தோழமையுடன்

Wednesday, January 23, 2013

அழகிய முன் மாதிரி



Dr. Aaidh al-Qarni Most Prominent Salfi Scholar. He has Written Many of Books including "Don't Be Sad". this photowas taken Dr.Abdullah al Fadq's House in Jeddah On the day Of Meeladun Nawbi Function.


Fatwa from Dubai on celebrating the Mawlid

 நபிகள் நாயகத்தின் வரலாறு அடியானுக்கும், ஆண்டவனுக்கும் இடையே இருந்த திரைகள் விலக்கப்பட்ட வரலாறு என எழுத்தாளர் நாகூர் ரூமி  ஒரு நூலில் குறிப்பிடுவது எத்தனை அர்த்தம் பொதிந்த வாசகங்கள்.


மனிதனுக்கு இறைவனை பற்றி விளங்குவதில் எத்தனை எத்தனை திரைகள் உள்ளன. அவை இறைவன் போட்ட திரையல்ல. நமக்கு நாமே போட்டுக் கொண்ட திரைகள்.

அறிவு எனும் திரை.

அறிவால் வந்த அகந்தை எனும் திரை.

சிந்தனை எனும் திரை

சிந்தித்து மனம் செதுக்கிய கற்பனைகள் எனும் திரை.

பயம் ஒரு திரை.

பாவம் ஒரு திரை.

ஞானமற்ற பக்தி கூட ஒரு திரை.

மறைக்கும் ஆயிரமாயிரம் திரைகள்.

இவ்வாறு அகம் திரையான நிலையை 'இருளுக்கு மேல் இருள்' சூழ்ந்த நிலை என குறிப்பிடுகிறது இறை வேதம்.(24:40).

இந்த அகஇருளான நிலையை பார்வையற்ற நிலையாக உருவகப்படுத்தி,   

இம்மையில் (அகம்) குருடராக இருப்பவர்கள். மருமையிலும் குருடராக இருப்பார்கள் என்கிறது வேதம்.(17:72)

உலகின் அக இருளை நீக்க வந்த ஒளி விளக்குகள் நபிமார்கள். ஆதம்(அலை)... மூஸா(அலை), ஈஸா(அலை) என இறுதியாக முஹம்மது நபி(ஸல்).


இறை வேத வெளிச்சத்தை  உலகுக்கு வழங்கிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சிராஜுன் முனீர்'ஒளி பொருந்திய விளக்கு' என வர்ணிக்கிறது இறைவேதம்.

இறை நெருக்கமடைந்த அடியார்களை பற்றி குறிப்பிடும் போதுஅவர்கள் பேசும் நாவாக நான் ஆகி விடுகின்றேன். என்னைக் கொண்டே அவர்கள் பேசுகின்றார்கள்என்கின்றான் இறைவன்.

நபிகள் நாயகத்தின் நாவோ அவர்களின் இச்சைப்படி பேசியதே இல்லை. இறைவனின் பேச்சை  வெளிப்படுத்தும் நாவாகவே திகழ்ந்தது.

இதையே “கலாமே முஹம்மத். கலாமே ஹுதா” என கவிதையாய் சொன்னார்கள் சூஃபி ஞானிகள். (கலாம்: பேச்சு).

அந்த மகத்தான நாவு பேசப் பேச இருளின் திரைகள் அகன்றது.

அது நம்மை காட்சிபடுத்திக் கொண்டிருக்கும் இறைவன் எப்போதும் நம்முடன் இருக்கும் அந்தரங்கம் சொன்னது. 

பிடறி நரம்பை விட நெருக்கமானவனாக  இறைவனைக் காட்டித் தந்தது. 

அதனால் 'திரும்பும் திசை எல்லாம் அவன் திருமுகம்' என்ற வேத வரிக்கு  கோடிக்கணக்கான இதயங்கள் சாட்சியானது. 

இருளை இறையொளி மிகைத்து விட்டது.

இருள் நீக்கும்...
அல்லாஹ் நூர்.

முஹம்மது(ஸல்) நூர்.

குர்ஆனும் நூர்.

'நூர்' என்றால் ஒளி என்று பொருள்.

பிரபஞ்சத்தை தன் ஒளியால் காட்சியளிக்க செய்த அல்லாஹ் சுயமே சுயமான நூர்.

