோசகருமான டோவ் வெய்ஸ்கிளாஸ். மேலும் அவர் கூறுகையில், ‘‘இதன் மூலம் பாலஸ்தீன அரசு அமைவதையும் அகதிகள் பிரச்சினை மற்றும் ஜெருசலத்தின் எல்லைகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதையும் தவிர்க்க முடியும். இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற விவகாரம் நமது நிகழ்ச்சி நிரலிலிருந்து காலவரையறை இல்லாமல் நீக்கப்படுகிறது’’ என்றார். இந்த வாதத்தை லிகுட் கட்சியின் ஒரு பகுதியினர் ஏற்காததால் கட்சி இரண்டாக உடைந்து கடிமா என்னும் புதிய கட்சியை ஷெரான் தொடங்கினார்.
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் அதுவரை எந்தத் தேர்தலிலும் கலந்துகொள்ளாது இருந்த ஹமாஸ் கலந்துகொண்டு பெரும் வெற்றிபெற்றது. இது அமெரிக்காவையும் இஸ்ரேலையும் மட்டுமல்ல ஹமாஸையும் ஆச்சர்யப்படுத்தியது. முகமது அபாஸ் தலைமையிலான ஃபடா கட்சியானது அதன் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் பாலஸ்தீன அரசை உருவாக்க முடியாத அதன் பலவீனம் ஆகிய காரணங்களுக்காக மக்களின் பெரும் அதிருப்திக்கு ஆளாகியிருந்ததே அதன் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. நேஷனல் டெமாக்ரடிக் இன்ஸ்டிடியூட், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தலைமையில் இயங்கும் த கார்ட்டர் சென்டர் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பில் நடந்த தேர்தல் இது. அரபு நாடுகளில் சமீப காலங்களில் மிகவும் நேர்மையாக, ஜனநாயகப்படி நடந்த தேர்தல் இது என்று பல சர்வதேச அமைப்புகள் கூறின. ஆனால் ஹமாஸின் வெற்றியை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யாசர் அராபத் தலைமையிலான மதச்சார்பற்ற இயக்கமான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சீர்குலைக்கவும் பலவீனப்படுத்தவும் மத அடிப்படைவாத சக்தியான ஹமாஸை இஸ்ரேலும் அமெரிக்காவும் வளர்த்துவிட்டன. அரபு நாடுகளில் மதச்சார்பற்ற தேசிய இயக்கங்களும் ஜனநாயக நிறுவனங்களும் வளர்வதையோ வலுப்பெறுவதையோ அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருபோதும் அனுமதித்ததேயில்லை. அப்பகுதியின் மாபெரும் எண்ணெய் வளத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தனக்குச் சாதகமான சர்வாதிகார ஆட்சிகளே உகந்தது என அமெரிக்கா கருதுவதே இதற்குக் காரணம். இதற்கு அப்பகுதியில் அமெரிக்காவின் அடியாளாக இஸ்ரேல் செயல்படுகிறது. இதுவே அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவும் அசாதாரணமான உறவிற்குக் காரணம். தங்களுக்குக் கட்டுப்பட்டிருந்த ஃபடா வெற்றி பெறாததைச் சகித்துக்கொள்ள முடியாத இஸ்ரேலும் அமெரிக்காவும் ஹமாஸை ஒழித்துக்கட்டப் போர் உட்படச் சகல வழிகளையும் கையாளத் தொடங்கின.

