தோழமையுடன்

Tuesday, July 12, 2011

பிரியாவிடை - சபீர்


சுஜாதாவும் அதே பிரியத்துடன் முத்து காமிக்ஸும் விழுந்து விழுந்து படிக்கும் சபீர் புதுகல்லூரியில் என் விடுதித் தோழன். படிப்பில் அதிபுத்திசாலி மாணவன். பல வருடங்களுக்கு பின் அருமையான கவிஞனாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அவன் தொடர்பு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கிட்டியது. 


    திண்ணையில் வெளியான சபீரின் "பிரியா விடை" எழுத்துகளால் வரைந்த சித்திரமாய் அந்த விமான நிலைய காட்சியை கண்முன் நிறுத்துகின்றது. இதயத்தை மயிலிறகால் வருடும் சபீரின் கவிதை இதோ:




பிரியா விடைகளும்
பிள்ளைகளுக்கு
முத்தங்களும்
என
வாழ்ந்து கொண்டிருந்தது
விமான நிலையம்

எட்டிய உயரத்தில்
கிட்டிய நெஞ்சில்
மகனை முகர்ந்தது
மூதாட்டி உம்மா

கடவுச் சீட்டு
அடங்கிய கைப்பை
முழங்கையில் தொங்க
கடைக்குட்டியை
கைகளில் ஏந்தி
வாப்பா
பயணம் சொல்ல
குழந்தை
தானும் வருவதாகச்
சொன்னது.

எல்லாச்
சொந்தங்களிடமும்
ஸ்பரிஷமோ
பாஷையோ
விடைதர…
புன்னகை போர்த்திய
முகச் சோகமும்
புர்கா மூடிய
அகச் சோகமும்
கலாச்சார நாகரிக
கட்டுக்குள் நிற்க
மனைவியின்
கண்கள் மட்டுமே
முழுப்
பெண்ணாகிப் போக…
எல்லா வினாக்களுக்கும்
ஒரே விடையாய்
மெல்லத் தோன்றி
துடைப்பதற்குள்
சிந்தியது
உள்நாட்டுக்
கண்ணீர்த் துளியொன்று.

பிரியமானவளைப்
பிரிய மனமின்றி
பொதிவண்டி தள்ளி
விதி எண்ணிப் போக
தானியங்கிப் படிகளில்
தடுமாறி
சுதாரிக்கும்போது
சிதறி விழுந்தது
வெளிநாட்டில் பிழைக்கும்
சபுராளி வாழ்க்கை!

நன்றி :திண்ணை

1 comment:

Anonymous said...

கண்கள் மட்டுமே
முழுப்
பெண்ணாகிப் போக…

சிந்தியது
உள்நாட்டுக்
கண்ணீர்த் துளியொன்று.

அருமையான கற்பனை.

அபு