 வழிகாட்டும் வான்மறையும் நூர்.

முஹம்மது (ஸல்) எனும் ஒளிவிளக்கோ இறை ஒளியால் ஒளியேற்றப்பட்ட நூர்.


இறைவேத வெளிச்சத்தை  உலகுக்கு வழங்கிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சிராஜுன் முனீர்ஒளி பொருந்திய விளக்கு என்பது எத்தனை அழகிய உவமை!

அவர்களை படைத்தவனே சொன்ன உவமையல்லவா!

பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்க வந்த அந்த அருள் விளக்கை,

கோடான கோடி சூரிய, சந்திர நட்சத்திரர்களுக்கு  சுடர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் ஒளி விளக்கை,
 
அற்ப வாய்களால் ஊதி அனைக்க முடியுமா?

மூளையுடன் இதயமும் உள்ள மனிதர்களின் நாவு அவர்களை புகழாமல் இருப்பதில்லை.

அதற்காக நபிகளை இறைவனென்று யாரும் சொல்வதில்லை. அவர்கள் மனிதர் தான் . ஆனால் நம்மை போன்ற மனிதரல்ல. ஆகவே அவர்களின் வரலாற்றை நம் சுயம் சார்ந்த நிலை கொண்டு ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.

இதை என் குருநாதர் சம்ஸுல் ஆரிஃபீன் ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்) அவர்கள் ஓர் எளிய உவமையால்  விளக்குவார்கள்:

என் குருநாதர்  ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்)
அரசர் கஜினி முஹம்மது இரவில் மாறு வேடமணிந்து நகர்வலம் வருவது வழக்கம். அப்படி வரும் போது ஒரு இடத்தில் மூன்று திருடர்கள் கூடி திருடுவதற்கு திட்டமிட்டு கொண்டிருந்தார்கள். மாறுவேடத்தில் இருந்த அரசர் அவர்களை நெருங்கியதும் அவர்கள் ஓட எத்தனித்தனர். அரசர் அவர்களிடம் தான் அரசன் என்பதை மறைத்து,”ஓடாதீர்கள் நானும் உங்களைப் போல மனிதன் தான்” என குரல் கொடுத்தார். திருடர்கள் ஓட்டத்தை நிறுத்தி விட்டு அவர்களுக்குள் பேசிக் கொண்டார்களாம், “ அடடே இவரும் நம்மை போன்ற திருடன் தானான்டா” என்று.

ஆகவே நபியும்  மனிதர் தான் என்றாலும் நம்மை போன்ற மனிதரல்ல. மானிடத்தின் உச்சகட்ட மகத்துவம் அவர்கள் என்பதையும் மறக்கக் கூடாது.


அண்ணல் நபியை அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாகவேயன்றி நான் படைக்கவில்லை என படைத்தவனே புகழுகின்றான்.

"அவர்கள் புகழை - நினைவு கூறலை நாம் உயர்த்தினோம்" எனவும் கூறுகின்றான். 

இறைவனே நேசித்து புகழும் அவர்களின் ஆன்மீக அந்தஸ்து ஈடு இணை சொல்ல முடியா ஒன்று. 


இறைவனைப் போல சிருஷ்டிகளில் யாரும் இல்லை என்பது மட்டுமல்ல. இறையடியார்களில் நபிகளை போல் எந்த சிருஷ்டியும் இல்லை என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய உண்மை.


அகில உலகத்திற்கும் முன் மாதிரியாக வந்தவர்கள். அவர்களைக் கொண்டு பயன் பெரும் வழியை இறை வேதம் இப்படி கூறுகின்றது:

இறைவன் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, இறைவனை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக இறைத்தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்-குர்ஆன் 33:21)

'இறைவனை அதிகம் தியானிப்போருக்கு தான்' இறைத்தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது என்பதால் ‘தரீக்கா’ எனும் எல்லா இறைஞான பாதையிலுமே ‘இறைவனை அதிகமதிகம் தியானிப்பது’ அடிப்படை பாடமாக உள்ளது.

இறைவனை (இலாஹ்வை) நினைக்கும் போதெல்லாம் இறைத் தூதரும் (இரஸூலும்) நினைவு கூறப்படுகின்றார்கள்.

கலிமாவில்,

பாங்கோசையில்,

தொழுகையில்,

 சஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதர் தொழுதது போல் தொழுதார்கள். அவர்கள் நபியை நேரில் பார்த்து  பழகியவர்கள். உண்டது, உடுத்தது என ஒவ்வொன்றிலும் அல்லாஹ்வின் தூதர் செய்தது போல் செய்வதில் பேராவல் கொண்டவர்களாய் திகழ்ந்தார்கள்.

சுருக்கமாக சொன்னால் சஹாபாக்களைப் பொருத்த வரையில் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், அசைவிலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தங்கள் அகத்தில் உள்வாங்கினார்கள்.  தங்கள் குணங்களை மறைத்து ஒவ்வொரு செயலிலும் அண்ணலாரை பிரதிபலிக்கும் கண்ணாடியானார்கள். அதனால் உலகிற்கு ஒரு முன் மாதிரி சமூதாயம் கிடைத்தது.

அல்லாஹ்வின் குணம் தோய்ந்தவர்கள் பெருமானார்.

அண்ணலாரின் குணம் தோய்ந்தவர்கள் சஹாபா பெருமக்கள்.

சஹாபாக்களின் வழியே தாபியீன்கள் நபியை தங்களில் பெற்று கொண்டு பிரதிபலித்தார்கள். 

தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள்,


 இப்படி சங்கிலித் தொடராக  வந்த நல்லடியார்களான  ஒருவலியே முர்ஷிதை’கொண்டு பெருமானாரை நாமும் நம் அகத்தில் பெற்றுக் கொள்ள எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். ஆமீன்!

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா!

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக! ஆமீன். 


 

நன்றி : இஸ்மாயில் ஃபைஜி பஹிமிஷாஹ் னிமி

0 0 0 0




பெருமானார் குறித்து இஸ்லாமியரல்லாத அறிஞர்களின் பதிவுகள் இவை:



சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்ச்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த- ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ!” என வியக்கிறார் தாமஸ் கார்லைல் என்ற நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். – ( Thomas_Carlyle, Heroes_and_Hero_Worship)


 உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.என்கிறார்
 மைக்கேல் ஹார்ட். M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978, pp. 33)


மாகாத்மா காந்தியோ”அன்னாரின் (முஹம்மது நபியின்) நற்பண்புகளை பற்றி அறிந்த போது இப்பண்புகள் தான் இஸ்லாம் பரவுவதற்கு வழிவகுத்ததேயன்றி இஸ்லாம் வாளால் பரவவில்லை என்பதை உளப்பூர்வமாக அறிந்து கொண்டேன். அன்னாரின் வாழ்க்கை வரலாறு பற்றிய இரண்டு பாகங்களை படித்து முடித்த பின் அன்னாரின் கண்ணியமான வாழ்க்கை வரலாறு பற்றி மேலதிகமாக தெரிந்து கொள்ள முடியாமைக்கு மனம் வருந்துகின்றேன்” என குறிப்பிட்டார்கள்.(யங் இந்தியா).

மேலைநாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துகள் என்றும் மகத்தான சாதனை என்றும் கூருகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவன சோலையிலே நபிகள் நாயகம் அவர்களால் விதைக்கப்பெற்ற வித்துகளின் விருட்சங்களேயன்றி புதியது ஒன்றுமில்லை.
 - சரோஜினி நாயுடு 

நபிகள் நாயகத்தின் இவ்வையக வருகை அடக்கி ஒடுக்கப்பட்டோருக்கும், ஏழை எளியவருக்கும் ஈடேற்றம் பெற்றுத் தரும் வகையில் அமைந்தது. - சுவாமி விவேகானந்தர்

 பிறப்பால் உயர்வு தாழ்வு என்றிருந்த பேதமையை நீக்கி மனிதனை மனிதனாக வாழச் செய்து சமதர்ம சமுதாயத்தை நிலை நாட்டி மனித இனம் முழுவதும் ஒரே குலம் என்ற மகத்தான் நெறியை வகுத்துத் தந்த மாவீரர் முஹம்மதை வாழ்த்த வார்த்தைகளே இல்லை.
- டாகடர் அம்பேத்கார் 

உலக சீரமைப்பிற்கு மகத்தான சேவை செய்த  நபி மீது  நான் அளவிலா மரியாதை வைத்திருக்கிறேன்.
- குருநானக்
















உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: