தோழமையுடன்

Monday, July 11, 2011

தேநீர் கடையில் கடவுள்

கடவுளைத் தேடி தேநீர் கடைக்கு செல்லும் முன் முன்னோட்டமாக சில விசயங்கள் இருக்கிறது. அதை பற்றிய ஆரம்பத்தை பிரபல எழுத்தாளர் ஜெயமோகனிலிருந்து ஆரம்பிப்போம்.


"என் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத நிலையில் நான் எழுத ஆரம்பித்தேன்" என சொல்லுகின்றார்  ஜெயமோகன். நம்மை நாமே ஏற்றுக் கொள்ளும் Self Acceptance என்பது மானுடத்தின் தவிர்க்க முடியாத தேவை.

ஒரு மனிதனின் மனோ நலத்திற்கு தன்னை பற்றிய சரியான சுயமதிப்பு Self Value என்பது மிகவும் அடிப்படையானது.  என்னால் எனக்கோ, பிறருக்கோ எந்த பலனும் இல்லை என்ற தாழ்வான மதிப்பீடு தான் அவனை மன நோயாளியாக, சமூக விரோதியாக மாற்றுகிறது.  தன்னைத் தானே உயர்வாக நினைப்பதோ அகம்பாவியாக, கர்வியாக, கொடுங்கோலர்களை உருவாக்குகிறது.

இந்த சுயமதிப்பு எந்த அடிப்படையில் உருவாகிறது?

எனது படிப்பு, எனது வேலை, எனது திறமை, எனது குடும்பம், எனது உறவு, எனது தொடர்பு என நாம் நம்மை பற்றிய ஒரு மதிப்பீடு வைத்திருப்போம். இந்த என்னுடையது என்ற Possessiveness தான் நம் சுயமதிப்பீட்டின் அடிப்படை.


என்னுடையது என்ற Possessiveness தான் எல்லா பிரச்சனைகளின் அடிப்படை என்றால் என்னால் இந்த Possessiveness இல்லாமல் வாழ முடியுமா?

படிப்பு, திறமை, வேலை, குடும்பம், உறவு இவை எல்லாம் என்னுடயவை இல்லை என்றால் இயக்கமற்று போய்விடுவேனே. ஏன் என்னால் ஒரு Bio Data கூட தயாரிக்க முடியாதே? என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

படிப்பு, திறமை, வேலை, குடும்பம், உறவு இவை எல்லாம் இருப்பது உண்மை – reality அவைகளை இல்லை என சொல்லவில்லை. ஆனால் அவை உனக்கு ஒவ்வொரு வினாடியும் இறைவனால் வழங்கப்படும் இரவல் – அமானிதம் என்பது Reality of reality.

உண்மையின் உண்மை நிலை என்ன? என Reality of realityயின் பக்கம் நம் கவனத்தை அழைக்கின்றது ஆன்மீகம்.

ஒரு கப் தேநீர் பருகுகின்றோம். இதில் உள்ள reality என்ன?
பசுவிலிருந்து பால்.
மழையிலிருந்து  நீர்.
கரும்பிலிருந்து சீனி,
மலைத் தோட்டங்கள் தந்த தேயிலை.
கடை வரை கொண்டு வந்து சேர்க்க வழி நெடுக உழைக்கும் கரங்கள்.
நம் வாயருகே கொண்டு வந்து சேர்த்தது பையிலிருந்த பணம்.
இது reality.

இதில் Reality of reality என்ன?

வானம் பூமியில் உள்ள பொருள் அனைத்தும் இறைவனுக்கு சொந்தம்.

நம்முடைய கண் இமை அசைவு முதல் வானத்தில் பறக்கும் விமானம் வரை அனைத்தின் இயக்கங்களுக்கும் காரணமான சக்தி அனைத்தும் இறைவனுக்கே சொந்தம்.

நம்மில் காணப்படும் உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு இவை அனைத்தும் ஒவ்வொரு வினாடியும் அவனால் நமக்கு வழங்கப்படுபவை.

ஏன் நம் சொந்த இருப்பே அவனால் நமக்கு வழங்கப்படுபவை என்று சொல்கிறது இறைவேதம்.

தேநீர் கோப்பையை தூக்கி பிடித்து, வாயில் வைத்து உறிஞ்சி குடிக்கும் போது உடன் இருந்து புகட்டுபவன் அவன். 

நேசம் கொண்ட மக்கள் எங்கெல்லாம் இறைவனை தேடுகின்றார்கள்
கோயிலில் சிலர்,
சர்ச்சில் சிலர்,
பள்ளிவாசலில் சிலர்
இல்லை இல்லை வானத்தில் மட்டுமே என சிலர் இறைவனை தேடிக்கொண்டிருக்க அப்பாவி மனிதா! நான் இல்லாமல் நீ எந்த செயலையும் செய்ய முடியாது என்கின்றான் இறைவன்.

“நீ எங்கிருந்த போதும் உன்னுடன் இருக்கின்றேன்” என்கின்றான்.

“எக்காரியத்திலும் நீர் இருப்பதில்லை. இந்த வேததிலிருந்து நீங்கள் ஓதுவதுமில்லை. செயலில் நீங்கள் எதையும் செய்வதுமில்லை. நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும் போது நாம் சாட்சியாளர்களாக (ஷுஹூதன்) இருந்தே தவிர”   (10:61)  ஒவ்வொரு செயலிலும் நம் கூட இருக்கும் இறைவன் சும்மாவா இருக்கின்றான்.

“இறைவன் உங்களையும் உங்கள் செயல்களையும் படைத்தான்”.(37:96) ஏனெனில், சக்தி என்பதே இல்லை. இறைவனைக் கொண்டே தவிர (18:39) என்னும் வேத வரிகள் அதற்கு பதிலளிக்கிறது.

இப்ப சொல்லுங்க தேநீர் கடையில் நாம் தேநீர் அருந்தினாலும் இறைவன் நம்மோடிருக்கின்றானா? இல்லையா? இன்னும் திகைப்பா?

அமெரிக்காவிலிருந்தோ, ஜப்பானிலிருன்தோ வாங்கி வந்ததல்ல நம் மூளை.

நமக்கு அற்புதமான மூளையை கொடுத்தவனை பற்றி சிந்திக்க சில நிமிடங்கள் ஒதுக்கலாம் என்றால் இறைவன் இருக்கின்றானா? என்ற இந்த இடுகையையும் பார்வையிட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
ஷெய்க் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்)
Search Allah                              -     இறைவனைத் தேடு!
Reach Allah                               -     இறைவனை அடைந்து கொள்!
Love Allah                                  -     இறைவனை நேசி!
Live with Allah                            -     இறைவனுடன் வாழு!
Sacrifice yourself for Allah         -    இறைவனுக்காகவே வாழு!

என்னும் இறைக்காதல் வரிகள் கிடைப்பதற்கரிய என் ஞானாசிரியர் ஷெய்க் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) என்னும் மகத்தான இறை நேசரின் மணி வாசகம்.











1 comment:

sabeer.abushahruk said...

நூல் பிடித்த நடை. சற்று தடுமறினாலும் அனர்த்தம் கர்ப்பித்துவிடும் அபாயகரமான கரு. அறுமையாகக் கையாண்டிருக்கிறாய்.

நேரம் வாய்க்கும்போது உன் அத்தனை பதிவுகளையும் வாசிக்கத் தூண்டப்பட்டவனாக...