ஹமாஸ் ஆட்சியைக் கைப்பற்றியதன் மூலம் அந்த இயக்கத்திலிருந்த மிதவாதிகளின் கை ஓங்கி அதன் மூலம் பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு முடிவிற்கு வருவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதினர். ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் பிரச்சினை முடிவுக்குவருவதை விரும்பவில்லை. 2007 மார்ச் மாதம் ஃபடாவுடன் இணைந்து ஹமாஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. ஹமாஸை விரும்பாத ஜனாதிபதி முகமது அபாஸ் ஜூன் மாதம் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் ஆட்சியைக் கலைத்ததுடன் விரைவில் மறுதேர்தல் நடத்தப்படும் என்றார். இதன் விளைவாக மூன்று மாதக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. வெஸ்ட் பேங்க் ஃபடாவின் அதிகாரத்தின் கீழும் காஸா ஹமாஸின் ஆட்சிக்குக் கீழும் வந்தன. ஹமாஸின் ஆட்சிக்கு நெருக்கடி உண்டாக்குவதற்காக வரி வசூல் வருமானத்தை இஸ்ரேல் தன் கையில் எடுத்துக்கொண்டது. ஐரோப்பிய ஒன்றியமும் மற்ற சர்வதேச நாடுகளும் பாலஸ்தீனத்திற்குச் செய்துவந்த நிதியுதவியைக் காஸாப் பகுதிக்கு மட்டும் நிறுத்திவைத்தன. மேலும் அமெரிக்கா விதித்த பல்வேறு தடைகளால் காஸாவில் பணியாற்றிவந்த பல அரசு சாரா நிறுவனங்களால் தங்கள் உதவிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த அத்தகைய நிறுவனங்கள் தாங்கள் மேற்கொண்டிருந்த உதவித் திட்டங்களை முற்றிலுமாக நிறுத்திவிட்டன.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையில் சமாதானம் ஏற்பட ஹமாஸ் தடையாக இருப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறுகின்றன. இஸ்ரேலை அங்கீகரிக்காதது, வன்முறையைக் கைவிடாதது ஆகியவை ஹமாஸுக்கு எதிராகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள். இஸ்ரேலை ஹமாஸ் அங்கீகரிக்காதது போலவே இஸ்ரேலும் இதுவரை சுதந்திர பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனம் என்னும் பெயரில் இஸ்ரேல் அளிக்க முன்வருவதெல்லாம் மிகச் சிறிய நிலப்பரப்பை, அதாவது அதில் அரசு உருவாவதென்பது சாத்தியமாகாது என்ற அளவிலான நிலப்பரப்பை. பாலஸ்தீனர்கள் கோருவதெல்லாம் 1967ஆம் ஆண்டு போருக்கு முந்தைய எல்லைகளைக் கொண்ட நிலப்பரப்பையே தவிர 1948இல் பாலஸ்தீனம் பிரிவினை செய்யப்படுவதற்கு முந்தித் தாங்கள் வாழ்ந்த மொத்த நிலப்பரப்பையும் அல்ல. இதைவிட ஒரு நாட்டு மக்கள் கீழிறங்கி வர முடியாது. பாலஸ்தீன நிலப்பரப்பு முழுவதுமே தங்களுக்கு உரியது, அதன்மீதான யூதர்களின் வரலாற்று உரிமையை எக்காரணம் கொண்டும் கைவிட முடியாது என்பதே இதுவரையிலான அனைத்து இஸ்ரேல் தலைவர்களின், அரசுகளின் நிலைப்பாடாக இருந்துவந்திருக்கிறது. கோட்பாட்டளவில் இந்நிலைப்பாட்டிலிருந்து வேறுபடும் ஒருவர் இஸ்ரேலின் பிரதமராவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. சற்றேறக்குறைய ஹமாஸின் நிலைப்பாடும் இதே போன்றதுதான். மொத்தப் பாலஸ்தீனமும் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது, இஸ்ரேல் அரசு சட்டபூர்வமற்றது என்பது ஹமாஸின் நிலை. ஆனால் ஹமாஸ், தான் சமரசத்திற்குத் தயார் என்பதையும் 1967ஆம் ஆண்டு போருக்கு முந்தைய இஸ்ரேல் எல்லைகளை ஏற்பதாகவும் கிழக்கு ஜெருசலத்தைத் தலைநகராகக் கொண்ட பாலஸ்தீன அரசையும் அத்துடன் 50, 100 ஆண்டுகளுக்கு அல்லது காலவரையறையற்ற சமாதான உடன்படிக்கையையும் ஏற்பதாகவும் பல முறை அறிவித்திருக்கிறது. வன்முறையை ஹமாஸ் கைவிட வேண்டுமெனக் கூறும் இஸ்ரேலும் அமெரிக்காவும் வன்முறையையே தங்கள் வழி முறையாகக் கொண்ட நாடுகள். இரு நாடுகளுமே தாங்கள் குடியேறிய பகுதிகளில் இருந்த உள்நாட்டு மக்கள் சமூகத்தைக் கொன்றுகுவித்ததன் மூலம் நிறுவப்பட்ட நாடுகள். ‘‘தீவிரவாதத்தைப் பற்றி எல்லோரும் கவலைப்படுகிறார்கள். ஆனால் அதை நிறுத்துவதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. அது, தீவிரவாதத்தில் பங்குகொள்வதை நிறுத்துவதுதான்’’ என்றார் சோம்ஸ்கி. இந்த இரு நாடுகளும் தீவிரவாதத்தில் பங்குகொள்வதை நிறுத்துவது ஒருபுறம் இருக்கட்டும். தீவிரவாதம் உலக அளவில் உருவாவதற்கும் வலுப்பெறுவதற்குமே இந்த நாடுகளின் தீவிரவாதங்கள்தாம் காரணமாக இருக்கின்றன. காரண-காரியத்தில் காரணம்தான் முதல். ஆகவே அது மறையாமல் அதனால் உருவாகும் விளைவுகள் மட்டும் மறைய வேண்டுமென எதிர்பார்ப்பது மடமை.
ஹமாஸ் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. இஸ்ரேலில் குடியேறிய அமெரிக்க யூதரான பரூச் கோல்ட்ஸ்டெயின் என்பவர் இஸ்ரேல் ராணுவத்தினரின் உதவியுடன் 1994ஆம் ஆண்டு அல்-ஹாரம் அல்-இப்ராஹிமி என்ற மசூதிக்குள் நுழைந்து கிரனேட் தாக்குதல் நடத்தித் தொழுகைக்கு வந்திருந்த 29 பேரைக் கொன்றதற்குப் பிறகே, அதுவரை ராணுவத்தினரை மட்டுமே தாக்கிவந்த ஹமாஸ் இஸ்ரேலியக் குடிமக்களையும் குறிவைக்கத் தொடங்கியது. மேலும் தீவிரவாதத்திற்கு அமெரிக்க அரசாங்கம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வமான வரையறையான, ‘‘பொதுமக்கள்மீது நடத்தப்படும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, அரசியல் உள்நோக்கங்களால் உந்தப்பட்ட வன்முறை’’ என்ற அடிப்படையில் பார்த்தால் வியட்நாம், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும் 1930களிலிருந்து ஜியோனிசவாதிகளும் 1948இலிருந்து இஸ்ரேலிய அரசுகளும் பாலஸ்தீனத்தில் நடத்திவரும் படுகொலைகளும் அப்பட்டமான தீவிரவாதம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல 2002, மார்ச் 5 அன்று பத்திரிகையாளர்களிடம் பேசியபோது இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷெரான் இப்படிக் கூறினார்: ‘‘பாலஸ்தீனர்கள் தாக்கப்பட வேண்டும். அது மிகுந்த வலி தருவதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு அது மிகுந்த இழப்புகளை ஏற்படுத்த வேண்டும், ஏராளமானவர்கள் பாதிக்கப்பட வேண்டும், அப்போதுதான் தாங்கள் அளிக்கும் மிகுந்த விலையை அவர்கள் உணர்வார்கள்.’’ காஸாமீதான சமீபத்திய தாக்குதல் பற்றி எழுதுகிறபோது நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் தாமஸ் ஃப்ரீட்மேன், ‘‘காஸாவில் ஹமாஸ் போராளிகள் ஏராளமானவர்களைக் கொல்வதன் மூலமும் காஸா மக்களை மிகுந்த வேதனைக்கு ஆளாக்குவதன் மூலமும் இஸ்ரேல் ஹமாஸை ஒழித்துக்கட்டப் பார்க்கிறதா அல்லது அதற்குப் ‘‘பாடம் புகட்ட’’ முயல்கிறதா என்பதை என்னால் இன்னும் சொல்ல முடியவில்லை... ஹமாஸுக்குப் பாடம் புகட்டுவது என்றால் அந்த நோக்கத்தை இஸ்ரேல் சாதித்துவிட்டது’’ என்று எழுதினார். அதாவது ஹமாஸுக்குப் பாடம் புகட்டுவது என்ற அரசியல் நோக்கத்திற்காகப் பொதுமக்கள் சுமார் 1400 பேர்-மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள், கொல்லப்படலாம் என்பது இவரது வாதம். மேற்கத்திய அரசுகள் மட்டுமல்ல பெரும்பாலான மேற்கத்திய ஊடகங்கள் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இரட்டை நிலை எடுப்பவையே. தற்போதைய தாக்குதலால் ஏறக்குறைய தரைமட்டமாகியிருக்கும் காஸா அதிலிருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பப் பல பில்லியன் டாலர்களும் பல வருடங்களும் தேவைப்படும்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையில் ஒபாமாவின் நிலைப்பாடு கிளின்டன் மற்றும் புஷ் எடுத்த நிலைப்பாடுகளிலிருந்து மாறுபட்டதல்ல. கடந்த நாற்பது வருடங்களில் இஸ்ரேல்மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு மாறவேயில்லை. உண்மையைச் சொல்வதானால், ஒபாமா இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்ரேலுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்க இஸ்ரேல் பொதுவிவகாரக் குழுக் கூட்டத்தில் பேசிய ஒபாமா ஒன்றுபட்ட ஜெருசலம் நகரம் இஸ்ரேலின் தலைநகராக இருக்கத் தனது ஆதரவைத் தெரிவித்தார். இது கடந்த இருபது வருடங்களாக அமெரிக்க ஜனாதிபதிகள் எடுத்துவந்த நிலைப்பாட்டிற்கு எதிரானது. மறைந்த நடிகர் நாகேஷ் அவர்களின் திரைப்படக் காட்சியொன்றுதான் நினைவுக்குவருகிறது. அக்காட்சியில் ஒருவர் காலில் விழும் நாகேஷ் ‘‘இன்னமும் கீழே விழுவேன், ஆனா தரை தடுக்குது’’ என்பார். அப்படித்தான் இருக்கிறது ஒபாமாவின் இஸ்ரேல் சார்பான நிலைப்பாடு.
‘‘இரவில் எனது இரண்டு மகள்களும் தூங்கும் என் வீட்டின் மீது யாராவது ராக்கெட் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அதைத் தடுத்து நிறுத்த என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்’’ என்றார் ஒபாமா. காஸாமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இறந்துபோன குழந்தைகளை மனத்தில் வைத்து அப்படிப் பேசியிருக்கிறார் என்று யாராவது நினைத்தால் அவருக்கு அமெரிக்காவைப் பற்றியோ ஒபாமாவைப் பற்றியோ தெரியவில்லை என்று அர்த்தம். 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேலின் ஸெட்ராட் நகரில் (காஸாவுக்கு அருகில் இருக்கிறது) பேசும்போது, ஹமாஸின் ராக்கெட் தாக்குதலைக் கண்டித்துத்தான் அப்படிப் பேசினார். அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டது இரண்டு பேர். அதற்கே ஒபாமாவின் நெஞ்சம் பதறிப்போனது. ஆனால் தான் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்புவரை 22 நாட்கள் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த போது, 1400 பேர் கொல்லப்பட்டபோது அதைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. காஸா தாக்குதல் பற்றிக் கேள்வி கேட்டபோது அமெரிக்காவில் ஒரு சமயத்தில் ஒரு ஜனாதிபதிதான் இருக்க முடியும் என்று ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் புரூக் ஆண்டர்சன் பதிலளித்தார். அதாவது புஷ் பதவியில் இருக்கும்போது ஒபாமா அதைப் பற்றிப் பேசுவது தவறு என்ற அர்த்தத்தில். ஆனால் அதே சமயத்தில் அமெரிக்காவின் பொருளாதார நிலை பற்றியும் அது சம்பந்தமாகத் தான் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் தாராளமாகக் கருத்துகளை ஒபாமா அள்ளி வீசிக்கொண்டிருந்தார். காஸா தாக்குதல் பற்றிக் கேள்வி கேட்டபோதுதான் அமெரிக்காவிற்கு ஒரே ஒரு ஜனாதிபதி இருப்பது அவரது நினைவுக்குவந்தது. பதவியேற்பின்போது காஸா பற்றிக் கேள்வி எழும் பட்சத்தில் ஒபாமாவிற்கு ஏற்படக்கூடிய சங்கடத்தைத் தவிர்க்கவே இஸ்ரேல் தனது தாக்குதலை ஜனவரி 18ஆம் தேதி நிறுத்தியது.

2002இல் அரபு லீக் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட திட்டமான அரபு சமாதானத் திட்டத்தைப் பற்றி ஜனவரி மாத இறுதியில் ஒபாமா பேசுகிறபோது அத்திட்டத்தின் அச்சாணியான அம்சமான இரு அரசுகள் அடிப்படையிலான தீர்வைப் பற்றி எதுவும் பேசாமல், அபாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு இஸ்ரேலுடனான தனது உறவை சகஜமாக்கிக் கொள்வது பற்றியும் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டிய தன் அவசியத்தைப் பற்றியும் பேசினார். அரபு சமாதானத் திட்டத்தின்படி 1967-போருக்கு முந்தைய எல்லைகள் அடிப்படையிலான இரு அரசுகள் தீர்வு அமல்படுத்தப்படுவதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீன உறவு சகஜமாவதற்கான ஒரே வழி. இவ்விவகாரத்தில் ஒபாமாவின் இரட்டை நிலைப்பாட்டை சோம்ஸ்கி தனது கட்டுரை ஒன்றில் அம்பலப்படுத்தியிருந்தார். இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடே துளியும் நேர்மையற்ற ஒன்று என்பதையும் சோம்ஸ்கி தொடர்ந்து தனது கட்டுரைகளில் அம்பலப்படுத்தி வருகிறார். அரபு சமாதானத் திட்டத்தை ஒபாமா ஏற்கவில்லை என்பதை அவருடைய மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் டென்னிஸ் ராஸ், ஒபாமா ஜனாதிபதியாகத் தேர்வான ஒரு சில நாட்களிலேயே தெளிவுபடுத்திவிட்டார். இஸ்ரேலியர்கள் விரும்புகிற வகையில் பாலஸ்தீனர்கள் தங்கள் உறவை இஸ்ரேலுடன் சகஜமாக்கிக்கொள்ள வேண்டும் என்பது தான் ஒபாமாவின் நிலை. இஸ்ரேல்-பாலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் பங்குபெறுவதை ஒபாமா ஏற்கவில்லை. ஆனால் ஹமாஸின் பங்கேற்பு இல்லாத எந்தப் பேச்சுவார்த்தையும் அர்த்தமற்றதாகவே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்படும் முடிவுகளையும் ஹமாஸின் ஒப்புதல் இல்லாமல் அமல்படுத்த முடியாது. நேர்மையாக நடந்த ஜனநாயகத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற ஹமாஸை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உட்பட எந்த மேற்கத்திய நாடும் அங்கீகரிக்கத் தயாரில்லை. பாலஸ்தீன மக்களின் தீர்ப்பிற்கு ஒபாமா அளிக்கும் மரியாதை அவ்வளவுதான்.
இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உறுதியளிக்கிறது என்பதையும் தனக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உள்ள உரிமையை அமெரிக்கா எப்போதும் ஆதரிக்கும் என்பதைப் பலமுறை வாய் வலிக்கக் கூறியுள்ள ஒபாமா இஸ்ரேலிடமிருந்து பாலஸ்தீனம் தினம் தினம் சந்தித்துக்கொண்டிருக்கும் ஆபத்தைப் பற்றி ஒருமுறையேனும் வாய் திறந்ததில்லை. இஸ்ரேலியர்கள் ஆபத்தை எதிர்நோக்க மட்டுமே செய்கிறார்கள் ஆனால் பாலஸ்தீனர்களோ ஆபத்துகளுக்கு மத்தியில்தான் உயிர் வாழ்கிறார்கள்’. ஜார்ஜ் ஜே மிட்செல் அவர்களை மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான தனது சிறப்புத் தூதுவராக ஒபாமா நியமித்துள்ளார். வட அயர்லாந்தில் அமைதி ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் மிட்செல். அயர்லாந்துக் குடியரசுப் படை தீவிரவாதத்தைக் கைக்கொள்வதற்குக் காரணமான, நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த அயர்லாந்து கத்தோலிக்க மக்களின் நியாயமான பிரச்சினைகளைக் களைவதில் பிரிட்டன் அரசு நேர்மையான முயற்சிகளைக் கொண்டதால் மிட்செல்லின் முயற்சி வெற்றியடைந்தது. ஆனால் பாலஸ்தீனப் பிரச்சினையில் அது சாத்தியமல்ல. ஏனெனில் இஸ்ரேல், அமெரிக்கா இரண்டுமே எள்ளளவு நேர்மையையும் இவ் விவகாரத்தில் கடைப்பிடிக்கவில்லை, இனி அப்படிப்பட்ட எண்ணமும் அவற்றிற்கு இல்லை என்பதைப் பலமுறை தெளிவாக்கியிருக்கிறார்கள்.
 
சமீபத்தில் இஸ்ரேலில் நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள் நிலைமை மேலும் மோசமாக இருப்பதையே காட்டுகின்றன. 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றமான நெஸட்டில் (Knesset) ஆளும் கட்சியான கடிமா (Kadima)  28 இடங்களையும் எதிர்க்கட்சியான லிகுட் (Likud) 27 இடங்களையும் வென்றுள்ளன. தேசியத் தீவிரவாதம் பேசும் கட்சியான இஸ்ரேல் பைட்டைனு (Yisrael Beiteinu) வுக்கு 15 இடங்கள். மூன்றாவதாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் கட்சி (Labour Party) 13 இடங்களைப் பெற்றுள்ளது. மதவாதக் கட்சியான ஷாஸ் (Shas) 11 இடங்களை வென்றுள்ளது. இவற்றில் ஸிப்பி லிவ்னி (Tzipi Livni)  தலைவராக இருக்கும் கடிமா சமாதானத்திற்காக ஓரளவு மட்டுமே விட்டுக்கொடுக்கத் தயார். கோட்பாட்டளவில் இரு அரசுகள் தீர்வை அது ஏற்கிறது. ஆனால் இதே கட்சிதான் 2006இல் லெபனான்மீதும் தற்போது காஸாமீதும் கடும் தாக்குதல் தொடுத்தது என்பதை மறந்துவிடக் கூடாது. லிகுட்டின் தலைவர் பெஞ்சமின் நேட்டன்யாகு (Benjamin Netanyahu) தீவிர வலதுசாரி. காஸா தாக்குதலை நீட்டிக்காது போனதற்காக ஆளும்கட்சியைக் குறை கூறுபவர். இஸ்ரேல் பைட்டைனு கட்சியின் தலைவர் அவிக்டோர் லிபர்மேன் (Avigdor Lieberman) ஒரு அதிதீவிர வலதுசாரி. காஸா, வெஸ்ட் பேங்க் பகுதிகளில் மேலும் குடியேற்றங்கள் தொடர வேண்டுமென்று கூறுபவர் இவர். பொதுவாக இஸ்ரேல் அரசியல் கட்சிகளில் வலது-இடது என்ற பிரிவினையே அர்த்தமற்றது. ஆனாலும் இன்றைய நிலையில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றியிருப்பதால் நேட்டன்யாகு ஆட்சியமைப்பதற்கே வாய்ப்புகள் மிக அதிகம். இது நிலைமையை இன்னும் மோசமாக்கும். நூரெம்பர்க் சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டால் போர்க் குற்றங்களுக்காக 1945க்குப் பிறகான அமெரிக்க ஜனாதிபதிகள் அனை வரும் தூக்கிலிடப்படுவர் என்று கூறினார் சோம்ஸ்கி. அதே சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டால் சந்தேகமேயில்லாமல் இஸ்ரேலின் அனைத்து ஜனாதிபதிகளும் பிரதமர்களும் ராணுவத் தளபதிகளும் தூக்கிலிடப்படுவர். முற்றுமுழுக்க அநீதியின் மீது கட்டப்பட்ட தேசம் இஸ்ரேல்.
 
பாலஸ்தீனப் பிரச்சினையாக இருந்தாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையாக இருந்தாலும் சர்வதேச அரசியலில் அதற்கான எதிர்வினை என்பது ஒன்றுதான். அதாவது, அரசுகள் மேற்கொள்ளும் தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பது, விடுதலை இயக்கங்களைக் கண்டிப்பது. சர்வதேச அரசியலில் ஒரே விதி மட்டுமே செல்லுபடியாகும், அது: ‘‘வல்லான் வகுத்தது வாய்க்கால்.’’ அதில் நீதி, நியாயம் எதற்கும் இடம் கிடையாது. ஒவ்வொரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையும் அந்நாட்டின் ‘‘தேச நலன்’’ அடிப் படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அறிவியல் தொழில் நுட்பம், உள்நாட்டுச் சட்டதிட்டங்கள் எனப் பல விஷயங்களில் மிகவும் முன்னேறியிருந்த ஒரு மக்கள் சமூகம் தனது சர்வதேச அரசியல் உறவுகளில் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதை எதிர்காலச் சந்ததியினர் நம்புவதற்கு மிகவும் கஷ்டப்படுவர். காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்ததுடன் நில்லாது வெனிசூலாவிற்கான இஸ்ரேலின் தூதுவர் ஷுல்மோ கோகென் அவர்களை வெனிசூலாவை விட்டு வெளியேற்றினார் ஹியூகோ சாவேஸ். பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தார்மீக அடிப்படையில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு இது. சர்வதேச அரசியலில் இது ஓர் அபூர்வத்திலும் அபூர்வமான, அசாதாரணமான நடவடிக்கை.
 
‘‘சில காலமாகவே, நான் உரையாற்றும் கூட்டங்கள் வெகு காலத்திற்கு முன்னமே தீர்மானிக்கப்படுகின்றன. சில சமயங்களில் எனது உரைக்கான தலைப்பைத் தரும்படி சில ஆண்டுகளுக்கு முன்னமே கேட்கப்படுகிறேன். அது போன்ற சமயங்களில் ஒரு தலைப்பு எப்போதும் பொருத்தமாக இருக்கிறது, அது: ‘‘மத்தியக் கிழக்கில் நிலவும் தற்போதைய நெருக்கடி’’. அந்த நெருக்கடி என்னவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு நெருக்கடி இருக்கும் என்பதைத் தாராளமாக யூகிக்க முடியும்’’ என்று தனது புத்தகத்திற்கு (Fateful Triangle)  1999இல் எழுதிய முன்னுரையில் சோம்ஸ்கி குறிப்பிட்டார். இன்னும் பல காலத்திற்கு அந்த நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது போலிருக்கிறது. இந்த யூகம் தவறாகட்டும்.

No comments: